வாழ்வியல் வசந்தங்கள்:உன்னை நீ முந்து
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வியல் வசந்தங்கள்:உன்னை நீ முந்து
பருத்தியூர் பால, வயிரவநாதன்
அரிைந்துரை
ஈழத்தைப் பொறுத்தளவில் பெரும்பாலும் நவீன இலக்கியங்கள் சார்ந்த நூல்களே அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. வருடம் தோறும் நடைபெறுகின்ற புத்தகச் சந்தைகளிலே அதிகம் விற்கப்படுகின்ற நூல்களுள் முதன்மை இடம் பெறுபவை வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அவசியமான இத்தகையதுால்களாகும்.ஈழத்தில் இத்தகைய நூல்களை எழுதுவேர் எண்ணிக்கையளவில் சொற்பமானவரே.
இவர்களுள் அமரர் நந்தி, கோகிலா மகேந்திரன், செ. கணேசலிங்கன்,குசோமசுந்தரம், நபிவலன்ரீனா,பிரான்சிஸ் ( தற்போது எழுதுவதில்லை) ஆகியோரே இவ்வேளையில் என் நினைவுக்கு வருபவர்களாவுள்ளனர். இந்நூலாசிரியரும் இந்நூலால் மட்டுமன்றி ஏலவே எண்ணற்ற கட்டுரைகளை எழுதியுள்ளமை காரணமாகவும் அத்தகையோர் வரிசையில் அடங்கக் கூடியவர் என்பதனை இந்நூலின் வரவு மறுபடி உறுதிப்படுத்துகின்றது!
மேலே குறிப்பிடப்பட்டது போன்று இந்நூலாசிரியரால் இவ்வாறு எழுதப்பட்டுள்ள எண்ணற்ற பத்திரிகைத் தொடர் கட்டுரைகளுள் பலதரப்பட்டகட்டுரைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன. இத்தகைய கட்டுரைகள் எமது வாழ்க்கையின் உயர்விறகு, வெற்றிக்கு உதவுவன, என்பதனை எடுத்துரைக்க வேண்டியது.அவசியமன்று. இங்கு பேசப்படும் விடயங்கள் பரந்த தளத்தில் அமைந்தவை, பரந்த பார்வைக்குட்பட்டவை, ஒன்றிற் கொன்று நெருங்கிய தொடர்புபட்டவை, நெருங்கிய தொடர்புபடாதனவும் சிலவுள்ளன!
ஆனால் அனைத்துமே முற்குறிப்பிட்டது போன்று வாழ்க்கையின் முன்னேற்றம் வாழ்க்கையின் உயர்வு என்ற நாரினால் தொடுக்கப்பட்டுள்ளன என்பதில் ஐயமில்லை!
முதற் கட்டுரை பயணம் பற்றியது. பயணத்தின் நோக்கங்கள், பயன்கள், நடைமுறைகள் பற்றி விபரிக்கிறது. இந்திய மேதை ராகுல்சங்கிருத்தியா "ஊர் சுற்றிப்புராணம்" என்ற நூல் எழுதுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயம் முதற் கட்டுரையாக விருந்தளிப்பது பாராட்ட வேண்டியதொன்றே
மற்றொரு கட்டுரையான "அனுபவம்" ஒர் விதத்தில் பயணத்துடன் தொடர்புபட்டது.ஆயினும் ஆழமும், விரிவுமான பார்வை கொண்ட விடயமாகவுள்ளது. ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியிலே அதன் முக்கியத்துவத்தை உணர்த்தப் போதுமானது
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்கின்ற பழமொழி சார்ந்த பிரிதொரு விடயமே உழைத்தல் உழைத்தலில் முக்கியம், உழைத்தலுக்கான தடைகள் என்றவாறு பல்வேறு விடயங்களும் இங்கு அலசப்படுகின்றமை பயன்மிகுந்தது.
வாழ்வின் எல்லாத் துறைகளுடனும் தொடர்பு பட்ட முக்கியமான விடயம் பற்றி கவனத்தை ஈர்த்து சிந்திக்கத் தூண்டுகிறது"கருத்துக்கள்”
வாழ்வின் பிறருடனான தொடர்புகளின் அனைத்து முயற்சிகளின் அடிப்படையாகவுள்ளதொரு விடயமாகவுள்ளது “கரிசனை”.
எஞ்சிய நான்கு கட்டுரைகளும் மேற்கூறிய விடயங்களில் இருந்து சற்று விலகியவையாகவுள்ளன.
"புன்னகை","வசீகரம்” ஆகியவை ஒரு விதத்தில் மனித ஆளுமை சார்ந்தவை. இத்துறை சார்ந்த கட்டுரை ஆசிரியர்களால் பெருமளவு கவனிக்கப்படாதவை. அவ்விதத்தில் வாசகர்களுக்கு
அவசியமானவை.
"அற்புதம்” மனித மனோபாவம் சார்ந்ததொரு உணர்வாகும் ஆயினும், கட்டுரையாளர் எமது வாழ்க்கை சார்ந்த பலவேறு விடயங்களுடன் அதனைத் தொடர்புபடுத்தி தமது எழுத்தாளுமையை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பன. படித்துப் பார்க்கும் போது தான் அறியமுடியும்.இக்கட்டுரையிலே உயர்திணைப்பொருளான மனிதரது சாதனைகளை அற்புதத்துடன் தொடர்புபடுத்தும்போது எனக்கு அஃதிணைப் பொருளான மின்னல் பற்றி கவிஞர் அ. ந. கந்தசாமியும் ( மின்னல் கணப்பொழுதில் தோன்றி மறைந்தாலும் உலகம் முழுவதும் ஒளிகொடுத்து சாதனைபுரிகிறது)
‘எறும்பு பற்றி இன்னொரு சிந்தனையாளனும் எதிரி அடிக்கும் போது இறுதி ஒரு கணப் பொழுது போராடியே மடிகின்றது கூறியமை இவ்வேளை நினைவிற்கு வருவதனை வாசகருடன் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை.
இதுவரை கூறப்பட்ட அனைத்துக் கட்டுரைகளிலிருந்தும் விலகியுள்ள"விளம்பரங்கள்” இன்றைய நவநாகரீக உலகு நோக்கி எம்மை ஆற்றுப்படுத்துகின்றது என்கின்ற விதத்தில் பெறுமதிமிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.
பேசப்படுகின்ற விடயங்கள் மட்டுமன்றி அவற்றின் எடுத்துரைப்பு முறை கூட , எமது கவனிப்பை ஆற்றொழுக்கு ஓட்டமும் கொண்டிப்பதாலும் உளப்பாட்டுத்தன்மைப் பன்மையிலும், முன்னிலைப் படுத்தியும் மெய்ப்பாட்டுணர்ச்சியை வெளிப்படுத்தியும் அமைவதனால் வாசிப்பார்வத்தை தூண்டுவதாகவும் அது விளங்குகிறது
சுருங்கக் கூறின் இவ்வகையான பெறுமதி மிக்க கட்டுரைகளை எழுதுவதனூடான உயர்ந்த சமூகப்பணிசெய்து வரும் இக்கட்டுரையாளர் நிச்சயம் பாராட்டுதலுக்குரியவரே. நான் முன் குறிப்பிடப்பட்ட இத்துறை சார்ந்த கட்டுரையாளர்களை விட இந்நூலாசிரியர் அதிக எண்ணிக்கையளவில் எழுதி வருகின்றார் என்றே தோன்றுகின்றது. தொடர்ந்தும் இத்துறையில் பயணிப்பதனூடாக அதனை மீண்டும் உறுதிப்படுத்துவாரென்று எதிர்பார்க்கின்றேன்.
மேலும் இந்நூலை ஆசிரியர் பருத்தியூர் பால, வயிரவ நாதன் எனது பழைய கால நண்பர் என்பதனால் பெருமைப் படுகின்றேன். அதேவேளை மேற்குறிப்பிட்ட அபிப்பிராயங்கள் அதனால் உருவானவை அல்ல என்பதையும் கூறத்தான் வேண்டும். நல்வாழ்த்துக்களுடன்
பேராசிரியர் செ.யோகராசா கிழக்குப் பல்கலைக்கழகம்.
நாம் மானிடப் பிறவியெடுத்து வாழும் இந்த உலகம் என்றென்றும் அமைதியாகவும், சமாதானமாகவும் அன்பும் அழகும் மிகுந்ததாகவும் இருந்தால் மானுடம் என்ற ஒப்புயர்வில்லாத மிகுந்த சக்தி வாய்ந்த இந்த மூளை எத்தனை எத்தனை அற்புதங்களையெல்லாம் படைத்து இப்பூவுலகைச் சுவர்க்க பூமியாகப் பரிணமிக்கச் செய்து விடும்! மனித மூளை இன்றுவரை நான்கு வீதமே பயன்படுத்தப்படுகின்றது.ஏனைய பகுதி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லையென்கிறது விஞ்ஞானம். எனினும் இன்றைய நிலைப்படி இப்பூவுலகில் சுவர்க்கத்தைக் காணும் ஓர் உயர்ந்த கற்பனைக்கெட்டாத நிலையை உருவாக்கி அதனை நாம் மனக் கண்ணால், கற்பனையால் உணர்ந்து பார்க்க முடியுமேயன்றி நிஜத்தில் இந்நிலையைத் தரிசிக்க முடியுமா?.?
ஏன் முடியாது மனிதன் முயன்றால் முடியாது என்ற ஒன்று உண்டா? முடியாதது எது? என்ற கேள்விக்கு விடையாகவே பருத்தியூர் பால, வயிரவநாதன் மிக ஆறுதலாகவும் ஆழமாகவும் தெளிவாகவும் சிந்தித்து "வாழ்வியல் வசந்தங்கள்" என்றொரு நூலை ஆக்கி வெளிக்கொணர்ந்துள்ளார்.
புன்னகை
அனுபவங்கள்
உழைத்தல்
வசீகரம்
கருத்துக்கள்
விளம்பரங்கள்
கரிசனை
அற்புதம்
எனப்பலவாறான தனித்தலைப்புக்களில் கட்டுரைகள் இன்றைய மானுடத்தை விளித்துப் பேசுகின்றன. இத்தகைய எனப்பலவமான கருத்துக்கள், ஒழுக்கநெறிகள் ஒளவையார், திருவள்ளுவர் போன்ற அறிஞர்களலும் அனுபூதிமான்களாலும் இன்னும் பல நூற்றுக்கணக்கான பெரியோர்களாலும் மக்கள் நலங்கருதிச் சொல்லப்பட்டாலும் இவற்றைப் பற்பல தடவைகளில் அழுத்திக் கூறுவது மக்களை மாணிக்கங்களாக்கும் நோக்குடனேதான். சில விடயங்கள் மந்திரங்கள் போல திரும்பத் திரும்பச் சொல்லி வைக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
இக்கட்டுரைகளைப் பொறுத்தளவில் இவை ஒவ்வொன்றும் பள்ளிமாணவர்கள் கூட, தாமாகவே வாசித்து விளங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு விஷயமும் எளிய மொழி நடையிலும் காலத்துக்கேற்ற வகையிலும் கூறப்பட்டிருப்பது நூலின் முக்கியத்துவத்துத்திற்கு அணி சேர்க்கின்றதெனலாம்.
சமூதாயச் சிந்தனையும் மக்கள் மேம்பாட்டில் மிக்க அக்கறையும் கொண்ட பால, வயிரவநாதன் தனது எண்ணங்கள், கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமே என்ற பிடிவாதத்தில் அவை எப்படிச் சொல்லப்பட வேண்டும் என்ற முறைபற்றிகருத்துக்கள் என்ற தலைப்பிடப்பட்ட அதிகாரத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார். “கருத்துக்கள் சிறப்பானதாக இருக்குமிடத்து அவை மக்களிடம் சென்றடைவதற்கான வழி முறைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.”
அமைதியாக, தெளிவாக, நேயப்பாட்டுடன் எவ்வித திணிக்கும் முயற்சியின்றி,
உங்கள்கருத்துக்களை வெளிக்கொண்டுவாருங்கள். உங்களைப் பிறர் ஏற்கும் பக்குவம் பெறுவதற்குப் பொறுமை மிகவும் அவசியமானது. எமக்குத் தெரிந்த சீரிய நுட்பமான விஷயங்களை மற்றவர்களுக்கத் தெரியப்படுத்துதல் ஒரு சமூக நலகைங்கரியமாகும்
தனது நூலில் குறிப்பிட்டுள்ளது போன்று சமூகநலக் கைங்கரியமாகத் தனது கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமென்ற ஆவலில் சமூகமேம்பாட்டிற்கான கருது கோள்களை வித்திட்டுள்ள பால, வயிரவநாதனை வியந்துபாராட்டுவதோடு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்.
எனது உரை புன்னகை, பொன்னகையை விடப் பெருமை வாய்ந்தது. புன்னகை புரிதல் அன்பின் வெளிப்பாடு.உதட்டோரம் மெல்லென விரிந்து பூக்கும் புன்னகை மனதின் மென்மையில் இருந்து புறப்படுகின்றது.
துன்பம் சூழும் போது புன்னகை பயணிக்க மறுக்கின்றது. எனினும் துன்பத்தைத் தூளாக்க அன்புடன் காட்டும் புன்னகை பிறரை ஈர்ப்பதால் அதனால் நீங்களும் வசீகரிக்கப் படுகின்றீர்கள்.
எவரையும் வசீகரிக்கும் மகாவலிமை உங்கள் அன்பான இதயத்துக்கு உண்டு.
கள்ள மனத்தினருக்கு வசீகரம் விடைபெறும். ரசனையற்ற, மரத்துப் போன நெஞ்சினை வசீகரம் தொட்டுக் கூடப் பார்க்காது. கலைஞர்களைக், கவிஞர்களை மக்கள் அவர்களின் ரசனைமிகு படைப்புக்களாலேயே அவர்கள் வசமாகின்றனர்.
உள்ளத்தில் நிறைவையூட்டும் மகான்கள் தூய்மையாக வாழ்ந்தமையினாலேயே போற்றப்படுகின்றனர். எனினும் ஏமாற்றுக்கார ஆசாமிகள் ஈற்றில் கோமாளிகளைப் போல் கருதப்படுவார்கள்.
இன்று விளம்பரங்களால் உண்மைகள் மறைக்கப்படுகின்றன ஆயினும் நல்ல பொருளுக்கும் விளம்பரம் தேவைப் படுகின்றது . அர்த்தமற்ற போலிக் கருத்துக்களை ஆரவாரத்துடன் வெளியிடும் உலகில் மெய்மையைத் தேடுக.
மனதில் விஷத்தைப் பாய்ச்சும் இன,மத பேதக் கருத்துக்களால் சமூகங்கள் சிதைக்கப்படுகின்றன.
பொய்யான கருத்துக்களுக்கும் புனுகு தடவப்படுவதால், சமூக அவலங்கள்தொடர்ந்து நடைபெறுகின்றன.
வாழ்க்கைப் பயணங்கள் எங்கே போகின்றன? சுமக்கும் பூமிக்குத் துரோகம் செய்கின்ற உலகம் இயற்கையை அதன் போக்கில் விடாமல் தடைசெய்வதால் சொகுசான இயல்பு வாழ்க்கை விரைவில் விடைபெறலாம் என்பதை நாம் உணர வேண்டும்.
அற்ப நலனுக்காக நீண்ட எதிர்கால நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.இந்த உலக ஷேமத்தில் கரிசனைகாட்ட வேண்டும்.
தனி மனிதன் ஒவ்வொருவரது துன்பங்களை எங்களுக்கானது அல்ல என எண்ணுவதாலேயே எல்லோரும் முடிவில் தனிமைப்பட்டு அல்லலுறுவதற்கான வழிகளைத்தாமே சமைக்கின்றார்கள்.
உயிர்கள் மேல் கரிசனை காட்டுக என எல்லா மதங்களும் சொன்னாலும் பொல்லாத மனிதன் கேட்பதாயில்லை
ஆணவச் செருக்குடன் உயிர்களை உருக்கும் ஆயுதம் படைக்கும் அரசுகள் மக்கள் மீது கரிசனை கொண்டா காரியம் மாற்றுகின்றன? í
பொருளில் ஆதாயம் எமக்கே மட்டும் என எண்ணும் என்பதால் சுரண்டும் நாடுகள் அரசியல் சூதில் சர்வவல்லமையுடன் காய்களை நகர்த்துகின்றது.
மனிதாபிமானம் அற்றால், உலகின் சிருஷ்டிகளுக்கே அர்த்தமின்றி போய்விடும். ஒருவரை ஒருவர் நேசித்து இணைந்து வாழ்ந்தால் அவனி அழகு பெறும்.
எழிலான பூமி இது அழகான மனங்களால் மென்மேலும் அழகுசெய்வோம்!
இறைவனின் அற்புதப் படைப்பினை வியந்து போற்றுதல் செய்வோம். எல்லா படைப்பும் அவை, அவை நிலையில் மெத்த அழகுதான். விரிந்த பார்வையில் சகலதையும் நோக்குவோம்.
தெரிந்த கருத்துக்களேயாயினும் அதனைச் சொல்லும் போது விருந்துண்ட திருப்தி ஏற்படுகின்றது. கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படும் போது பல விடயங்கள் புரிகின்றன.இனி அணிந்துரை, மதிப்புரை, நல்கிய அன்புள்ளங்கள் பற்றி உங்களுடன் சில வார்த்தைகள்!
எனது இளமைக்காலத்தில் ஒரு அற்புதக் கவிஞனைக் கண்டேன். மென்மையும், கனிவும் கொண்ட் சின்னஞ்சிறு அழகனாகத்தெரிந்தான்.
இன்று இவன் எனச் சொல்ல மனம் அஞ்சுகின்றது. மெத்தப் படித்த பெரிய பேராசான் ஆகிவிட்டார். அவர் வேறு யாருமல்ல என் இளமைத்தோழன், பேராசிரியர் செ.யோகராஜா என்றும் அன்பானவர்.
சின்னவயதிலேயே அழமான கவிதை புனையும் வல்லவராகத் தெரிந்தவர். பின்னர் ஆசிரியராகி, விரிவுரையாளராகி, இளவயதிலேயே கலாநிதியாகிப்பின்னர் பேராசிரியராகிவிட்டார்.
நான் இவர் பற்றி எனது நண்பர்களுடன் பேசும் போது நானே அவரது பதவியைப் பெற்றவன் போல் பெருமிதம் கொள்வதுண்டு.
அத்துடன் பழகியவர்கள் எம் எதிரே உயர்ந்துநிற்கும் போது நண்பர்களுக்கும் ஒருகர்வம் வந்தால் அதில்ஏதுவியப்பு?
பேராசிரியர் செ.யோகராசா பற்றிப் பேராசான் திருகார்த்திகேசு சிவத்தம்பிஐயா, என்னுடன் பேசும் போது நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ள சிறந்த திறன் ஆய்வாளன், செறிவானவர் எனக்குறிப்பிட்டார்.
இன்று இந்தியா, மலேசியாஎன பல நாடுகளுக்கு தமிழ் இலக்கிய மகாநாடுகள் தொடர்பாகச் சென்றுவருகின்றார்.
மேலும் எமது நாட்டின் பல்வேறுபகுதிகளுக்கும் சிரமம் பாராது சென்று இலக்கிய, சமய தலைமையுரைகள், விமர்சன ங்கள், திறனாய்வுகளை நடாத்தி வருகின்றமையை நாம் அறிவோம்.
ஆழ்ந்த தமிழ்பற்றும் தமிழ்இலக்கிய தேடல்களிலும் குறிப்பாக இன்று புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஊக்குவிக்கும் பணிகளையும் செய்து வருவதுகுறிப்பிடத் தக்கது.
இவரது பல ஆக்கங்கள் எமது தினசரிகள், சஞ்சிகைகளில் தொடர்ந்து வெளிவருகின்றன. மேலும் திறனாய்வு தொடர்பான நூல்கள் மற்றும் தமிழ் இலக்கியநூல்கள் என்பன வற்றினை வெளியிட்டுயுள்ளார். தொடர்ந்தும் ஆக்கபூர்வமான பணிகளில் தம்மை ஈடுபடுத்தி உழைக்கும் மிகநல்ல அன்பான நண்பர். என்மீது பேரன்பு கொண்டு அளித்த அணிந்துரை எனக்குத் திருப்தியளிக்கின்றது
மறைந்த பிரபல எழுத்தாளரும் இந்து சமய சமூக நலப்பணியாளருமான சோமகாந்தன் ஐயாவைத் தெரியாதவர் எவருமில்லை. இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளில்,புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர்.
இவர் தம்மை நாடி வரும் எவரையும், மதித்து அவர்க ளுக்கு எத்தகைய உதவிகளையும் செய்யத் தயங்காத உன்னத ஜீவன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் பல்வேறு பொதுநல மன்றங்களிலும் ஆலோசகராகவும், பிரதம அங்கமாகவும் திகழ்ந்தவர்சோமகாந்தன் ஐயா அவர்கள்.
இவரது மனம் போல் இவரும் அழகு, பேசும் முறையும் அழகு, எல்லோருக்குமே இவர் செறிந்த அறிவு மனிதராகத் திகழ்ந்தார். எங்கும் இவரது ஆளுமை நண்பர்களுடன் இணைந் திருந்தது. ஐயா அவர்கள் இந்து சமய கலாசார திணைக்களத்தில் நிர்வாக உத்தியோகராகக் கடமையாற்றியவர். இங்கிருந்தே இவர் ஓய்வுபெற்றவர்.
இதன் பின்னர் நான் இதே திணைக்களத்திற்கு இட மாற்றம் பெற்று அவர் இருந்த அதே இருக்கையில் இவரது கடமைகளைச் செய்தமையை இறைவன் எனக்கு அளித்த பெருமையாகவே கருதுகின்றேன்.
தமது அன்புக் கணவரின் சீரிய வழியிணைப்பின்பற்றியே இலக்கியப் பணிபுரிந்து வரும் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் ஒரு தீவிர பெண்ணியவாதியாவார். இவை தொடர்பான கட்டுரைகளை எழுதி வருபவர். அது மட்டுமல்ல சிறுகதைக ளையும் இலக்கிய ஆக்கங்களையும் எழுதி வருவதை நாம் அறிவோம்.
நல்ல பேச்சாளரான இவர் அயராது உழைக்கும் முன்னணி இலக்கிய உழைப்பாளி.
இந்த கருத்தொருமித்த தம்பதிகளின் அன்பு எனக்குக் கிடைத்தது. தொடர்ந்தும் இந்த நட்பின் பயனாக எனது நூலிற்கான முகவுரை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
எனது பேரன்பிற்குரிய வாசகர்களின் அன்பின் நிமிர்த்தமே எனது நூல்களின் தொகுப்புக்களை வெளியிட ஆர்வத்தினை ஏற்படுத்தியது.
இந்த நூலின்ஆக்கங்களுக்கு உறுதுணையாக நிற்கும் திரு.எஸ். சிவபாலன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும் இவரது அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட்லிமிடட் நிறுவனங்கள் மென்மேலும் வளர்ச்சியடைய எனது வாழ்த் துக்கள். எனது பணிக்கு துணைநிற்கும் தோழர்களுக்கும் பாசமுடன் என்றும் எனது அன்பினைத் தெரிவிக்கின்றேன்.
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால,வயிரவநாதன்
"மேரு இல்லம்" 36-2/1 ஈ.எஸ் பெர்னாண்டோ மாவத்தை,
கொழும்பு06.
தொ.பே இல-011-2361012
O71-4402303
O7743 18768
நூலாசிரியர் பருத்தியூர் பால, வயிரவநாதன்
எழுதி வெளியிட்ட"வாழ்வியல் வசந்தங்கள் நூற் தொகுதிகள்
உண்மை சாஸ்வதமானது
சுயதரிசனம்
கோழைகளாய் வாழுவதோ?
ஞானம்
கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதில் சாதனை செய்!
சும்மா இருத்தல் உண்மைகள் உலருவதில்லை!
உண்னோடு நீ பேசு!
நான் நானே தான்!
வெறுமை
காதலும் கடமையும்
அக ஒளி
உன்னை நீ முந்து!
சுயபச்சாதாபம்
மெளனம்
மரணத்தின் பின் வாழ்வு
சிந்தனை வரிகள்
சமர்ப்பனம்
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
- ஆசிரியர்
பொருளடக்கம்
01) தலைப்பு பக்கம்
02) புன்னகை
03) உழைத்தல்
04) வசீகரம்
05) கருத்துக்கள்
06) உன்னை நீ முந்து
07) விளம்பரங்கள்
08) கரிசனை
09) அற்புதம்
10) அன்பான தம்பதியினரைப் புறத்தாக்கங்கள்
பற்றுவதில்லை!
11) ஆராயாது நடந்தேறும் திருமணங்கள் பாதிப்புக்கள்.
12) எல்லோரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம்
13) நல்ல கணவனின் தெளிவுக்கு அவசியமானவை
14) மாறிடும் மனதை மாற்றிச் சீராக்குக!
15) உறவுகளை உதறக் கூடாது
16) இல்லங்கள் ஆலயங்களாக வேண்டும்
சுற்றிச் சுழலும் பூமியில் நாம் அத்தனைபேரும் பயணிகளே. இறைவன் தந்த பூமிப்பயணம் ஆபத்தற்றது. பயணங்களை மேற்கொள்வதால் உலக மக்களுடன் அந்நியோன்யமான உறவை வலுப்படுத்தமுடியும். மனிதன், தனது நாட்டின் கலை, கலாசாரத்தை மட்டுமன்றி, உலக மக்கள் அனைவரதும் கலாசார பாரம் பரியத்தினை அறிந்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும். அனைத்து இன முகங்களைத் தரிசிப்பதால் வேற்றுமை களைந்த உலகைப்படைக்க இயலும் என்பதே இறைவனின் விருப்பமுமாகும். பயணங்கள் சுக அனுபவங்களாகட்டும்!
நாங்கள் எல்லோருமே உலகம் என்கின்ற மிகப் பெரிய பேரூந்தில் கட்டணம் எதும் இன்றி பயணித்துக் கொண்டிருக்கும் நித்திய பயணிகளாவோம். இந்தப் பேரூந்தின் சாரதி இறைவன் தான். தன் அருட்பார்வையினால் இதனைச் செலுத்திக் கொண்டிருக்கின்றான்.
இந்தப் பயணத்தில் பயம் எதுவும் பயணிகளுக்கு இருப்பதில்லை காரணம் இதனைச் செலுத்துபவர் கருணை மிகு சக்தியும், ஆற்றலும் மிக்கவராவார்.
இந்தப் பூமிப்பந்து உருண்டோடிக் கொண்டு இருக்கும் போது எதனுடனும் மோதி வீழ்வது கிடையாது. அத்துடன் வேறு கிரகங்கள், நட்சத்திரங்களுடன் மோதி விபத்துக்குள்ளாவதுமில்லை. குறித்த நேரத்தில் குறித்த பாதையில் விலகாது வழுவாது இந்தப் பயணம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பாதுகாப்பான சுகானுபவமான பயணத்தைவிடச் சிறந்த பயணம் பிறிதொன்றில்லை. வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கைப் பயணம் அலுப்புத்தராத என்றும் இனிமை துய்ப்பதாகவே இருக்கும்.
இந்த உலக வாழ்வில் நாம் ஒரே மாதிரியான மனோ நிலையிலா பயணித்துக்கொண்டிருக்கின்றோம்? ஒவ்வொருவரது நடத்தைகள், பண்புகள், வாழ்க்கை அனுபவங்கள் இன்ப துன்பங்களின் தாக்கங்களுக்கேற்ப வாழ்நாட்கள் கழிந்துகொண்டேயிருக்கின்றன.
பரந்த இந்த உலகினுள்ளே எத்தனை நாடுகள். எத்தனை விதமான மக்கள் கூட்டம், சமுத்திரங்கள், மலைகள், நதிகள், வனாந்திரங்கள், காடுகள் அதனுள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஜீவன்களுமாக என எத்தனை எத்தனை படைப்புக்களை இறைவன் இட்டு நிரப்பி வைத்துள்ளான். எல்லாவற்றின் வாழ்வு முறைகளுமே வித்தியாசமானவை என்பதிலிருந்து இறை படைப்பின் விசித்திரத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம் அல்லவா?
உயிர்கள் அனைத்துமே இறைவன் பார்வையினுள் இருப்பினும் ஒவ்வொன்றுமே தமக்கென ஆற்றல்கள், செயல்களை வகுத்து வாழ்கின்றன. இவைகளின் வாழ்வுக்கு ஏற்ற வழிகளை அவைகளின் புலனுக்கு ஏற்ப வடிவமைத்து முள்ளான். எனவே வாழ்க்கையை உண்டாக்கியவனே வாழும் வழியையும் சமைத்தான். நாமாக முரண்டுபிடிக்காமல் எம் இஷ்டப்படி கண்டபடி வாழமுற்பட்டால் துன்பப் படுவதும், திசைமாறுவதும் தவிர்க்க முடியாததாகும்.
மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் என்ன மதம், என்ன இனம், மொழி என்பதுக்கு மேலாக "நாம் மனித இனம்” என்பது மறுக்க இயலாதது. எனவே நாம் ஒவ்வொருவருமே மக்களை நேசிக்க, அவர்களுடன் பழகி உறவாட“பயணங்கள்”முக்கியகாரணியாக இருக்கின்றமை கண்கூடு.
நாம் ஒருவரை ஒருவர் புரிந்து அவர்களது கலை, கலாசாரம் மொழி, மதங்களைக் கெளரவிக்கப் பழகினால் அன்புணர்வு எம்மிடையே மேலோங்கி விடுமன்றோ! மேலைத்தேய நாடுகளைச் சார்ந்தவர்கள் தமது உழைப்பின் ஒரு பெரும் பங்கினை பயணங்களில் ஈடுபடுத்துதற்கே செலவிடுகின்றனர். அவர்களும் அவர்களின் நாட்டின் அரச அதிகாரிகளும், சகல நாட்டின் நிலவரங்களையும் நேரிடையாகச் சென்று பார்த்து வருவதும் அத்துடன் ஆயிரவருதஷ் தொடர்பு சாதன வளங்கள் மூலம் ஏற்படுத்திக்கொண்ட பாரிய முயற்சிகளாலேயே தங்களையும், தமது நாட்டி னையும், கல்வி, விஞ்ஞானம், கலை, இலக்கியத் துறையில் மேம்படுத்திக் கொண்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று சுற்றுலாவிற்கு வரும் உல்லாசப் பயணிகளில் பெரும் பாலானோர் மேலைத் தேசத்தவராகவே இருக்கின்றனர். உலகைச் சுற்றிப் பார்க்கும் வேட்கை என்பது நாட்டு வளங்களை மட்டும் பார்த்துக் கொள்வதற்காக அல்ல. மக்கள் மனங்களையும் அவர்களது கலாசாரப் பண்புகளையும் பார்த்து அறிவதற்கேயாகும்.
எம்மில் பலரும் உலக நாடுகளின் பண்டைய சரித்திரங்களைப் பார்க்க அவாவுறாது இருக்கின்றார்கள். எங்கள் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள். அவர்கள் மூலம் கண்ட படிப்படியான சமூக வளர்ச்சிதானே இன்று நாம் நவநாகரீக உலகில் விஞ்ஞான, தொழில்நுட்பத்தில் மேம்பட்டு இருப்பதற்கான மூல காரணமுமாகும், என்பதனை உணர்ந்து கொண்டாலே போதும் உலகை வலம் வருவதற்கு ஆசைப்பட்டவர்களாகிவிடுவர்.
நாம் ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழன்று, சுழன்று வாழ்வதால் முன்னேறிவிட முடியுமா? புராதனப்பெருமை பேசி மகிழும் நாம் எமது கலாசாரம் நாகரிக காலத்தின் பின்பு தோன்றி வளர்ச்சி கண்ட நாடுகள் எவ்வாறு அதீத முன்னேற்றங்கள் கண்டன என்பதைச் சற்றுச் சிந்தித்தேயாக வேண்டும்.
இன்னமும் கூட நம்மில் பலர் தங்கள் பக்கத்துத் தெருபற்றித் தெரியாமல் இருக்கின்றார்கள். என்னிடம் ஒரு பெரியவர் கூறினார். "தனது கிராமத்தில் இருந்து பன்னிரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள தலை நகருக்கே கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சென்றதில்லை" என்றார். இதனைப் பெருமையுடன் வேறு பேசிக் கொண்டார். இத்தகைய எண்ணம் கொண்டோர் தொலை தூரப் பயணம் மேற்கொண்டு உலகம் சுற்றிப் பார்க்கவா பிரியப்படப் போகின்றார்கள்!.
எங்களில் எத்தனைபேருக்கு இலங்கைத் தீவு பற்றித் தெரியும் சொல்லுங்கள்! மலைநாட்டைச்சேர்ந்த பலருக்கும் கடல் என்றால் என்னவென்றே நேரிடையாகப் பார்த்த தேயில்லை. அதுபோலவே கடற்பிரதேசங்களில் வாழ்பவர்களில் பலருக்கு மலைநாடு நீர்வீழ்ச்சிகள் அதன் வனப்புறு அழகு பற்றி அறவே தெரியாது. திரைப்படங்களை மட்டும் பார்த்துத் திருப்திப்படுவதுடன் சரி அனுபவபூர்வமான நேரிடையான களிப்புணர்வுக்கு முன் வெறும் நிழல் உருக்களைக் கண்டால் ஏது திருப்தி ஐயா?
இன்று எமது நாட்டில் ஏற்பட்ட, தற்போதும் உள்ள அசாதாரண நிலை காரணமாகப் பயணங்களை மேற்கொள்வதில் சில பிரச்சினைகள் உள்ளன. முன்னர் பாடசாலைகளில் மாணவர், ஆசிரியர்கள் சுற்றுலாப் பயணங்களை பாடசாலை விடுமுறை காலங்களில் மேற்கொண்டுவந்தனர். தற்போது சுற்றுலா மேற்கொள்வதும் சற்றுக்கடினம். தவிர பயணச்செலவுகள் கட்டுக்கடங்காதபடி அதிகரித்துவிட்டன.
எமது முன்னோர்கள் தல யாத்திரைக்காக பயணம் செய்வார்கள். உண்மையில் இவர்கள் இறைவழிபாட்டிற்குச் சென்றாலும் கூட செல்லும் தலங்கள் தோறும் உலக மக்கள் பலரையும் ஒருங்கே சந்திக்கும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். கோவிலைத் தரிசிக்கும் பக்தர்கள் பல்வேறுபட்ட ஊர் தலை நகரங்கள் பட்டினங்களை நேரிடையாகப் பார்ப்பதுடன் வழியில் உள்ள கோவில்கள்,முக்கியமான சரித்திரப் பிரசித்திபெற்ற இடங்களையும் கண்டுகளித்தார்கள். தல யாத்திரையை முற்காலத்தில ஒருதடவை என்றாலும் தாங்கள் சென்று வந்தேயாக வேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையுடன் வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால் சிலர் பயணங்களை வெறும் கேளிக்கைக்காக மட்டும் எனக் கருதிவருகின்றனர். வெளிநாடுகளுக்கு உல்லாசமாகச் சென்று கேளிக்கை விளையாட்டுக்கள் பண்பாட்டிற்கு ஒவ்வாத சிற்றின்பத்தினுடனான மனதையும், தேகத்தையும் பாதிக்கும்செயல்களில் ஈடுபடுவது லஜ்ஜைக் குரியவொன்றாகும்.
முற்காலத்தில் பயணிப்பது என்பதே சிரமமான காரியமாகும். தற்காலத்தில் இந்நிலை இல்லை உலகமே ஒருசின்ன உருண்டை போலாகிவிட்டது. அதிசீக்கிரமாகவே நினைத்த இடத்திற்குச் சென்றுவர நவீன போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன.
உலக நாடுகள் சிலவற்றின் வருமானம் உல்லாசத் துறையிலேயே தங்கியுள்ளன. இங்குள்ள மக்களில் அனேகர் உல்லாசத்துறையை நம்பியே தம் சீவியத்தை யோட்டுகின்றனர். அங்குள்ள மக்களின் கணிசமான வருமா னங்கள் இப்பணிகள் மூலமே பெற்றுக் கொள்கின்றார்கள். இயற்கை அழகு மிளிரும் நாடுகள் வெகு சுலபமாக உல்லாசத்துறையை வளர்த்து பணம் சம்பாதிக்கும் திறனை கலையை வளர்த்து நிற்கின்றன.
மாறுதலான சூழ்நிலைகளை வாழ்க்கையில் மனித மனம் நாடுவதுண்டு. மன இயல்பு பாதிக்கப்பட்ட சிலருக்கு வைத்தியர்கள் எங்காவது நல்ல சூழ்நிலையில் இடம்மாறி இருந்து பாருங்கள் எனச் சொல்வதுண்டு.
சலிப்பு, வெறுப்புணர்வு என எமக்குள் ஒரு விரத்தி ஏற்பட்டால் எங்காவது நல்ல பொழுது போக்குகளில் ஈடுபட்டால் என்ன என நாம் எண்ணுவதில்லையா? தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியிடங்களுக்குப் பயணிப்பதனால் மன இறுக்கம் குறைந்து விடுவது இயற்கை. சதா தொடர்ந்தும் கடமையாற்றிவருபவர்களுக்கு உடல் உளரீதியாகத் தாக்கம் ஏற்படுவது இயற்கையாகும்.
அரசாங்க நிறுவனங்களாகட்டும், தனியார் நிறுவனங்களா கட்டும்,ஊழியர்களுக்கு ஓய்வு விடுமுறைகள் வழங்கப்படுவதன் நோக்கமே அவர்கள் தமக்குரிய விடுமுறைகளைச் சந்தோஷமாகக் கழிப்பதற்காகவேயாம். சில சந்தர்ப்பங்களில் நோய் காரணமாக அலுவலர்கள் ஓய்வு விடுமுறைகளைக் கழிப்பதுண்டு எனினும் ஓய்வு விடுமுறை காலங்களிலேயே வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்கின்றனர். எம்மவர்களில் பலர் இத்தகைய ஓய்வு விடுமுறைகளைப் பயன்தரும் விதத்தில் கழிப்பதாகத் தெரியவில்லை.
குதூகலத்தை, மனநிறைவை, திருப்தியை நாங்களே உருவாக்க வேண்டும் ஒரே இடத்தில் முடங்கிச் சுருண்டு படுத்தால் எழுந்து நிற்க மனம் வருமா? எழுந்து உற்சாகமாக ஓடிப்பாருங்கள். சுறுசுறுப்பு தானாகவே வந்து
விடுகின்றது.
ஒருதடவை வெளியூர்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து நல்ல அனுபவங்களைப் பெற்றவர்கள் தொடர்ந்தும பல ஊர்களை இடங்களைக் கண்டுகொள்ளவே பிரியப்படுவார்கள். எனினும் பயணங்கள், சுற்றுலாக்களைச் மேற் கொள்ள எல்லோருக்குமே வசதி வாய்ப்புக்கள் வந்து விடுமா? தமது உழைப்பின் ஒருசிறுபகுதியையாவது நல்ல பயணங்களை மேற்கொள்ளுவதற்குச் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயாக வேண்டும்.
"நீ எதற்காக பிறநாடுகளைச் சென்று பார்க்க விருப்பமின்றி இருக்கின்றாய்" எனச் சிலரிடம் கேட்டால் "எனக்கு எனது தாய் நாட்டை விட்டுச் செல்ல இஷ்டமில்லை. எனது நாட்டைவிடச் சிறந்தது எதுவுமேயில்லை என்பார்கள். இவர்களது தாய் நாட்டுப்பற்றினைப் பாராட் டலாம் ஆனால் தாய் நாட்டுப் பற்றுக்கும் வெளிநாடுகளுக்கோ அல்லது தனது பிரதேசம் சாராத நாடுகளுக்கோ சென்று வருவதற்கும் எந்த சம்பந்தமுமேயில்லை.
மேலும் வெளிநாட்டினர் பயணம் செய்யும் ஆவலினாலேயே நாடுகள் கண்டங்ளைக் கண்டு பிடித்தார்கள். கொலம்பஸ் வஸ்கொடகாமா போன்றவர்கள் கடல்வழிப் பாதையையே கண்டு சொன்னார்கள்.
ஒரு விடயத்தை அறிந்துகொள்ள விழைவதுகூட ஒரு கல்விதான். நேரிடையாகப்பெற்ற அனுபவ ஞானத்திற்கும் கேள்விப்பட்ட சமாச்சாரத்தினால் பெற்ற அறிவிற்கும் வேறுபாடுகள் உண்டு அல்லவா? உலகம் எவ்வளவோ முன்னேற்றமடைந்த இந்தக்காலத்தில்கூட அறியவேண்டிய விஷயங்களை அறியமாட்டேன் என அடம்’ பிடிப்பது கேலிக்குரியவாதமாகும்.
இன்று சாதாரணமாகவே சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிடவும் , சமயப் பெரியார்களைத் தரிசிக்கவும், தமது நாடுகளை விட்டு பல ஆயிரம் மைல்கள் சென்று வரும் மக்கள் தொகை கூடிவிட்டது. மேலும் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்கள் தமது மாணவர்களை அயல்நாடுகளுக்குப் பல்வேறுபட்ட பயிற்சிநெறிகளுக்காக அனுப்பி வருகின்றன. அதுமட்டு மல்ல, தங்கள் நாடுகளுக்கு நேயநாட்டு மாணவர்களையும் தமது நாடுகளுக்கு வருமாறு அழைப்புவிடுகின்றன. தமது நாட்டில் பல கல்வி வசதிகள் இருந்தும் கூட அரசுகள், பிறநாடுகளுக்குப் புலமைப் பரிசில் மூலம் செல்ல வாய்ப்பு அளிக்கின்றன.
இவைமட்டுமல்ல ஒருநாடு,மற்ற நாடுகளிடம் அன்னியோன்னியமாக நடந்து கொள்வதற்கான முறைமைகளுடன் புதியன காண்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்கும் தான். என அறிக! பிறநாடுகளிடையே கல்வி கலாசாரப் பரிவர்த்தனைகளால் நாடுகளிடையே மக்களிடையே "யுத்தம்" பற்றிய பீதியுணர்வும் சந்தேகமற்ற செளஜன்யமான உண்மைத்தன்மையோடு இணைந்த நல்லெண்ணம் உருவாகலாம் அல்லவா?
பயணங்கள் மனித மனங்களைப் பண்படுத்துகின்றன. பயணங்களுடாக மகிழ்ச்சியை கண்டுகொள்ள விழையும் நாம் அந்த மகிழ்வினூடாக பெற்றுக்கொள்ளும் வாழ்க்கை அனுபவங்களையும் சமூகத்திற்கு அளிக்க
வேண்டும். அதே வேளை அல்லல்படும் நாடுகளையும் கண்டு, அவர்களது துன்பங்களின் வலியையும் உணரல் வேண்டும். ஆழமான துன்பங்களுடனேயே சதாசீவித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு நாம் என்ன செய்து விட்டோம்? இன்று நாம் செய்தித் தாள்களைப் படித்து முடித்து மடித்து எறிகின்றோம்.
நேரிடையாகப்பெற்ற அனுபவங்களால் பலர் தொண்டர்களாகவும் இத்தகையோர்க்குச் சேவை செய்கின்றார்கள். அல்லல்படுகின்றவர்களை நேரில் கண்டு சேவை செய்யவே பல தொண்டு ஸ்தாபனங்கள் தமது முழுமூச்சாகக் கொண்டு இயங்குகின்றன.
எங்கோ சொகுசாக ஜீவனம் செய்தவர்கள் தங்கள் பயண அனுபவங்களால் வாழ்வுப் பாதையை மாற்றியவர்களும் இருக்கின்றார்கள். தொண்டுள்ளம் கொண்ட அன்னை தெரஸா அவர்கள், இந்தியா வந்ததுமே தமது உண்மையான சேவை இதுதான் என்பதைத் தீர்மானித்து ஏழைகளை அரவணைத்தார்.
எமது ஒவ்வொரு செயலுக்குமே ஒரு நல்ல அர்த்தம் இருக்க வேண்டும். அரைமைல் தூரம்வரை பயணிக்கும் மனிதர் சிலர், அந்த சில நிமிடங்களில் பேரூந்தில் பயணிகளுடன், பேரூந்து நடத்துனரிடம் சண்டை போடுகின்றார்கள். "மகிழ்வுடனே இரு” என்று சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. பயணங்களில் சந்திக்கும் நல்ல நண்பர்களை உறவுகளை மறந்துவிடக் கூடாது. மனித மனங்கள் விரிவடைய வேண்டும். எல்லோரும் எல்லோரிடமும் பழக வேண்டும். பேதமற்ற சிந்தனைகளை உருவாக்க வேண்டும். எங்கள் வாழ்க்கைப் பயணங்களின் காலம் முடிவடைவதற்குள் எம்மோடு இருந்து எம்மோடு ஜீவிக்கும் ஜீவன் பல விந்துைதல்களை வேற்றுமையுடன் நோக்குதலால் என்ன பயன் உண்டு? போக்குவரத்தில் ஈடுபடுவது மட்டும் பயணங்கள் அல்ல. கழிக்கின்ற காலங்களுமே பயணம் போலத் தான் என அறிவோம். மனிதனை மனிதன் போய்ச்சந்திப்பதை, அவன் வாழ்விடங்களை தரிசிப்பதை விட நல்ல பயண அனுபவம் வேறு என்ன உண்டு?
புன்னகை அன்பின் வெளிப்பாடாகும். முகமலர்ச்சி ஆன்மாவை என்றும் விழிப்பூட்டும். எங்கள் சந்தோஷங்களை எங்களுடன் மட்டும் வைத்துக் கொள்ளாமல் அனைவருடனும் அதனைப் பகிர்ந்து கொள்வோம்! அகத்தினுன் இருளைப்பூட்டி புறத்தே புன்னகைகாட்டினால் அது அவர்களுக்கே துன்பமூட்டும் நடிப்பு. சோகத்துடன் தோழமை கொள்ளாது வாழ்க்கையின் யதார்த்தமானவைகளை ஏற்றுக்கொண்டால் மனம் அமைதிபெறும். துன்பத்தை எரித்தால் என்றும் புன்னகை தண்ணொளியுடன் எம்மில்ருந்து பூத்துக்குலுங்கும். புன்னகையூடாக மனிதன் எல்லையற்ற அன்பினைப் பிறரிடமிருந்து, தன்வசமாக்கிக் கொள்கின்றான்.
புன்னகை மனிதப்பெறுமதியை உறுதியுடன் மேலதிகமாக்குகின்றது. பொன்னகையினைவிடப்புன்னகை அழகானதும் கவர்ச்சிகரமானது. மனதினைக் கெளவக் கூடியதுமாகும். மனதில் அழுத்தமும் துன்பமும் சேர்ந்து அல்லல் கொள்ளும் போது புன்னகை எம்மிடமிருந்து பயணிக்க மறுக்கின்றது.
அலுவலகத்திற்குப் புறப்பட்டுப் பேருந்திற்காகக் காத்திருக்கும்போது, வந்த பேரூந்துகள் காத்திருந்தவரைக் கைவிட்டு மூச்சிரைக்க ஓடும் போதும், அலுவலகத்தினுள் சென்றபோது பயணத்தினால் ஏற்பட்ட வெறுப்புடன் இருக்கையில் அலுவலக மேலதிகாரி எந்தவித காரணமும் இன்றி இவருடன் காலையிலேயே கோபிக்கும் போது, புன்னகையையும் சந்தோஷத்தையும் எப்படி இவரிடம் எதிர் பார்க்க முடியுமா ஐயா!
எல்லாப் பிரச்சினைகளையும் மென்று விழுங்கி முகத்தை மலரவைக்கும் சாமர்த்தியம் எல்லோருக்குமே வந்துவிடுமா? சின்ன அதிர்ச்சியூட்டும் துன்பங்களையே தாங்காது இந்த மனசு சதா அடித்துக் கொள்கின்றதே என்ன செய்ய? எல்லா விஷயங்களுமே யதார்த்தம் சர்வசாதாரணங்கள் என எண்ண மனம் சொல்லியும் கேட்காமல் கலங்குவது மனித இயல்போ? ஆயினும் நாம் எந்த வேளையிலும் எதனையுமே எதிர்பார்க்காமல் எமது முகத்தை மலர்ச்சியுடன் வைத்து மிக இயல்பாக எம்மைக் களிப்புக்குள் ஆளாக்க “புன்னகை”யை தயக்கமின்றிச் சிந்திவிடுக! மிக அற்புதமான ஆத்மாவை விழிப்பூட்டும் அபூர்வ ஒளடதம் இதுதான், இதுவேதான்!
மருந்து என்பது உட்கொள்ளப்படும் ஒன்று என்றே சொல்லப்படும். எமது மனத்தினுள் செலுத்தப்படும் அன்பான அதிர்வுகள் புன்னகையூடாகப் புறப்படும் போது அது எல்லோருக்குமே வழங்கப்படும் சுகானுபமூட்டும் அற்புத மருந்தாகின்றது என்றால் தப்பேதுமில்லை!
எங்கள் சந்தோஷங்களை எங்களுடன் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பார்ப்பவர்களையும் எங்களைப் போலவே ஆக்கிட முனைவோமாக, அகத்தினுள் இருளைப் பூட்டி வைப்போர் புறத்தே புன்னகையினை மீட்டிக் காட்டினால் அதில் அபஸ்வரம் தோன்றும். இது பிறரை ஏமாற்றும் வேலைதான். இந்தப்புன்னகை காட்டுதலில்தான் எத்தனை ரகங்கள் உண்டு தெரியுமா?
ஆணவமிடுக்குடன் புன்னகைப்பார்கள் சிலர். எம் முன் நிற்கும் இவர்கள் எல்லோரும் "யார்” என்கின்ற தோரணையில் உதட்டைச் சுளித்து விரிப்பார்கள். இவர்களின் முறுவல் மனித மனங்களையும் முறுக்கிவிடும். வஞ்சகப் பார்வையுடன் நோக்கித் தமது உதடுகளை மெல்லியதாக புன்னகைப்பது போல் காட்டுவோரும் இருக்கின்றார்கள். உள் ஒன்று வைத்து அதனை வெளியே காட்டாமல் தன் எண்ணங்களைப் பிறருக்குத் தெரியாது எனத் தப்பாக எண்ணி முறுவல் காட்டினால் அதனைப்புரிந்து கொள்ளும் திறன் உள்ளவர் புரிந்து கொள்வார்கள். ஆனால் அப்பாவிகள் தான் அசட்டுத்தனமாக அவர்கள் கைப்பாவைகளாகவும் மாறிவிடலாம் வஞ்சகநோக்கு எஞ்ஞான்றும் சித்தி பெற்றிடுமோ?
ஏழை எளியவர்களைக் கண்டால் அவர்கள் மூலம் ஏதேனும் காரியமாக வேண்டுமெனக் கருதிச் சில பிரமுகர்கள் பெரிதும் சிரமப்பட்டுப் புன்னகையினை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இவர்கள் தமது மனதினுள் அசூசையுடன் அவர்களை நோக்குவார்கள். போயும் போயும் இவர்களுக்கெல்லாம் பல்லைக் காட்ட வேண்டியிருக்கின்றதே எனத் தமக்குள் சொல்லிக்கொள்வார்கள். இது கூட ஒரு பாவனை காட்டும் முறுவல் தான். ஆனால் இது ஒருவனை அறுக்க ஏமாற்றச் செய்யும் ஒரு முன் முயற்சியேயாகும்.
அடுத்து கிண்டலடிக்கும் நோக்கில் புன்னகைப் போரும் உள்ளனர். எதிரில் நிற்பவர்களை ஏமாளிகள் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று எண்ணி நமுட்டுச்சிரிப்புடன் முறுவலிப்பார்கள்.எனினும் சிலர் வெறும் நகைச் சுவையுணர்வுடன் எந்தவித குரோத அகம்பாவ எண்ணமின்றியும் இப்படிப் புன்னகைப்பதுண்டு.
மேலும் தமது கோபத்தைக் காட்டுதலுக்கும் புன்னகையைப் பாவிப்பவர்களுமுண்டு. இந்தப் புன்னகையை நம்பி மற்றவர்கள் அது தமக்குச் சாதகமானது என நம்பி ஏதாவது பேச ஆரம்பித்தால் வேறு வினையே வேண்டாம் ஐயனே! சோகம் கெளவும்போது ஒருவரட்டு எண்ணம் சூழ உதடு காயந்த நிலையில் மெதுவாக விரித்து கண்களில் ஏக்கத்தைப் படர விட்டவர்களைப் பார்த்தாலோ துன்பம் தோய்ந்தெடுக்கும்.
புன்னகைக்கும்போது மனிதனின் விழிகளும் தனது பாவத்தைச் செய்து காட்டும். நாம் எந்த நிலையில் புன்னகையினைப் படரவிடுகின்றோமோ, அதே வேலையை கண்களும் காட்டி நிற்கும். முகத்தின் தசைகளும், விழிகளின் அசைவுகள், மெல்லிய தசைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனிதன் உள்ளத்தைப் படம் போட்டுக் காட்டிவிடும்.
மனதில் உள்ள வெளிப்பாடுகளுக்கு ஏற்பவே இதய அதிர்வுகள் உடல் இயக்கங்களுள் மாறுதல் அடைகின்றன. ஒருவன் உடல் நிலை இயல்பாகவும் ஆரோக்கியமாகவும் திகழ நல்ல மகிழ்வுடன் சீவிக்க வேண்டும். புன்னகை என்பதுகூட மனமகிழ்வின் வெளிப்பாடே. இந்த விடயத்தில் பொய்மையான வெளிப்பாடாக அது அமையக்கூடாது. நடிப்பாகப் புன்னகை வெளிப்படுத்துதல் தன்னையே போலியானவனாக்குகின்ற செயல் தான்.
கோபத்தை ஏற்படுத்தியும், மிரட்டியும் காட்டுதற்காக விழியாலும் உதட்டாலும் செய்கைகளைக் காண்பிப்பது மென்மையான புன்னகைக்கு களங்கத்தைக் காட்ட முயற்சிப்பதுபோலாகிவிடுமன்றோ? சரி, இனி சந்தோஷகரமான புன்னகைகளின் வெளிப்பாடுகளைப் பார்ப்போமே!
தனது தாயை அல்லது தனக்குப் பிரியமானவர்களைக் கண்ட்மாத்திரத்தே வசீகரமான தனது புன்னகை மூலம் தன்னை அரவணைத்துக் கொள்ளு மாறு கெஞ்சிக்கொள்ளும் குழந்தையின் அழகை என்ன என்பதோ? இதன் மனதை மயக்கும் இன்பத்தை எழுத்தில் சொல்லில் இயம்பிட இயலாது.
வயதுமுதிர்ந்த தாத்தா, பாட்டியர் தங்கள் வாரிசுகளான பேரன் பேத்திகளின் துடுக்கும், துள்ளலுமான கும்மாளங்களை விளையாட்டுக்களை அவர்தம் மழலையைக் கேட்டுத் தங்கள் பொக்கை வாய் மூலம் காட்டும் புன்னகையின் அழகே அழகு!
காதலர்கள் ஒருவர் திருட்டுத்தனமாக நோக்குவதை இருவருமே கண்ணுற்றதும் வெட்க மிகுதியினால் அவர்கள் சிந்தும் புன்னகை. மேலும் பேச முடியாத சந்தர்ப்பங்களில் காதலி தன் விழிகளைத் தாழ்த்தி நிலத்தை கால் விரல்களால் சுரண்டி இமைகளைப் பட்டுச் சிறகென படபடக்க விழித்து மூடித் தாழ்த்தி இதழ் விரிக்கும் புன்னகை நாணத்துடன் கலந்த அற்புதக் கலவை! தங்கள் குழந்தைகளின் மேன்மை கண்டும் அவர்
களைப் பிறர் போற்றுகையில் பெற்றோர் எல்லை யில்லா ஆனந்தம் கொள்கின்றனர். மேடையில் தங்கள் பிள்ளை பரிசில்களைப் பெறும்போதும், விளையாட்டுப்போட்டியில் முதன்மையான வீரனாக வரும் போதும் அந்தக் கணம் அவர்கள் பேசுதற்கு வார்த்தையின்றி கணவன், மனைவி ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி இதழ் விரித்து மலரும் புன்னகையின் பெருமிதம் தாம் பெற்றெடுத்த முழுப் பயனையும் அன்றே கண்டதாக இருக்குமன்றோ!
இந்தக் களிப்பின் பெறுமதி பல்கோடி, பல்கோடி செல்வத்திலும் மேலானதே!
இன்று பலரும், தமக்குத் தெரிந்தவர்களைக் கண் டால் தான் முகமலர்வினைக் காட்டிக்கொள்ள வேண்டும் என எண்ணிக் கொள்கின்றனர்.
மேலைத்தேயத்தில் உள்ளவர்கள் காலை வேளையில் எவரைக் கண்டாலும் முகமலர்வுடன் காலை வந்தனம் சொல்லியே தீருவார்கள். புதிதாக நாம் அவர்களைக் கண்டாலும் கூட மெத்தப் பழகியவர்கள் போலவே வந்தனம் சொல்வார்கள். மேலும் காலநேரத்திற்கேற்ப அவர்கள் சொற்களும் இருக்கும். நண்பகல் இரவு நேரங்களுக்கு ஏற்பவும் தமது வந்தனங்களைப் பரிமாறிக் கொள்வார்.
அவர்கள் வந்தனம் சொல்லி புன்முறுவல் பூக்கும் போது நாமும் அவ்வண்ணம் சொல்லாமல் விட்டால் அது அவர்களை அவமதித்ததாகவேபடும்.
ஒருவரை நாம் கண்டமாத்திரத்தே காட்டும் இத்தகைய அன்புணர்வின் அலைகள் தொடர்ந்தும் அன்றைய நாளை மகிழ்வூட்டுவனவாக அமைந்துவிடுமல்லவா? காலை வேளையில் வேலைக்குப் புறப்படும் கணவனை அன்புடன் புன்முறுவலுடன் மனைவி வழியனுப்ப வேண்டும். கடு கடுத்துமுகம் சுளித்து இல்லாத பிரச்சனைகளைத் தேவையின்றி காலையிலே புறப்படும் போது சொல்லத்தான் வேண்டுமா? அதேபோல் தொழிலுக்குச் செல்லும் கணவன், தேவையின்றி மனைவி பிள்ளைகளுடன் எரிந்து விழுந்து புறப்படத் தேவையில்லை. தமக்குள்ள மனக் குமைச்சல்களின் வடிகாலாக மனைவி பிள்ளைகளுடன் மனத்தாங்கல் கொள்வதில் என்ன நியாயமுண்டு? மேலும் தமக்குள்ள தங்கள் பிரச்சனைகளை அன்புணர்வுடன் நம்பிக்கையுணர்வுடன் ஆணவ முனைப்பின்றி விட்டுக்கொடுப்புடன் சந்தோஷகரமான சூழ்நிலையை உருவாக்கிப் பேசிக் கொண்டால் குறைவு ஒருபோதும் வந்துவிடாது.
நாம் எவர் மீதும் காட்டுகின்ற பரிவான பார்வைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் எம்மைத் தம்மவர்களாகவும் நாம் அவர்களை நம்மவர்களாக்கும் எண்ணம் சட்டென்று மனதினுள் புகுந்து கொள்ளும் ஒருவரிடம் பேசி விடைபெறும் போது சந்தோஷமாக. விடைபெற வேண்டும். கருத்து மோதல்களால் இதயங்கள் பொருதிவிடக்கூடாது. எங்கள் கருத்தை ஏற்காதவர்களை எமக்கு வேண்டப்படாதவர்களாக கருதக் கூடாது. எந்நேரமும் மலர்ச்சியைக் காட்டுபவர்கள் மற்றவர்களை இகழ்ந்து பேசத்துணியார். யந்திரம்போல சடம் போல நாம் வாழ்ந்து விட முடியுமா? பரிவு, பாசம், அன்பினைக் கலந்து, எம் உதடுகள் மூலம் வெளிப்படுத்துவோம்!
எமக்குக் கீழ் பணிபுரியும் சிற்றுாழியர்கள் மூலம் கடமை நிமிர்தமான காரியம் செய்வித்தாலும் முகமலர்வுடன் நன்றி தெரிவித்தல் வேண்டும். அவன் செய்த வேலைக்குச் சம்பளம் பெறுகின்றான். இதற்கு என்ன நன்றி” என்று துச்சமாகக் கருதிடல் கூடாது.
"அன்பைக் காட்டினால் அடங்கிவரமாட்டான்" என்று சிலர் சொல்வார்கள். ஒருவர்க்கு அன்பைக் கொடுத்தல் மானுட உயர் கெளரவம், எங்களைப் பிறர்,"அன்பைக் காட்டி கெளரவப்படுத்தக்கூடாது" என அவர்கள் கருதினால், எமது மனசு எவ்வளவு பாடுபடும் தெரியுமா? எங்களுக்குப்பிறர் செய்யும் உதவிகள் அது அவர்கள் கட்டாய கடமை என எண்ணுதல் மடமையாகும். யாராவது ஒரு அப்பாவி செய்யும் சிறு உதவிக்குச் சன்மானம் அளிக்காது விட்டாலும் பரவாயில்லை அந்த நன்றியுணர்வை சிறு புன்னகை மூலம் காட்டினால் என்ன குறைவந்து விடப்போகின்றது? மனிதனை மனிதன் அவமானப்படுத்துவது மானுடத்தையே இழிவுபடுத்துவதாகவே அமையும். எவரையும் தாழ்வாக எண்ணுதலும், அவர்களை கணக்கில் எடுக்காது துச்சமாக கருதுவதாலும் எந்த விதமான நல்ல பெறுபேறுகளையும் பெற்றுவிடமுடியாது.
அன்பு செலுத்துவதன் மூலம்தான் அவர்களது பெறுமதி தானாக உயர்ந்து பரிமளிக்கின்றது. ஆயினும் நாம் அன்பைக் காட்டிவிடுவதால் மட்டும் பிரயோசனமில்லை. அன்பினுடாக ஒருவருக்கு நம்பிக்கையான நம்பகத்தன்மையுடன், உச்சபட்ச உதவிகளை நல்குவதனாலேயே அன்பிற்கான பெறுமதியும் அவர்கள் இதயத்தை முழுமையாகத் தொட்டு நிற்கும். அன்பின் வெளிப்பாட்டிற்குப்"புன்னகை” என்பது அழகிய அடையாளமாகும்.நாம் செலுத்துகின்ற அன்பின் வெளிப்பாடுகள் இறைவனுக்கு எம்மால் இதய மூடாக அனுப்பிவைக்கப்படும் விசுவாசமான பக்திமிகு விண்ணப் பங்களேயாகும்!
அன்பு செலுத்துவதுகூட எமது பிரார்த்தனை வழிபாடுகளுக்கும் மேலானதே. அன்பில்லாதவர்கள் செய்யும் வழிபாடுகள் சித்திபெறுவது கிடையவே கிடையாது. சிறு புன்னகை கூடச் சிந்தத் தெரியாமல் இருப்பவர்கள சந்தோஷத்தை ஒளித்து மறைத்து வைத்திருப்பதாகவே அடையாளப்படுத்தப்படுவர்.
மனித ஆளுமைகள் உயர்வதற்கு நாம் பிறரை நேசிப்பவர்களாக இருந்தேயாக வேண்டும். நாம் உயர்வடைய வேண்டும் என்றால் மற்றவரை ஒடுக்கி அடக்கி முன்னேறுவது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. மனித சமூகத்தை வெறுத்து ஒதுக்கியோ அல்லது வலுக்கட்டாயமாக எதையும் திணித்தோ மற்றவர்களைக் கவர்ந்துவிட முடியுமா? இயல்பாக வருவதுதான் அன்பு நேயப்பாடு ஆகும்.
ஈரமான நெஞ்சில் பெருக்கெடுத்தோடும் அன்பு பிரவாகத்தினுள் கட்டுண்டு போகப்பிரியப்படாதவர் எவர் உளர்? கண்ணுக்குப் புலப்படாத அன்பை உங்கள் உதட்டின் மூலம் வெளிப்படுத்துங்கள்.
எந்தவிதமான எதிர்பார்புகளுமின்றிக் குழந்தைகள் காட்டும் களங்கமற்ற புன்னகையை சிரிப்பைப் பாருங்கள் நாம் எதனையுமே எதிர்பார்க்கும் போது அது வியாபாரம் ஆகின்றது.
வரப்போகும் இன்னல்கள் துயர்களை தடுக்கும் பெரும் சுவராக எமது நெஞ்சத்தில் இருந்து சுரக்கும் பரிவு. அன்பு, காதல், பாசம் எனப்படுவன திகழ்கின்றன. இந்த சுரக்கும் கருவியை நாம் தான் இயக்க வேண்டும். மணம் எனும் நற் கருவி கொண்டு இதமான புன்முறுவல்களைப் பூக்கச்செய்வீர்! இந்த புன்முறுவல்கள் மூலம் மானுடம் என்கின்ற இறை சிருஷ்டியை அர்ச்சனை செய்வீராக!
மக்களை நேசிப்பது போல் பேரின்பம் வேறு உண்டோ தோழர்களே? என்றுமே சிந்திடும் புன்னகை வாயிலாக உங்களுக்கான அடையாளத்தினை உறுதி செய்வீராக!
உழைக்காதவனை உலகம் மதிக்காது எமக்காகமட்டுமின்றி, உலகிற்காகவும் உழைத்திடுக! உழைக்கின்ற உழைப்பில் பேதமில்லை. ஏனெனில் அனைவரதும் உழைப்பு முடிவில் உலகின் நலனுக்கே போய்ச்சேருகின்றது. வர்க்கபேதம் ஜகத்திற்கு நாசம். மெய்வருந்தி உழைப்பவன் அதன் பிரதி பலனாக சந்தோஷியாகின்றான். பொறுப்புணர்ச்சியுள்ளவனுக்கு உழைப்பில் உறுதி, நாட்டம் தானாய் வரும். உழைத்தவன் வாழ்வில் இளைத்ததேயில்லை.
தனக்காகவும், தன்னைச் சார்ந்தவர்களுக்காக மட்டு மின்றி இந்த உலகஷேமத்திற்காகவும் மனிதன் உழைக்க வேண்டியவனாகின்றான். உழைக்காதவனை உலகம் மதிப்பதில்லை. ஊருக்கு உழைப்பவனை அவனி அரவணைத்துத் துதி செய்கின்றது.
உழைத்தல் என்பது, உடலை மட்டுமே வருத்திச் செய்வதுமட்டுமல்ல. இன்னும் ஒருவருக்காக மனதாலும் மொழியாலும் போற்றுதலும்,அவர்களை நன்கு வாழச் செய்ய வழிவகுத்தலும் கூட ஒருவரது நல்ல உழைப்பின் தூய வடிவமேதான். தானும் உழைத்துத் தன்னைச் சார்ந்தோர் தன்னிடம் தங்கி வாழாத எத்தரத்தாரையும் மதிப்போரை இந்தப் பூமிதன் நற்புதல்வராக ஏற்றுக்கனம் பண்ணும். இத்தகைய திறன் படைத்தோர் இருக்கும்வரை பூமியில் உழைப்போருக்குப் பஞ்சமே யில்லை.
பல தெரியாத கருமங்களை நாம் இன்னும் ஒருவர் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியவராகவுள்ளோம். உழைக்கும் வழியைப் பிறருக்குத் தெரியப்படுத்துபவன் உத்தமனாகின்றான். எந்தவித உதவிகளையும் மற்றவ ர்க்கு வழங்காமலும் அடுத்தவன் உழைப்பைச் சுரண்டுபவன், உறிஞ்சுபவன் என்று சொல்லப்படுகின்ற "அதர்மன்” ஆகின்றான்.
、
ஒருவன் கருமத்திற்கு முட்டுக்கட்டை போடுவதால் எவர்க்குமே மிகையான ஆற்றல்கள் வந்துவிடப் போவதுமில்லை. அறியாமை காரணமாக ஒருவன் வளர்ச்சியைத் தடுத்தால்தான் தனது சம்பாத்தியம், சாத்தியப்படும் என எண்ணுதல் மடமை. பிறர்க்கு இடையூறுகளை உருவாக்காமல் அதுபற்றிய கருத்துக்களைத் தம்புலனுக்குள் செலுத்தாதவன் தானாகவே உயர்ந்து விடுகின்றான்.
நல் எண்ணங்களால் சமைக்கப்படுகின்ற வாழ்வின் “நிம்மதி சாஸ்வதமானது, திவ்யமானது இறைவன் அருட் பிரசாதத்தின் முழு வழங்கலுமானது என்பதை யாம் உணர்வோமாக!" :
இன்று எல்லோர்க்குமானது இந்த அவனி என்று சொல்லப்பட்டாலும் இந்தக்கூற்று முழுமையாக நடை முறையில் சரியாகச் செயல்படுத்தப்படுகின்றதா? உழைத்தவன் உழைத்தபடியே. புத்தியை வைத்துச் சுரண்டி வாழ்பவன் அற்ப வாழ்வில் மிதந்தபடியேதான் வாழ்ந்து வருகின்றான்.
கடுமையாக உடலை வருத்தி உழைக்கும் தொழிலாளி மோட்டார் வாகனத்தின் உரிமையாளனாக அல்லது அதனை வாடகைக்கு அமர்த்திப் பயணம் செய்யத்தான் முடிகின்றதா? தொழிலாளி, என்றும் தொழிலாளியாகவே இருக்கும் அவல நிலை தொடரக் கூடாது. அவன் நிலை உயரவேண்டும். இது நடக்கின்றதா?
இன்று சாதாரண பேரூந்தில் செல்வதற்குக் கூட சாமான்யன் செலவு செய்ய முடியாமலிருக்கின்றது. உழைப்பின் மூலமான வருமானம் தேய்ந்து போய்க் கொண்டிருக்கின்றது. வெறும் திரைப்படத்திலும் கதைகளிலும் உழைத்தல் பற்றிப் பிரமாதமாகப் பேசப்படுவதும் அங்குகூலியாளாக நடிப்பவர் மட்டும் கோடி சீமானாக வாழ்வதும், அவர்களைக் காட்டிப்படாதிபதிகள் நல்ல வியாபாரிகளாக மாறுவதும் நிதர்சனம்.
உழைப்பவன் இன்று வெறும் காட்சிப்பொருளாகி விட்டான். ஒருவன் உழைப்பைச் சுரண்டுவது போல திருட்டுத் தொழில் வேறில்லை. இதில் ஜீரணிக்க முடியாத உண்மை என்னவெனில் மிகவும் பிரயத்தனப்பட்டு முன்னேறி முதலாளியானவனே தன்னோடு ஒத்த வேறு செல்வந்தருடன் மட்டும் இணைந்து கொள்வதும், அவன் தனது பழைய சங்கதிகளை மறப்பதுமாகும்.
வர்க்க பேத ஆட்சியில் இருந்துவிடுபட இன்னமும் பலரும் தயாராகவில்லை. ஒரே குடும்பத்தினுள்ளேயே பணம் படைத்தவர்கள், பணம் படைக்காதவர்களுக்கு என வேறுபாடுகளைக் காட்டாமல் விடுவதுமில்லை.
மனித முயற்சிகளை அவர்களது வினைத்திறன்களை உண்மையாகவே உலகம் மதித்தால் வர்க்கபேத குரோதங்கள் உருவாகுமா? செல்வத்தைத் திரட்ட முடியாதவர்கள் உலகில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரகிருதிகளாகக் கணிக்கும் நிலை அற்றுப்போகும் நிலை எப்போது வரும் பேச்சளவில் தான் இருக்கின்றது உழைப்பவர்க்கே நிலம் சொந்தம், என்கின்ற சொல், ஒரு நையாண்டிக்குரிய வெறும் வார்த்தையாகிவிட்டது. உடல் உழைப்பு பரந்த மனப்பான்மை எதுவுமே அற்றவர்கள் நிலச் சுவாந்தாரர்களாக இருக்கலாம். இவர்கள் வசதியற்றவர்கள் மூலம் தங்களை மட்டும் வளர்த்துக் கொள்வதைத் தடுக்க எந்தச் சட்டத்தின் மூலமாவது வழி கண்டு பிடித்து அல்லல்படும் உழைப்பாளர்களுக்கு வலுச்சேர்க்க, வாழ்விக்க, வழிசமைக்க இயலாதா?
பணம் சம்பாதிப்பது தப்பு அல்ல. ஒருவன் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளால் சமூகம் அதன் பொருட்டுப் பாதிப்படையச் செய்வதே மாபாதகமாகும். கஷ்டப்பட்டுப் பணத்தைச் சம்பாதிப்பது அவருக்கும் அவரைச் சார்ந்தவர்க்கும் மட்டுமல்ல அது ஏனையோர்க்கு ஒரு வழிகாட்ட லுமாகும்.
செய்கின்ற வேலைக்கு உரிய கூலி வழங்காமை ஒருவரிடமிருந்து முறைகேடாக நியாயமற்றவிதத்தில் ஒருவரின் அறிவை அவர் தம் வல்லமைகள் உழைப்பை எதிர்பார்த்தல். சுயலாபத்திற்காக உழைக்கும், திறன் இருந்தும் மற்றவர்களிடமிருந்து வேலைகளை வேண்டிநிற்றல், ! இத்தகைய அடாத செயல்களைத் தம் வார்த்தை ஜாலங்களாலும் மறைமுக வழிகளாலும் சமயோசிதமாகவும், வஞ்சகமாகவும் செய்து ஒருவன் உழைப்பை கவர்வது தம் கூர்மையான யுத்தி என இவர்கள் எண்ணினாலும் இது கண்ணியமற்ற சுத்த கயமைத்தனமேயாம். உழைப்பு என்பதே மனித வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும்பேறாகும்.
எம்பொருட்டு நாம் வருந்தி உழைப்பதால், நான் உலகிற்குப் பாரம் இல்லாமல் சுயமுயற்சியுடன் வாழ்கின்றேன் என்பதை விடச் சந்தோஷமான இறுமாப்பு வேறு என்ன வேண்டும் ஆயினும் இன்னமும் நம்மில் பலர் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததைக்கூட விழலுக்கு இறைத்த நீர்போல செலவிடுதல் எவ்வளவுகெடுதலானது எனச் சிந்திக்கின்றார்கள் இல்லை.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒன்றாகச் சீவிக்கின்றார்கள். ஒரே சமையல் சாப்பாடு, தங்குமிடம் எல்லாமே ஒரே வீட்டில் தான். ஆயினும் அந்த வீட்டில் என்றுமே வறுமை தான். ஆனாலும் இவர்கள் அனை வருமே வேலைக்கும் போய்ச் சம்பாதிக்கின்றார்கள்.
இவர்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் உள்ள குடும்பத்திலும் ஐந்து உறுப்பினர்கள் தான். கணவன், மனைவி மட்டும் வேலைக்குப் போகின்றார்கள். பிள்ளைகள் கல்வி கற்கின்றார்கள் இவர்களின் எதிர்வீட்டுக்குடும்ப மொத்த வருமானத்திலும் பார்க்க இந்தக் குடும்பத்திற்கு வருமானம் குறைவுதான். ஆயினும் இவர்கள் சந்தோஷமாகவும், வசதியாகவும் வாழுகின்றார்கள் இது எப்படி?
உழைக்கும் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்கின்ற வித்தையறியாமலேயே பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எந்த இடத்தில் செலவு செய்ய வேண்டு எந்த இடத்தில் பணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும்
என்கின்ற மிகச் சாதாரண மதிநுட்பத்தைக் கூடப்புரிந்து கொள்ளாமல் பலர் வாழ்ந்து அவஸ்தைப் படுதல் பரிதாபத் திற்குரியதே. பணம் தேடுதலைவிட அதனைப் பேணுவதிலும் கவனம் செலுத்த வேண்டுமல்லவா? தன்னை நிலையாக உறுதிப்படுத்த ஒருவன் சம்பாதிக்கும் காலத்தி எதிர்காலம் பற்றியும் ஒரு தெளிவான அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தனது காலத்தி இன்ன இன்ன செய்வதற்கான படிமுறைகளை உண்டாக்கியபடி தனது செயலை, ஆற்றல்களை வளப்படுத்தியபடிே முன்னேறிச்செல்ல வேண்டும்.
உழைத்தேன்,செலவழித்தேன், உறங்கி விழித்தேன், உழைத்தேன் என்று மட்டுமல்லாமல் பெற்ற பயன்களை நிலைத்துநிறுத்த என்ன செய்தேன், என்ன செய்கின்றேன் இனி வருங்காலங்களில் என்ன செய்வேன் என்று தன்னையே கேட்க வேண்டுமல்லவா?
ஒருவரது சீவியம், அவனை மட்டுமா சார்ந்துள்ளது இல்லையே, ஒரு குடும்பம் சமூகம் எனப் பின்னிப் பிணைந்தே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தக் கடமைகள் பொறுப்புக்களில் இருந்து சுலபமாக கழன்று கொள்ள இயலுமா?
உழைப்பவர்கள், உடைந்துபோகக்கூடாது தன்னை என்றுமே அவர்கள் புதுப்பொலிவுடன் ஆக்கிக்கொள்வேண்டும். தான்பட்ட சிரமங்கள், ஏன் தற்போதும் ஏற்பட்டுவரும் சிரமங்களின் "வலி”அறிந்து தம்மை முன் மாதிரியான, தமது சம்பாத்தியத்தின் பெறுமானத்தை அறிந்தும் வாழ வேண்டியவர்களாகின்றனர்.
இன்னமும் பல குடும்பங்களில் ஒருவரைச் சோம் பேறிகளாக்கும் கைங்கரியங்களை அக்குடும்ப உறுப்பினர்களே செய்து வருகின்றார்கள். இன்னும் ஒருவர் வந்து தன் குடும்பத்தை நிமிர்த்துவார் எனச்சிலர் நினைத்துக் கொள்கின்றார்கள். "அவருக்கென்ன அவர் வெளிநாட்டில் நல்ல தொழில் செய்கின்றார். எனக்கு உதவி செய்தால் என்ன” எனச் சிலர் எவ்வித சங்கோஜமும் இன்றிச் சொல்லிக் கொள்கின்றார்கள்.
ஒருவரைச் சார்ந்தே வாழ்வதும் ஒருவாழ்வா? தன் குடும்பத்தைக் காப்பாற்ற மற்றும் ஒருவரிடம் பலாத்காரமாகவே உதவி கேட்பதுபோல் நடந்து கொள்பவர்களை நீங்கள் பார்த்ததில்லையா? எந்த உதவிகளையுமே பிறருக்குச் செய்திடாது கெளரவக் குறைவான விதத்தில் மற்றவன் சம்பாத்தியத்தை நுகர எண்ணுவது தன்மானக் குறைவு என ஏன்தான் எண்ணாமல் இருக்கின்றார்கள்? வாழ்வதற்கு ஆசைப்படுகின்ற நாம் அதற்கான வழி சமைக்கும்போது ஏற்படும் அல்லல்கள் இடையூறுகளையும் ஏற்பதற்குச் சித்தமாக இருந்தால் மட்டுமே செய்கின்ற அலுவல்களுக்கும் முழுமையான பெறுமானமும் இருக்கும். உழைப்பு உழைத்தல் என்கின்றபோதே எமதுவாழ்வில் ஆயிற்றுருதஷ் கடமை பொறுப்பு என்கின்ற அம்சங்களும் கூடவே இணைந்து கொள்கின்றன. கடமைகளைச் சரிவர நிறை வேற்றுதலுக்காக ஒருவர் கடினமாகக் கருமம் ஆற்றவேண்டி யுள்ளது. எமது வாழ்வில் ஒளியூட்டவும் எம்மில் தங்கியுள்ள ஜீவன்களுக்கு வாழ்க்கைப் பாதையை அமைத்திடவும் பொறுப்புணர்வும் கடின உழைப்பும் அத்தியாவசியமானதாகின்றது.
எந்தவிதமான பொறுப்பு மற்றவர்களின் வாழ்க்கை திசை திரும்புவதற்கும் அவர்களே காரணமாகின்றனர். சும்மா இருப்பவன் சிலவேளை கேவலமான நடத்தைகளுக்கும் ஆளான பிரஜையாகலாம். எத்தனையோ நபர்கள் ஆரம்ப இளமைக் காலங்களில் பொறுப்பற்றவர்களாக இருந்து பின்னர் அவர்களுக்கென குடும்பம் அமைந்து விட்டால் தமது மனைவி பிள்ளைக்ளுக்காக உழைப்பில் நாட்டம் உள்ள நல்ல மனிதனாகிவிடுவது ஒன்றும் வியப்பு அல்ல. எனவே பொறுப்புணர்வு வந்தாலே உழைக்கும் ஆர்வம் தானாகவே வந்துவிடுகின்றது.
சோம்பல் எனும் கொடிய நோய்க்கு முழு விரோதமானதே நாம் முழுமனதுடன் ஆற்றுகின்ற கடமைகளுமாகும் சோம்பல்படுபவன் இருந்தும் செத்தவன் ஆகின்றான். வாழ்நாட்களைத் தானாகவே குறைத்தவனுமா கின்றான். மேலும் ஆர்வமின்றிச் செய்யப்படும் கருமங்கள் கூட திருப்திகரமாக அமைந்து விடப் போவதுமில்லை. மேலும் பொறுப்புக்களில் இருந்து நழுவுவதனால் தான் ஒரு புத்திசாலி சாதுர்யமானவன் எனப் பலர் எண்ணினால் அதன் எதிர் தாக்கம் பெரும் பாதகமாகவே இவர்களுக்கு வந்துவிடலாம்.
தமக்குரிய வேலைகளைப் பிறர்க்குக் கட்டளையிட்டுச் செய்விக்க முனைவதால் ஏற்படுகின்ற விபரீத விளைவுகளை நாம் பொது நிறுவனங்களிலும், அரச தனியார் நிறுவனங்களிலும் அனுபவரீதியாகக் கண்டு கொள்ள முடியும். தமக்குரிய கருமங்களைத் தாமே ஆற்றுதலில் உள்ள திருப்தியே அலாதியனதும் பூரணமானது.
வாழ்க்கையில் அதிகம் முன்னேறியவர்கள் எப்படி உழைப்பால் உயர்ந்தார்கள் என்பதனைக் கட்டாயமாக இளைய தலைமுறையினர் அறிந்தேயாக வேண்டும். முன்மாதிரியாக ஒரு தலைவனை ஒரு படைப்பாளியை, அறிஞனைக் கண்டு அவர்கள் வழி செல்வதனாலும் பலர் தம்மைப் புதுப்பித்துப் பொலிவேற்றிக் கொள்வதுண்டு.
எதுவுமே முடியாததும் அல்ல கடமைகளை, பொறுப்புக்களை, சிரத்தையுடன் ஆர்வமுடன் செய்பவர்கள் என்றுமே சலிப்புடன் வாழ்ந்ததாக இல்லை. உழைக்காதவன் அடிமை நிலையில் உள்ளவன். பரம்பரைச்சொத்து இருக்கின்றது. எனக்கேன் உடல் உழைப்பு என்பவர்கள் தமக்குள்ளேயே தன் வலிமைக் குறைவினை ஒத்துக் கொள்ளாமல் விட்டாலும் கூட அவர்கள் ஒரு அங்கீகரிக்கப் பட்ட சோம்பேறிகளேயாவர்.
உழைக்காதவன் தன்னுடைய சொத்துக்களைக் காப்பாற்றத் தெரியாதவனாகின்றான். வாழ்க்கையில் ஒரு ஒழுங்குமுறை அமைய வேண்டுமேயானால் உடலை வளைத்துக், களைத்துக் கருமங்களை செய்ய வேண்டிய வனாகின்றான். பொழுதுகளை எளிதாக சந்தோஷகரமானதாக்க நாம் ஆற்றும் பணிகள் தானே துணை செய்கின்றன? வேலைவெட்டி இல்லாதவன் பொழுதுகளைக்கரைக்க ஏதேதோ கெட்ட வழிகளில் புலனைச் செலுத்துகின்றான். வேலை செய்யாது விடின் கால ஓட்டத்தில் மனித உறுப்பின்கலங்கள் அழிந்துகொண்டே போகும் என்கின்றார்கள். எமது ஆரோக்கியத்தை நாம் வலுவேற்றினால் உடற் கலங்கள் உறுதிபெறும் நாளாந்தம் தொழில் செய்வோர்க்கு இந்தப் பிரச்சனைகள் எழுவதேயில்லை.
எமது மனம் சதா களிப்புடன் திகழவேண்டும். சோம்பல் தொட்டால் எல்லாமே சூன்யமாகத் தோன்ற ஆரம்பிக்கும். இந்த நிலையை எவர்தான் விரும்புவார்கள்? எங்களுக்கான சந்தோஷ சாம்ராஜ்யத்தை நாங்களே தான் உருவாக்க வேண்டும் "உழைத்தல்" என்பதைத்தவிர இன்ப சுகானுவம் வேறு என்ன இருக்கப்போகின்றது அன்பர்களே!
வசீகரம்
எல்லா ஜீவராசிகளையும் இரக்கத்துடனும், அன்புடனும் நோக்கு பவர்களுக்கு "வசீகரம்' தானே வந்துவிடுகின்றது. இயற்கையை ரசிக்கத் தெரிய வேண்டும். நல்ல ரசனை உணர்வு களிப்பினை உண்டாக்கி ஒரு மலர்ச்சியை ஏற்படுத்திவிடும், "எல்லோருமே எமக்குரியவர்”என்கின்ற உன்னத நோக்குடனும் பரந்த உள்ளத்துடனும் எமது பார்வையைச் செலுத்தினால் எம்மை நோக்கி இந்த அகிலமே வந்து நிற்கும். இதனால் ஏற்படும் “மகிழ்ச்சி” நிலையே எமது ஆன்ம சக்தியுமாகும். இனிமேல் தான் சந்தோஷம் வரும் என்று நோக்காது என்றும் நாம் சந்தோஷமாக இருப்பவர்கள் என எண்ணினாலே வசீகரிக்கப்பட்ட மனிதராகிவிடுவோம். ار
நல்லமனசுடனும் மாறா அன்புடனும் மக்களை நேசிப்பவர்கள் "வசீகரம்” மிக்கவர்களாகப் பிரகாசிக்கின்றனர்.ஒருவரைப் பார்த்த மாத்திரத்தே நாம் அவர்பால் ஈர்க்கப்பட்டால் அவரிடமிருந்து ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணரலாம்.
ஒரு ஆன்மீகவாதியாகவோ, அன்றி அரசியல், சமூக நல விரும்பிகளாயினும் சரி அவர்களிடம் மக்கள் எதற்காக ஈர்க்கப்படல் வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? சிலருடன் பேசும்போது அவர்களை விட்டு விலக மனம் ஒப்புதல் அளிப்பதில்லை அது ஏன்?
பொதுவாக நல்ல மனிதர்கள் எல்லோர் உள்ளங்களையுமே கொள்ளை கொண்டு விடுகின்றார்கள். பார்க்கும் உயிர்களிடத்தே அன்பினைக் காட்டினால் இயல்பாகவே அவர்களை அனைவரும் விருப்பத்திற்குரிய ஒரு நபராக ஏற்றுக் கொண்டு விடுவார்கள். ஆனால் பொய்யான நடிப்பை நம்பி ஒருவர் பின்னால் திரிபவர்கள் விடயம் வருத்தத்துக்குரியதே. கால ஓட்டம் இவர்கள் பற்றிய நிதர்சனங்களைக் காட்டிவிடும். ஆயினும் தப்பான மனிதர்களை நம்பி ஈர்க்கப்பட்டவர்களின் விரும்பத்தகாத அனுபவங்கள் அழிக்கப்படாத வடுக்களாகிவிடுகின்றனவே. என்செய்ய? கல்வி ஞானம் மட்டும் இருந்தால் போதுமா?
மேலான ஒழுக்கம் எவரையும் மதித்து நடக்கும் இயல்பு தன்முனைப்பு இன்மை சுயநலமற்ற போக்கு இவை போன்ற குணாம்சங்கள் கொண்டவர்களால் மட்டுமே நல்ல மனிதன் என்கின்ற பெயரையும் தமதாக்கிக் கொள்ள முடியும்.
வசீகரம் என்பதில் "அழகு" மட்டுமே பிரதானம் என்று சொல்ல முடியாது. அழகானவர் என்று சொல்லிக் கொள்ள முடியாதவர்களைச் சுற்றியும் பலர் அன்புடன் பழகுவதை நீங்கள் பார்த்தது இல்லையா? மேலும் அழகானவர்கள் எனக் கருதமுடியாதவர்கள் தலைவர்களாக வந்துமிருக்கின்றார்கள்.
பண்பானவர்களைக் கண்டால் அழகுபற்றிக் கிஞ்சித்தும் எவரும் நோக்குவதில்லை. அழகானவர்கள் எனக் கருதும் எல்லோரும் மனம் கவரும் நல் நடத்தையுடையவர்கள் என்று சொல்லமுடியுமா?
திருமணமான ஆரம்ப காலத்தில் தனது மனைவி அல்லது கணவன் தாங்கள் கற்பனை செய்த அற்புத அழகியாக அல்லது அழகனாக இல்லையே என ஆதங்கப் பட்டவர்கள் கால ஓட்டத்தில் அவர்தம் நடத்தை நெறியினால் இணைபிரியாத தம்பதியர்களாய் ஒரு எடுத்துக்காட்டான குடும்ப வாழ்வை காட்டி வாழ்ந்த கதைகள் ஏராளம்.
எவ்வளவு தான் படித்துப் பட்டம் பெற்றுப் பொருள் ஈட்டி சமூகத்தில் உயர் அந்தஸ்தினைப் பெற்றுவிட்ட போதிலும் கூட நெஞ்சில் கனிவு இன்றேல் அவர்கள் மரத்துப் போன மனிதர்கள் தானே?
இயற்கையின் அரும் கொடைகளான சகல ஜீவரா சிகளையும் இரக்கத்துடன் கனிவுடன் நோக்காதவர்களிடம் வசீகரத்தை எப்படி எதிர்பார்க்கலாம்? வானில் சந்தோஷமாக பறந்து திரியும் பட்சிகள், துள்ளியோடும் அணில்கள், மான்கள்,முயல்கள், வர்ணம் காட்டி சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள், துறுதுறுவென ஓடித்திரியும் சிறார்கள், குழந்தைகள், குறும்புடன் சிரிக்கும் அழகு, இந்த அழகு மிகு உயிர்ச்சிற்பங்கள் எல்லாமே எங்களை மெய்மறந்து, ரசனையூட்டி, வசீகரிக்கின்ற நிகழ்வுகளை எப்படி எம்மால் வார்த்தைகளால் எழுத்துக்களால் வர்ணிக்க இயலும்? சொல்லுங்கள் பார்ப்போம்!
இரசிக்கத் தெரியாதவன் நல்லவற்றை விரும்பத் தெரியாதவன், "வசீகரம்” கொண்டவனாக இருக்க முடியுமா? ரசனை உணர்வு இல்லாதவன் கலைஞனாக முடியாது. கலைஞர்களை வசீகரமானவர்கள் என்று சொல்வ தானது, அவர்களது ரசனை உணர்வும், மக்கள் பால் அவர்களைக்களிப்பூட்டுவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நன் முயற்சியுமாகும்.
கள்ளமில்லா, வெள்ளையுள்ளம் கொண்டவர்கள் எத்தகைய காரியங்களையும் அப்பாவித்தனமாகச் செய்யும் போது அதனை ஏனையவர்கள் ரசிக்கின்றார்களேயொழிய அவர்களை வெறுப்பதில்லை. வயது முதிர்ந்தவர்களுடைய அனுபவரீதியான பேச்சு, செயல்கள்கூட எம்மை வசீகரிக்க வைத்து விடுகின்றதே!
எங்களைவிட ஆற்றல் மிகுந்தவர்களை நாம் இயல்பாகவே கண்டு வியந்துவிடுகின்றோம். எமக்குப்பிடித்தவர்கள் உன்னத நிலையில் இருந்தால் அவர்களை எடுத்துக் காட்டான நபர்களாக இதயத்தில் குடியிருத்திவிடுகின்றோம். ஒரு நல்ல கலைஞனை, விஞ்ஞானியை, அரசியல் தலைவர்களைப் பற்றி நாம் தெரிந்ததுமே நாங்களும் அப்படி வந்தால் என்ன என்று கருதுவது இயல்பேயாகும்.
ஆயினும் இன்றைய இளைய தலைமுறையினர் திரைப்பட நடிகர்கள், பாடகர்கள், விளையாட்டு வீரர்களை மட்டுமே தமது விருப்பத்திற்குரிய உன்னத அந்தஸ்தில் உள்ளவர்களாகக் கருதிவிடுகின்றார்கள். அவர்களது உருவப்படங்களை வீடுகளில் பொருத்துவதும் அவர்கள் போலவே நடையுடை பாவனைகளை மாற்றுவதும் சர்வசாதாரணமான விஷயமாகிவிட்டது.
ஆனால் இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் ஒரு விஞ்ஞானியை, ஒரு பேராசிரியரை, மிகப்பெரும் அரசியல் தலைவர்களை, எமக்கு வாழ்ந்து காட்டிய ஆன்மீக வாதிகளை, நல்ல முற்போக்கான சிந்தனை வாதிகளைத் தமது அதி விருப்பத்துக்குரிய மாந்தராகக் கருதாமல் விடுவதும் அவர்கள் வாழ்ந்த முறைகளைத் தெரியாமல் இருப்பதும் பெரியவேதனையன்றோ! கொஞ்சம் இதுபற்றி இந்த இளையோர் கருதிச் செயல் பட்டால் என்ன?
எங்கள் எதிர்காலம் செவ்வனே அமைய நல்லனவற்றை மட்டும் நாடுவது என்பது எங்களை நாம் முழுமை யானவர்களாக மாற்றியமைப்பதற்கேயாகும்.
எந்த விதக் கொள்கையுமின்றி வெறும் நிழல் தோற்றங்களைக் கண்டு அதனால் எதிர்கால நலனுக்கு எந்தவித பயனுமின்றி கலைந்த அழகுடன் தம்மை அகத்திலும், புறத்தோற்றத்திலும் மாற்றியமைப்பதில் செழிப்பைக் கண்டுவிடப் போகின்றார்கள்? இத்தகையவர்களிடமிருந்து அறிவுவிடைபெறுவதுடன் எதிர்கால நலனும் பிறர் விரும்பி நயக்கும் வசீகரமும் பேசாமல் போய்விடும்.
இன்று பலர் சொல்லும் வாக்கியம் இது தான். மிக விரக்தியுடன் சொல்வார்கள் "நான் வசதியில்லாதவன். எனவே என்னை ஒருவரும் நோக்குவதில்லை. பாரா முகமாகப் போகின்றார்கள்" என்பது தான். உண்மையில் வசதிக்குறைவு என்பதால் மற்றவர்கள் எங்களை நோக்குகின்றார்கள் இல்லையெனக் கருதுவது அவர்கள் தாழ்வுச் சிக்கலால் சொல்லப்பட்ட கருத்தாகும்.
பிறருடன் கரிசனையுடன் பழகுபவர்களை எவருமே நிராகரிப்பதுமில்லை. தாங்களாகவே கற்பனை செய்து சமூகத்தின்மீது பழியை அவதூற்றினை விதைப்பது தகாது. யாராவது உங்களைக் கண்டு முகத்தைத் திருப்பினால் அவர்களை நீங்களும் அவ்வண்ணமே கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டாம். தக்க சமயத்தில் அவர்களுக்கு ஒடோடிச் சென்று உங்களால் இயன்ற உச்சபட்ச உதவி களை நல்குவீராக! இதனால் உங்களைப்பற்றிய தெரியாத்தனமாகக் கொண்டிருந்த தவறான கணிப்பீடுகள் துண்டிக்கப்பட்டுவிடும். தங்களை எல்லோருமே விரும்ப வேண்டுமென எவர் தான் எதிர்பார்க்காமல் இருக்கின்றார்கள்?
சில விசித்திரமான நபர்கள் இருக்கின்றார்கள். தங்களை மட்டுமே தான் விரும்பும் நபர்கள் விருப்பம் கொள்ளல் வேண்டும். வேறுயாராவது தமக்கு விருப்பப்பட்டவர்களுடன் பேசிப்பழகினால் ஆத்திரப்பட்டு விடுகின்றார்கள். அதிகூடிய அன்பினால் விளைந்த இந்த விபரீத எண்ணம் தவறானது எனப் புரியவைப்பது கஷ்டமானது தான். பொதுவாக காதலர் நண்பர்கள் மத்தியில் இந்த உணர்வுகள் மேலோங்கி இருப்பதைக் காணலாம். பக்குவமாகப் பேசி இத்தகையவர்கள் இயல்பை மாற்றியமைக்க வேண்டும்.
மேலும் நாட்டின் பெரிய தலைவர்களை மக்களில் பலரும் அவர்களைத் தமக்கேயுரிய தலைவன் என்று சொந்தம் கொண்டாடுவதானது மக்கள் மீது இத்தகையவர்கள் கொண்டுள்ள ஈடுபாடு, உண்மை, நேர்மை, அன்பினைப் புலப்படுத்துவதுமாகும். இந்த உரிமை மிகு எண்ணமே அவர்களது வசீகர சக்தி என்பது சொல்லாமலே புரிந்து கொள்ளும் சங்கதியன்றோ!
"எல்லோருமே வல்லமைமிகு அன்புக்குள் உள்ளானவர்கள்” என்கின்ற உன்னத நோக்கை,பண்பாட்டை எம்முள் உருவாக்கிக்கொள்ள வேண்டுமல்லவா?
சிலஅப்பாவிச்சனங்கள் வசியம் , மந்திரம் என்று சொல்லித் தமக்கு வேண்டிய கருமங்களையாற்ற மாந்திரீகவாதிகளை நாடுவதுமுண்டு. ஒருவரை விரும்பவைக்க எங்கள் இதயத்தை விட வேறு என்ன சாதனம் வேண்டும் ஐயா? அன்பினைக் காட்ட என்ன செலவு வேண்டிக் கிடக்கின்றது?
விலை மிகுந்த ஆடை அணிகலன்கள், இரசாயனப் பூச்சுக்களால் மட்டும் வசீகரத்தினை உண்டு பண்ண முடியுமா? இயற்கைப்படைப்புக்களான பட்சிகளும், விலங்குகளும், மரம் செடி கொடிகளும் செலவு செய்து உடையுடுத்தா எங்களை ஈர்க்கின்றன? அழகான சிங்கத்தை கூண்டி லிட்டு ஆடைகொண்டு மூடி ரசிக்கலாமா? பஞ்சவர்ணக் கிளிக்குப் பட்டாடை போர்த்தித்தான் அதனைப்பார்க்க வேண்டுமா? பச்சைப் மரங்களுக்குப் பச்சைக் கம்பளம் போர்த்தி அழகு பார்க்க முடியுமா? இவை எல்லாமே இயற்கையான அழகுடன் இயற்கைச் சூழலில் வளமாகச் சீவிக்கின்றன.
மனிதன், தன்மானத்தைக் காப்பாற்ற எளிய உடைகளே போதுமானது மேலதிகமான ஆடம்பரச் செலவுகள் நகை, ஆபாரணங்களை சதா விரும்புவது அதன் பொருட்டு மனதை அல்லாட விடுவதும் எளிமை மிகு நல்வாழ்விற்கு உகந்ததன்று எனத் தெரிந்தும் நாம் இந்த விருப்புக்களை உதறாமல் விடுவது ஏன் என்றும் புரியவில்லை.
உலகம் உங்களிடமிருந்து எதை எதை எதிர்பார்க்கின்றதோ அவைகளை நீங்கள் உங்கள் ஆற்றல், கல்வி, விடாமுயற்சிவாயிலாக உற்பத்திசெய்து வழங்கிவிடுங்கள். இத்தகைய செயல்களினால் அனைத்து மனிதர்களும் உங்கள் பால் ஈர்க்கப்படும் உன்னத மனிதனாக உயிர்ப்புள்ள நபராக நீங்கள் உருவாகி விடுவீர்கள்.
வெறும் சடப்பொருட்களைக் கண்டு மோகிக்கும் நபராக சனங்கள் இருக்கின்றார்கள் என்று பெரியோர்கள் சொல்லிக் கவலைப்படுவதுண்டு. மனிதர்களைச் சம்பாதிப்பதை விடுத்து அசையாத சொத்துக்களையும், நவீன கவர்ச்சிமிகு பொருட்களை வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர் பொருட்களை மிதமாகச் சேகரிப்பதும் காலவிரயமானதே. வசதிகள், வாய்ப்புக்கள் கூடச் சிலவேளை எங்களை பிறரிடமிருந்து விலக்கி வைத்து விடுகின்றது. "எந்நிலைவரினும் தன்நிலை மாறாத வரம் தா" என நாம் இறைவனை வேண்டுதல் செய்வோமாக!
ஒருவரது அன்பான புன்முறுவலும் மலர்ந்த நோக்கு கையும், எங்களை வசீகரிப்பது போல் நாமும் எங்கள் வதனத்தை சதா புதுமுழு நிலவுபோல் நிரந்தரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். முக வசீகரம் என்பது உள்ளத்தினுள் இருந்து புஷ்பிக்கப்படுவதேயாம். அகத்தின் அழகு, எங்கள் புன்னகையூடு புலப்படுத்துவதாக! மகிழ்ச்சியாக இருப்பவனிடம் கவர்ச்சியும், வசீகரமும் தானாக வந்து விடுகின்றது. துன்பம் மேலோங்கியுள்ள வனிடம் எப்படி நாம் இன்முகத்தை இயல்பான சந்தோஷங்களை எதிர்பார்த்திடல் முடியும்? எனவே மகிழ்ச்சியானவர்களாக இருக்கவேண்டும். உள்ளத்தில் பாரங்களைச் சுமந்து கொண்டிருப்பவர்களிடம், "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயன்று பாருங்கள்” என்று சொல்வது சில வேளை அவர்களை ஆத்திரமடையச் செய்வதும் போலாகும். கனிவோடு பேசி அவர்கள் துயர்களைய முனைபவர்கள் ஆகுங்கள்!
நல்லோர் உறவு, நல்ல நண்பர்கள்,இனபந்துக்கள் ஆதரவுகள் இருந்திட்டால் எமது துயர்களைக் களைவது இலகுவாக இருக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாகத் துணிவு, ஆற்றல், அன்புணர்வு இல்லாதுவிடில் எங்களது பிரச்சினைகளை எங்ங்ணம் தகர்க்க முடியும்? எங்களை வலுப்படுத்தாதுவிடில் சுற்றி நிற்பவர்களது உதவிகளினால் பூரணமான பெறுபேறுகிடைத்திடுமா? நாங்கள் சந்தோஷத்திற்குத் தயாரான நபர்களாக அன்பைப் புரிந்தவராக அதனை முழுமையாக ஏற்பவராக இருக்க வேண்டு மல்லவா?
எதனையும் எதிர்மறையாக நோக்காமல் குரோதம், காழ்ப்பு:அற்ற நினைப்பு அற்றவர்களே மற்றவர்களைத் தன் அருகே அழைக்கின்ற பக்குவத்தைப் பெற்றவராகின்றனர். மகிழ்ச்சி என்பதை நாளைக்கு என்று எண்ணாமல் இன்றைக்கே இதனை உருவாக்குவோமாக! தெளிந்த மனோநிலையும் சீரான வாழ்வின் வளர்ச்சியும், பயனை மட்டும் பிறரிடம் இருந்து பறிக்க எண்ணாத பரோபகார சிந்தனையும் "அவர் என்னவர் எல்லோரும் நம்மவர்" என்கின்ற பரந்த அன்பினைக் காட்டும்திறன்வாய்ந்து நின்றால் நாங்கள் எல்லோருமே வசீகரம் மிகுந்த ஆன்மா வாகிவிடுவோம்.
போலியாகத் 。 தங்கை மறைத்து, மனதினுள்களிம்பை அழுத்தி, வெளியே சிரிப்பதனாலும் வசீகரம் புறப்பட்டு வந்துவிடுமா?
மனித நடத்தைகளே வசீகரத்தைக் காட்டி நிற்கின்றன. அனுபவ ஞானமும், அறிவும் நல் இதயமும் கொண்டோரின் முகத்தில் “தேஜஸ்” மிளிர்வதை நீங்கள் கண்டதில்லையா?
இதுவே தூய்மையின் அடயாளம்.
03.06.2008
னது கருத்து இது என நாம் கண்டபடி பேச முடியாது. உங்கள் நல்ல கருத்துக்கள் தானாகவே மக்களிடம் போய்ச் சேரும். அநாகரிகமாகத் கருத்துக்களைத் திணிப்பது மனித உரிமை மீறல்கள் தான். எமது மனம் விரும்பாமல் எப்படி எதனையும் ஏற்பது? அந்தஸ்து உள்ளவர்கள் எதைச் சொன்னாலும் கேட்க வேண்டும் என்பதுமில்லை. எங்கள் சிந்தனையில் தெளிவு வேண்டும். கருத்துச் சுதந்திரம் எவர்க்கும் உரியது. அதனைத் தகுந்த முறையில் பிரயோகிக்க வேண்டும். அனுபவஞானம் உள்ளவர்களிடம் நல்ல கருத்துக்கள் உதயமாகின்றன. எவர் நாவில் இருந்து நல்ல விடயங்கள் சொல்லப்படுகின்றதோ அதனை கருத்துக்களை முரண்பாடுகளாக்கிக் கரைச்சல்பட்டுக் கொள்வதே உலக வழக்கமாகிவிட்டது. ஒருவரது எல்லாக் கருத்துக்களையும் கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அதற்காக இது எனதுகருத்து எனச்சமூக நாகரீகமின்றிக் கண்டபடி பேசுவதும், வன்முறையாக வார்த்தையாடுவதும் தனிமனித சுதந்திரம் என்று சொல்லித்திரிய முடியாது. வாய் இருக்கின்றது என்ற காரணத்தினால் வாயாடித் தம்மைத் தாமே நாகரீகமற்ற மனிதனாக்கப் பிரயத்தனப்படுவது கண்டனத்திற்கும், கேலிக்குமுரிய சமாசசாரமாகும். தேவையற்ற கருத்துக்களால் ஒருவர் மனதை நொருங்கச் செய்தல் சரியானது என எவர்தான் சொல்லுவார்கள்?
மற்றப்படி நல்ல கருத்துக்களை நாம் வரவேற்போம் செவிமடுப்போம். எமக்குப் பிடிக்காதவர் நல்லதைச் சொன்னால் வீண் விதண்டாவாதம் செய்யாமல் ஏற்றுக் கொள்வதுடன் அதனைப் போற்றுதலும் செய்வோமாக!
எங்கள் கருத்துக்கள் என்றாலும் சரி பிறரது கருத்துக்கள் என்றாலும் சரி அது அவரவர் எண்ணங்க ளூடாக உதிப்பது இவற்றை நாம் எப்படி அழிக்க முடியும்? ஆயினும் நல்ல சிந்தனைகளை நாம் சிந்தித்துச் சொல்லும் போது அது மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். எங்கள் நல்ல கருத்துக்களைப் பிறர் செவிமடுக்கவில்லையே என ஏக்கப்படுவோர் ஏராளமாக இருக்கின்றனர். சமூகத்தில் ஏதாவது அந்தஸ்தினை ஒருவர் பெற்றுவிட்டால் போதும். அவர் எதனை உளறினாலும் உலகம் கேட்கின்றது. பாராட்டவும் செய்கின்றது. இந்த மாதிரியான நிலைபற்றிப் பெரியோர்கள் வருத்தப்படுவது முண்டு. முட்டாள்கள் பேசுவதைக் கேட்டபவர்கள் அவர்கள் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைப்பதற்காக"ஆமாம்சாமி” போடுவார்கள். இவையெல்லாம் ஒரு பொய் நடிப்புத்தான்.
யாரோ ஒரு வசனகர்த்தா கதைவசனம் எழுதவும், ஒரு அற்புதக் கவிஞர் தனது அனுபவவாயிலாக பாடல் எழுதிடவும், திறமையான இசை அமைப்பாளரா இசை அமைக்கப்பட்ட அந்தப் பாடலை ஒரு நல்ல பின்னணிப் பாடகள் பாடிடவும் இவைகளை ஒரு நடிகள் பேசுவது, பாடுவது போல் வாயசைப்பதும், அவை அந்த நடிகரின் கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டுப்பாராட்டப்பெறுவது என்ன நியாயம் ஐயா?
ஆனால் இன்று ஒருவரது வித்துவத்தைத் திருடும் பணிவலு நாகரிகமாக உலகில் நுளைந்துவிட்டது.இதில் வேதனையான அம்சம் என்னவெனில் நல்ல ஆலோசனை கருத்துக்களைச் சொல்பவர்களைப் பிடிக்காத தலைவர்கள் அவர்களை நிராகரித்தும் விடுகின்றார்கள். ஒரு தோன்றாப் பொருளாகவே பல சிந்தனையாளர்கள் மறைக்கப்பட்டே விடுவதும் மறுக்கப்பட்ட பிரகிருதிகளாக உரு அழிந்து போவதும் வேதனையோ வேதனை. நல்ல கருத்துக்களை அள்ளி வீசுபவர்கள் சொல்லும் சொல்லில் ஒரு வீதத்தையாவது கடைப்பிடிக்க முன்வருகின்றார்களா? ஆனால் எதுவுமே பேசாது செயல்படும் வினைத்திறன் மிக்கவர்களை நாம் கண்டு கொண்டால் அவர் வழி செல்வதும் அவரைப் போற்றுதலும் எம் தலையாய சமூகப்பொறுப்பு என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
தகுந்த சந்தர்ப்பத்தில் இடத்தின் நிலை உணர்ந்து கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும். எடுத்த எடுப்பிலேயே முன்னே நிற்கும் மூர்க்ககுணம் கொண்டோரிடம் "நான் உபதேசம் செய்கின்றேன்" என்று சொல்லப்போய் அவமானப்படக்கூடாது. எங்கள் பேச்சை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க விதமாகவும், அவர்களின் மனதைத் தொட்டுக் கொள்ளும் சாமர்த்தியத்தை ஏற்படுத்திக்கொள்ள நாம் கற்காதவரை எங்கள் முயற்சி பயனற்றதாகவே அமையும்.
மேலும் உள்ளத்தில் வஞ்சக எண்ணத்துடன் பேசும் உபதேசங்களால் அதனை உதிர்ப்பவர்கள் ஈற்றில் பெரும் சிரமங்களையே எதிர்நோக்குவர் கபடமாகப் பேசுவதால், தமது கருத்துக்கள் நியாயமானவை என்று எவ்வளவு காலத்திற்கு பிறரை நம்பச் செய்யமுடியும் சொல்லுங்கள். அர்த்தமேயில்லாமல் சப்தமிட்டுப் பேசுவதால் அவர்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
அனுபவ ஞானமற்றவர்களுக்குச் சரியான பாதை காட்ட வேண்டியவர்கள் யதார்த்தத்திற்கு ஒவ்வாத புத்தி மதிகளைக்கூறி இத்தகையவர்களை மயக்கமுறச் செய்வது முண்டு. எனவே நம்பிக்கையற்ற கண்டவர்களிடமும் வாயைக் கொடுத்து பொய்மொழி புனைகதைகளைக் கேட்க வேண்டியதுமில்லை.
கருத்துச் சுதந்திரம் என்று இன்று எல்லோரும் அதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். எங்கள் பேச்சு எழுத்து என்பது எமக்குரியது. ஆயினும் பிறர் சுதந்திரம் நிம்மதிகளுடன் எமது தனிப்பட்ட சொல்லும் செயலும் உள்நுழைந்து அவர்களைச் சங்கடப்படுத்திவிடக்கூடாது.
ஒரு தனிமனிதனின் சுதந்திர உணர்வுகள் செயல்கள் ஒருவனை மட்டும் இன்று பாதிப்பதாகவில்லை. ஒட்டு மொத்த சமூகத்தினைக் கூடப் பாதிப்படைவதாகவே கருதப்படுகின்றது. நல்ல விதைகளை விட நச்சுவிதை களுக்கே முளைக்கும் வீச்சு அதிகமாகிவிட்டது.
பாதிப்படைந்தவனைச் சீண்டிப்பார்ப்பதே சிலரது வழக்கமாகிவிட்டது. தர்மக்கருத்துக்களைவிடுத்து ஆவேசக் கருத்துக்கள் விலைபோகின்றன. இவையெல்லாம் மனதை அரிக்கும் விஷயம் என்பதைக் காலம் அவர்களுக்குக் கற்பித்துவிடும்.
நல்ல விஷயங்கள் மழுங்கடிக்கப் படுவதாலேயே பொய்மைகள் புதிது புதிதாக அழகு தரும் தோற்றங்களைத் தாமே தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. பலமுள்ளவனுக்கே பேசும் சுதந்திரம் இருக்கின்றமை நல்லதற்கு அல்ல! பத்துப்பேர் இருக்கின்ற இடத்தில் தங்களது வித்துவத்தைக் காட்டச் சிலபேர் எந்தவித தொடர்புமற்ற சம்பந்தமேயில்லாத பேச்சுக்களை அள்ளிவீசுவார்கள். இதனால் அவரது தகுதியை அக்கணமே எல்லோரும் தெரிந்து கொண்டு விடுவார்கள். சபையறிந்து பேச வேண்டும் என்பார்கள். ஒரு கூட்டத்தில் பேச எழுந்தால் அங்குள்ள மக்கள் எப்படிப்பட்ட விடயத்தினை உள்வாங்கும் இயல்பு உள்ளவர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் கூட்டத்தில் சமய, அரசியல், விஞ்ஞான தத்துவங்களைப் பற்றிய கருத்துக்களை அள்ளிவீசக்கூடாது. பெண்கள் கூட்டத்தில் எழுந்து மகளிரைக் கேலி செய்யும் கருத்துக்களைச் சொல்லித் தப்பித்துக் கொள்ளமுடியுமா?
விஞ்ஞானிகள் கருத்தரங்கில் கல்வியறிவில்லாத திரைப்பட நடிகரைப்பேசச் சொன்னால் என்ன பேசித்தீர்ப்பார்? எனவே பேச வேண்டிய இடத்தில் பேசுதற்குரிய நபர் களே தங்கள் கருத்துக்களைச் செவ்வையாகச் சொல்ல முடியும். சந்தர்ப்பம் அறியாமல் எங்கள் கருத்துக்களைச் சொல்ல முடியுமா?
தேர்தல் முடிவு அறிந்து தோற்றுப்போய்க் கலங்கிய நிலையில் உள்ள வேட்பாளர் முன் நின்று "உங்கள் தவறுகள் தான் உங்கள் தோல்விக்குக் காரணம்” என்று அந்த நேரத்தில் சொல்லக் கூடாது. கருத்துக்கள் புறப்படும் போது அதை வெளிக்கொணரமுன் அந்த நேரத்துச் சூழல் சூழ்நிலைகளைக் கவனிக்கவேண்டும். எங்களுக்கு ஒவ்வாத பழக்கமற்ற புதிய சூழலில் "துணிச்சலாகச் சொல்கின்றேன் எனச்சொல்லி அவமானப்படுதல் கூடாது.
ஒன்றையுமே தீர ஆராயாமல் தெரிந்துகொள்ள விழையாமல் எங்கள் அபிப்பிராயத்தைக் கூறினால் வரும் விளைவு சொல்லும் தரமன்று. மேலும் பொது இடங்களில் கண்டபடி கருத்துக்களை வெளியிடல் பாதுகாப்பான விஷயமும் அல்ல. முதலின் மனிதர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மிகவும் பலம் வாய்ந்த அங்கத்தினர் எங்கள் பக்கம் இருந்தாலும் கூடச் சிலவேளை மிகச் சாதாரணமானவர்களால் மிகப்பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனக்கு என்ன? எவரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னவர்களைச் சந்தர்ப்பம் வரும்போது "வலு" அற்ற சாமான்யமானவனே காலைவாரி விடும் நிலை வந்தால் அது புதுமையல்ல.
எம்மை மற்றவர் ஏற்றுக்கொள்ளும் நிலையை நாம் உருவாக்க வேண்டும். ஆணவமுனைப்போடு எல்லாமே தெரியும் என்று அலட்சியமாக நோக்குபவர்களை எவர்தான் விரும்பி ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள்?
நல்ல திறமைசாலிகள், அறிவாளிகளின் கருத்துக்கள் கூட உலகின் முன் துலங்காமல் போவதற்கு அவர்களின் மக்கள் மீதான அணுகுமுறைகளும் ஒரு காரணமாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உங்கள் கருத்துக்கள் சிறப்பானதாக இருக்குமிடத்து அதை மக்களிடம் சென்றடைவதற்கான முறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.
* அமைதியாக
* தெளிவாக * நேயப்பாட்டுடன்
• எவ்வித திணிக்கும் முயற்சியின்றி
உங்கள் கருத்துக்களை வெளிக்கொண்டு வாருங்கள். உங்களை பிறர் ஏற்கும் பக்குவம் பெறுதற்குப் பொறுமை மிகவும் அவசியமானது எமக்குத் தெரிந்த சீரியநுட்பமான விஷயங்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துதல் ஒரு சமூக நல கைங்கரியமுமாகும்.
நல்ல விஷயங்கள் எங்கும் போய்ச் சேரவேண்டும். "நான் சொல்லும் நல்ல விஷயங்களைப் புதிய கருத்துக்களை எவரும் கேட்பதில்லை. எனவே நான் இனிமேல் எந்தவித உதவிகளையும் எவர்க்கும் செய்யப்போவ தில்லை” எனச் சிலர் பிரதிக்ஞை செய்துகொள்கின்றார்கள்.
சிலவேளை அறியாமை காரணமாக நல்லவர்களை நாடாமல் மக்கள் இருந்தால் அதனை எண்ணி மனம் சோர்வடைந்து போகக்கூடாது சமூகத்தின்பால் எமக்கான அக்கறையில் பின்னடைவு சோர்வு பின்னிப்பிணைதற்கு அனுமதித்தால் உலகம் எங்களை மன்னிக்கவேமாட்டாது.
உலகம் பல நல்ல தகவல்களைத் தாமதமாகவே பெற்றுக் கொள்கின்றது. கடுமையாக உழைப்பவர்கள் பிறர் விமர்சனங்களை தூற்றுதல்களை செவிமடுத்து செயலற்றுப் போவதுமில்லை. நடக்கின்ற ஏதாவது சம்பவங்கள் தவறாக முடிந்தபின் அவைபற்றிக் கண்டபடி பேசுவதும் விமர்சிப்பதிலும் பயனில்லை.
முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் கூட தங்கள் கருத்துக்களைக் கூறிப் பொதுஇடங்களில் வாய்த்தர்க்கம் செய்து பின்னர் கைகலப்பில் ஈடுபடும் மோசமான பேர்வழிகளை நாம் அடிக்கடி காண்பதுண்டு. அடுத்த நிமிடம் பிரிந்து போகும் மனிதரிடம் தங்கள் கொள்கைபற்றித் தாறுமாறாகச் சொல்வதும் தமக்குப் பிடிக்காத கட்சிகளை அல்லது நபர்களைத் திட்டி விமர்சனம் செய்வதும் இதனால் பலரின் முன் அவமானப்பட்டு வாங்கிக்கட்டும் கோணங்கிகளைக் கண்டால் அனுதாபம், தானே வரும்?
• தீட்சண்யமான நோக்கு கொள்கைப் பற்றுதல் * ஆராயும் திறன் * எதனையும் கற்றுக் கொள்ளும் விருப்பு
• தன்முன்னே உள்ளவர்களைப் புரிந்து கொள்ளுதல் * நேயஉணர்வு.
இத்தகைய இயல்புடையவர்களின் கருத்துக்கள் சரியானதாகவே இருக்கும் என்பதனால் மக்கள் மிக இயல்பாகவே அவர்கள் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுவிடுகின்றார்கள். மேற்சொன்ன குணாம்சங்கள் ஒருவனது ஆளுமையை நன்கு விருத்தி செய்கின்றது.
சிந்திக்கத் தெரியாதவன் கருத்துக்களைக் கூற அருகதையற்றவன். சும்மா ஏதாவது சொல்லிவிட்டுப் போவதானது அறிவுடன் இணைந்து கொள்ளாது ஒரு வெற்று இடத்தைத்தேடிப் போகும் நிகழ்வுதான்.
"மெளனம்" கூடச் சொல்ல இயலாத கருத்துக்களைச் சொல்லி முடிக்கின்றது. பேசி அவஸ்தைப்படுதலைவிட பேசாமல் இருப்பதுவே உத்தமம்.
குடும்பங்களில் அமைதி நிலைத்திருக்க வேண்டுமேயானால் கண்டபடி பேசுதல், எதிலும் தலையிடுதல் மனம் வருந்த வார்த்தைகளைச் சொல்லுதலைத் தவிர்த்தல் உத்தமமானது. உரிமை இருக்கின்றது என்று மனைவி பிள்ளைகளுக்கு அவர்களுக்கு ஒவ்வாத தமது கொள்கைகளைத் திணிப்பது என்ன நியாயம்? பாடசாலைகளில் சில ஆசிரியர்களின் கருத்து தவறு எனக் கண்டால் புத்திசாலி மாணவர்கள் கண்டு கொண்டு விடுகின்றார்கள். எனினும் மாணவனின் சரியான கணிப்பீடுகள் புத்திசாலித்தனத்தை எல்லா ஆசிரியர்களுமே ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்துடன் இருப்பார்களா? என்பதுவே கேள்விக்குரிய விஷயமாக உள்ளது.
நம்பிக்கைக்குரியவர்களின் பேச்சைக்கேட்டே நாம் பழகிவிட்டோம். அது சரியோ அன்றித் தப்பானதோ எனச் சிந்திக்கவும் நாம் தயாரில்லை உள்ளதை உள்ளபடி அறிய பல விவரச் அறிவுக்கு நாம் அவகாசம் கொடுப்போம்.
நல்ல கருத்துக்களைச் செவிமடுக்காதுவிடின் முக்கியமான விஷயங்கள் எல்லாமே, நாம் எதிர்பார்க்காத விதமாக நடந்தேறிவிடுகின்றது.நல்ல அனுபவஸ்தர்களின் அறிவுரைகள் எங்களுக்குத் தடைக்கற்கள் போல் தோற்றம் காட்டி விடுகின்றன. இதனால் எங்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் எல்லாமே, துன்பகரமாகப் பிரயோசனமற்றுப் போய் விடுகின்றன.
சகல விஷயங்களுமே எங்களுக்குத் தெரியும் என்கின்ற எண்ணத்தை விடுத்து எவரிடத்தும் ஐயம் தெளிவதே உத்தமமான பண்பு என உணர்ந்து நற்கருத்துக்களை செவிமடுப்பதுடன் அவற்றினை ஏற்று ஒழுகுதலே சிறப்பு என அறிவோமாக!
17.06.2007
எந்நேரமும் உன் பணியில் மனம் நிறுத்தி எவர் செயலையும் வியந்து போற்று மாற்றோரை வீழ்த்துவது போட்டியன்று போற்றும்படி வாழ, போராடி உன்னை நீ முந்து நாம் செய்யும் செயல்களில் ஈடுபாட்டுடனும், அதே சமயம் அதனை சரிவரவும் செய்தல் அவசியமானது. எனவே எமது செயல்களில் பூரணத்துவத்தைப் பெறுத்தற்கான முயற்சியில் வெற்றிபெற்றாலும் அடுத்த இலக்கு நோக்கிய பயணத்தில் முன்னரை விடத் தீவிரமாக இருத்தலே சிறப்பு எனவே ள்மது காரியங்களைப் பொறுத்தவரை "உன்னை நீ முந்து என எமக்குள் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும்.
என்னை நான் முந்துவதானது எப்படி எனக் கேட்கலாம் எமக்கான பணியினை மென்மேலும் வளர்த்து அதி தன் பொருளுமாகும்.
"உன்னை நீ முந்து" என்பது நான் நானாக இருந்து நான் எத்துறையிலும் வென்றிட்ட எனது சாதனைகளை நானே முறியடிப்பவனுமாவேன்.
"நான் நானாக இருந்து வெகு சிறப்பான பணிகளை மேற்கொள்ளுபவனாவேன். நான் பிறருடன் போட்டி போட வேண்டிய அவசியமே இல்லை. எனது செயல்களில் நான் தீவிரம் காட்டி எனது சாதனைகளையே முறியடிப்பவனுமாவேன் பிறருடன் போட்டிபோட்டால் தான் மேலும் வளர முடியும் என்றும் சிலர் கூறுவதுண்டு. இந்தப் போட்டியுணர்வே பலருக்கும்,பொறாமையுணர்வாக மாறிப்போவதுமுண்டு. காழ்ப்புணர்வு, மனக்சிலேசம், போன்றவைகளால் எவருமே நன்மைகளைப் பெற்றுவிடப்போவதில்லை தத்தமது பணிகளைச் செவ்வனே செய்தலே போதுமானது. ஆனால் எவரது கருமங்களிலும் தடை போடல் என்பது அதாவது வாழ்க்கையையே விடை தெரியா அந்தகாரத்தில் அமிழ்த்தி விடும்.
தான் செய்த சாதனைகளையே தானே முறியடித்த விளையாட்டுவீரர்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஒருவர் கல்வி கற்று முன்னேறுதல் என்பது மற்றவர்களின் தராதரத்திலும் தானே பெரியவன் என்பதைக் காட்டுவதற்காக அல்ல நீங்கள் சிரமத்துடன் படித்துப் பெற்ற பதவிளைப் பறிப்பதற்காகவே எனப் பொருள் கொள்ளற்க அறியாமை, பொறாமை முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை, தெளிக!
ஆயினும் இன்றைய யதார்த்த நிலையில் சத்தியத்திற்குச் சவால் விடுவது போல் காரியங்கள் நடைபெறுகின்றன.
போட்டி போடுவது, குறுக்கு வழியில் நுழைந்து செருக்குடன் வாழ எத்தனிப்பதே சாதனையான வேலை எனக்கருதுகின்றார்கள். தவறாகக் கருதுவதே முறைகேடான சமூக விரோதம், வக்கிரபுத்தியுடன் ஒருவரை மோதி முன் எத்தனிப்பது அக்கிரமம்! தன்னை வளர்க்கப் பிறரின் வீணான தலையீடுகளை உடைப்பதே பெரும்பாடாக இருக்கின்றது. இதனால் கால விரயம், மனச்சோர்வு உட்பட பல பிரச்சனைகள் வருத்திச் சுடுகின்றது.
தைரியம் இல்லாதவர்கள் பிறர் தைரியத்தைப் பிடுங்க எண்ணுவதே வேடிக்கை. நோஞ்சான்கள் சாகசம் புரியத்திடமில்லாத காரணத்தால் வல்லமை, ஆற்றல் மிகுந்தவர்களை பின்னால் இருந்து புரளி கிளப்புகின்றார்கள் அல்லது கேலி பண்ணுகிறார்கள். அவர்களைப் புரட்டியெடுக்க விருப்பப்படுகின்றார்கள்.
இத்தகையோர் தங்கள் நிலையுணர்ந்தால் எவருமே தம்மை நிமிர்த்திக் கொள்ள முடியம். ஆனால் அதற்கும் இவர்கள் தயாராக இல்லை.
எங்களை நோக்கிவரும் பொறுப்புக்களுக்கு நாமே உரித்துடையவர்கள். ஆயினும் வரும் பொறுப்புக்கள் எமக்கும், சமூகத்திற்கும் நல்லவையா இருக்க வேண்டும்.
தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து, ஆற்றவேண்டிய காரியங்களை கோட்டைவிடுதல் எங்களை நாமே வெட்கத்தினுள் ஆழ்த்தும் வேலை தான்.
இயற்கை தன்பாட்டிற்கு ஒருவருமே சொல்லிக் கொடுக்காது இயங்குகின்றது. மனிதனுக்கு மட்டும் சாப்பிடுவது எப்படி, நடப்பது எப்படி, என்று கூடச் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது.
மனிதனுக்கு வேண்டிய எல்லாவற்றையுமே, இயற்கை மூலம் ஆண்டவன் அள்ளிக்கொடுக்கின்றான் ஆனால் இவன் அதனைக் கிள்ளிக் எடுக்கக்கூட மனம் இன்றி இருக்கலாமோ? . .
* நீ உனது அவயங்களுக்கு வேண்டிய வேலை கொடு, உரிய முறையில் இயங்கச் செய்! உனது புலன்களில் தெளிவை உண்டாக்கு இதனாலேயே அறிவின் வீச்சும் அதிகரிக்கும்.
அறிவு மட்டும் இருந்தால் போதுமா மனிதாபிமானம் உள்ளவனாக இருந்து கொள்வாய்? இதனாலேயே மனிதப் பெறுமதிகளை அறிந்து கொள்ளப் பெரும் வாய்ப்பு உருவாகும் மேலே சொன்ன விடயங்கள் ஒருவரது செயல்களில் புதிய தெம்பையூட்டும். எம்மை நாம் மெருகேற்றி உருக்கொடுக்க வேண்டும்.
தாயார் தந்த இந்தத்தேகத்தை விடநாமாக எமது நற்சிந்தனை வாயிலாக பெற்றுக் கொள்ளும் விரிந்த இதயம் எடைகூடியது, வியப்பிற்குரியது. சரிவரக் காரியங்கள் செய்வதே இலகுவானது எனப்புரிந்து கொள்ளுங்கள் கண்டபடி எதனையும் செய்வது சிரமமானது. ஆபத்தானது ஏன் அருவருப்புமானதும் கூட. தங்கள் செயல் மூலம் பிறரைப் பொறாமைப்படச் செய்ய வேண்டும் எனச் சிலர் கர்வமுடன் பேசுவார்கள். எந்த ஒரு செயலும் முற்றுப் பெறாமலே அது பற்றி வீம்பாக பேசுவதும் கூடாது. அதே செயலை வெற்றிகரமாகச் செய்து முடித்த பின்பு, பெரிதாக அலட்டிக் கொள்ளவும் கூடாது.
எத்தனை எத்தனையோ பேர் மிகப் பெரும் சாதனைகள் புரிந்தும் அதுபற்றி பேசிக் காலத்தைக் கழிப்பதில்லை. கெளரவம் எல்லாமே, காரியங்களை செவ்வனே செய்பவர்களுக்குத் தானாகவே கிட்டும்.
செயல் வீரனைச் செய்கையில் தெரியும் புளுகுபவர்களின் நிழல் கூட இவர்களின் கோமாளித்தனங்களைக் கண்டால் நகைக்கும். எங்கள் சாதனை மிக்க செயல்களுக்கான யாம் பெறும் வெகுமதி உரமேறிய நெஞ்சும் தொடர்ந்தும் புதியன படைக்கவல்ல ஆளுமையினைப் பெறுவதுமாகும்.
மிக மிக நீண்ட பயணம் இது. ஆனால் வெகு சுவாரஸ்யமானது. அலுப்புத்தட்டாதது. எதனையும் ஆக்க முனைபவனுக்கு தூக்கத்திலும் புதிதான எண்ணங்களே உதயமாகும். தன்னை முந்தியபடியே சாத்தியமான நல்எண்ணங்கள் அவனுள் உதயமானபடியே இருக்கும் தன்னை முந்தியபடியே இருப்பவனுக்கு எது தான் கிட்டாது? வலிமைக்கு ஏது எல்லை?
விஞ்ஞானிகள் தங்கள் கண்டு பிடிப்புக்களைத் தொடர்ந்த வண்ணமேயுள்ளனர். ஒரு புதிய விஷயத்தை மட்டும் கண்டு பிடித்தால் போதுமென அவர்கள் ஓய்வு எடுப்பதுமில்லை. சர்வதேச விளையாட்டுப் போட் டியில் வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களில் பலர் தமது சாதனைகளைத் தாங்களே முறியடித்துமுள்ளனர்.
“சாதனைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லவே இல்லை”
எமது செயல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக!
தினகரன் வார மலர்
07.08.2011
விளம்பரங்கள்
(விளம்பரங்கள் மக்களுக்கு நல்லதையும் அல்லாதவையும் தந்தி கொண்டிருக்கின்றன. இதில் உண்மையும், பொய்யும் கலந்தே இருக்கின்றன. மக்களை ஏமாற்றுவது விளம்பரமாகாது. அதேசமயம் எமக்குத்தேவையான விஷயங்களை விளம்பரம் மூலமே அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே விளம்பரம் செய்பவர்கள் மக்கள் நம்பிக்கையைத் தகர்க்காத வண்ணம் செய்யவேண்டும். கவர்ச்சியாகவும் அதில் உண்மைத்தன்மையும் இருக்க வேண்டும். விளம்பர உத்திகளால் இன்று உலகம் மயங்கிப்போய்க் கிடக்கின்றது. பொருட்களைப் பெறுவதிலும் சேவைகள் வழங்கல்களிலும் விளம்பரங்களின் பங்கு மகத்தானது. விளம்பரங்களால் மக்கள் நலன்கள் சுரண்டப்படக்கூடாது. )
"விளம்பரங்கள்" இன்று சகலரிடமும் சங்கமித்துக் கொண்ட அத்தியாவசியமான விஷயமாகிவிட்டது. சில விளம்பரங்கள் மக்களுக்கு அல்லலையும் ஆசையையும் பெருக்குவனவாயும் இருப்பினும் ஒருவர் தேவைக்கு உகந்த விளம்பரங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிக இலகுவாக இயல்பான வழிச்செல்லலுக்கும் கட்டாயமான உற்ற தேவையாக அமைந்தே விட்டதென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. விளம்பரம் இன்றி உலகம் எப்படி இயங்கும்? வர்த்தகம் வளருமா? அரசியலில் ஆட்சிசெய்ய இயலுமா? பெயரும் புகழும் பெற்றிட விளம்பரத்தினை விட வேறென்ன உன்னத வழிமுறைகள் இருக்கின்றன?
விளம்பரம் என்பதே ஒரு வெளிப்படுத்துகை முறைமைதான். பகிரங்கமாக ஒரு விஷயத்தைத் தெரியச்செய்ய பல உத்திகளை இன்று நவீன உலகம் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கின்றது. பார்த்தல், கேட்டல் மூலம் நவீன இலத்திரனியல் சாதனங்களும் பத்திரிகைகளும் இத்துறையினை வலுவான ஓர் இடத்தில் இட்டுச் சென்றுவிட்டது.
உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்துதல் என்பது ஒரு புறமிருக்கப் பொய் முகம் மூலம் பேய் உருவினில் மறைந்து வெளியே நல்லவையாகத் தோற்றம் காட்டிடவும் விளம்பரத்தினைத் துணை தேடுபவர்களின் செயல்களால் உலகை இன்று இது வேதனைப் படுத்துகின்றது. சோப்பு, சீப்பு, விளம்பரப்படங்களில் மனித முகங்கள் பல்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டு எல்லோருமே எங்களைப்பார்! எங்களின் சாகஸங்களைக் கேள்! எனுமாற் போல் மக்கள் முன் கெஞ்சிக்கொண்டிருக்கின்றன. சுயவிளம்பரம் மூலம் தங்கள் சுயதரிசனத்தை மறைத்து புதுமுலாம் பூசும் முயற்சிகள் கூட தற்போது தாராளமாக நடந்தேறுகின்றமை கொடுமை!
ஒன்றுமே நல்லன செய்யாமல் சுயவிளம்பரம் செய்தல் சுயமரியாதையற்ற செயல் என இவர்கள் உணர்கின்றார்கள் இல்லை. ஆனால் நவீன உலகின் போட்டா போட்டித்தன்மையில் வென்றிட விளம்பரத்தின் துணையை நாடுவது தவிர வேறுவழியில்லை. நற்சேவைகளை உலகம் பெறுவதற்கு அவை பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும். இன்று பல நல்ல விஷயங்கள் மக்களுக்கு மறைக்கப்பட்டு விட்டன. தெரியாமை காரணமாகவும் இன்னமும் செய்திகள் மக்களிடம் சென்றடையாமலே இருக்கின்றன. தெரிந்தவர்களும் சொல்லாமல் இருக்கின்றனர்.
விளம்பரம் மூலம் மக்களிடம் தகவல்களை சென்றடையச் செய்கின்ற வித்தை மிகநுட்பமானது. விஞ்ஞான ரீதியாக விளம்பரம் மனித மூளையில் எங்ங்ணம் பதியப்படுகின்றது என்பது பற்றிய சுவாரஸ்யமான அதிசயமான தகவல் ஒன்று இதோ திரைப்படமொன்றினை ஏராளமான ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்படத்தில் இடைவேளை விடப்பட்டது பலரும் எழுந்துவெளியே சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றனர். அங்கு சென்றவர்களில் பெரும் பாலானோர் ஒரு குறிப்பிட்ட நிறுவன குளிர்பானத்தையே கேட்டு வாங்கி அருந்தினர். இத்தனைக்கும் அந்தக் குளிர்பானம் பற்றிய விளம்பரம் திரையரங்கில் காட்டப்பட வேயில்லை. அப்படியாயின் எப்படி அந்தக் குளிரபானத்தினை விரும்பிக்கேட்டார்கள்? இதுதான் ஆச்சரியம். ஆனால் நடந்தது இதுதான்!
மனிதனது கட்புல ஆற்றல் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட நேரக் கணக்கீட்டில் உள்ளது. திரைப்படத்தின் ஒரு காட்சிக்குப்பலநூறு படங்கள் எடுக்கப்பட்டு அவை தொடராக ஓடவிடப்படுகின்றன. ஒரு கை அசைவதற்கு பல படங்கள் தனித் தனியாக எடுக்கப்பட்டு அவை தொடர்ந்து ஓடும் போதுநகரும் காட்சியாக எமக்குத் தோற்றமளிக்கும். இங்கு திரைப்படம் பார்க்கும்போது மிகவும் குறைந்தளவு நுண்ணிய காலப்பகுதியில் மேற்சொன்ன குளிர்பான விளம்பரம் திரையில்.காட்டப்பட்டாலும் எமது விழிக்கு அது தென்படாது. ஆனால் எமது மூளை அதனைக் கிரகித்து விடும் விழியில் படம் புலனாகக் குறிப்பிட்ட நேரம் தேவைப்படும். ஆனால் மூளையோ உடன் தகவலைப் பெற்றுவிடுகின்றது.
எனவே விழிக்குப் புலப்படாமல் மூளையினுள் மக்கள் அறியாமல் இந்த விளம்பரம் புகுத்தப்பட்டுவிட்டது. இது ஒரு விஞ்ஞான விந்தைதான்!
எனினும் தரம் குறைந்த பொருட்களைக்கூட அடிக்கடி விளம்பரப்படுத்துகையில் மக்களின் எண்ணமும் அதன் பால் ஈர்க்கப்படலாம். மேலும் "சரி, போனால் போகின்றது" எனக்கூறி வாங்கிவிடுவோருமுண்டு.
ஒரு தடவை என வாங்குபவர்கள் தொகை ஒரு லட்சம் என உயர்ந்தால் திடீர் என அவைகளின் பெறுமதியும் எப்படி அதிகமாகிவிட்டது? அல்ல. நல்ல பொருட்களை வாங்கியோர் மீண்டும் மீண்டும் அதனையே கேட்டு வாங்கி விடுகின்றார்கள். உண்மையான தரமான விஷயங்கள் தான் நிலைத்து நிற்கமுடியும். இது இயற்கையான ஒரு பாடமும்கூட. ஆயினும் போலியான மக்கள் சிந்தையைச் சீரழிக்கும் மயக்கும் கருத்துக்களை ஆரவாரமான சங்கதிகளைக்கூட சாதுர்யமான வெளிக் காட்டுகை மூலம் மக்களிடம் செலுத்தியும் விடுகின்றார்கள்.
இன்று இணையதளத்தின் ஆக்கிரமிப்பிலும் இளைய தலைமுறையினர் அமிழ்ந்துவிட்டனர். இங்கு பணமீட்டும் பகட்டு வியாபாரிகள் படுகீழ்த்தரமான வழிமுறைகள் மூலம் பொருட்களை மட்டுமல்ல மனித நாகரீகத்தினையும் விற்று விடுகின்றனர். காசு கொடுத்தால் எதைத்தான் வாங்க முடியாது என்று எல்லோரும் கருத ஆரம்பித்துவிட்டார்களோ என அச்சப்பட வேண்டியுள்ளது.
தனிமனித சுதந்திரம் என்பதுகூடக் கொச்சைப்படுத்தப்படுகின்றது. ஒருவனது அந்தரங்கம் அவனுக்கேயுரியது. இவைகளை அறிந்தும் ஒருவரது மனம் வெதும்ப, பலரும் அறிய இணையதளம் மூலமாக பரகசிய மாக்கப்படும் அவலங்களைக் கேள்விப்படுகின்றோம். பொருட்களை விற்கப் பெண்களைக் கேவலப்படுத்துகின்றார்கள். விற்கப்படும் பொருளுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தமேயில்லாது விட்டாலும் பெண்களைக் கண்டபடி சித்தரித்துப் பெண்மையினை அவதூறு செய்கின்றார்கள். இன்று மேற்கத்திய பத்திரிகைகளை மிஞ்சுமளவிற்கு கீழைத்தேய நாடுகளிலும் ஆபாசமான விளம்பரப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும் மக்கள் கூடும் இடங்களில் சந்திகளில் பெண்களைக் காட்டாத விளம்பரங்களே இல்லை எனுமாற்போல் இருக்கின்றதே! இதுபற்றி மகளிர் அமைப்புக்கள் என்னதான் கொதித்து எழுந்து ஆர்ப்பாட்டம் செய்தாலும் கேட்டுவிட்டுச் சும்மா போய்க் கொண்டேயிருக்கின்றார்கள்.
நல்ல விஷயங்களை மனிதர் நாடிப்போவார்கள் அதற்காகச் சிரமப்பட்டுத் தெரியப் படுத்தவேண்டியதில்லை எனவும் சொல்வார்கள். உண்மையில் உள்ளுர் சந்தையில் மட்டுமல்ல, உலகின் எப்பாகத்திலும் தரமானவைகளுக்காக பெரிதாக விளம்பரம் செய்ய வேண்டியதில்லை என்கின்ற கருத்துச் சொல்லப்பட்டாலும் வளரும் உலகில் போட்டிகள் புதிதான கண்டு பிடிப்புக்களால் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாய்களைச் செலவிட்டேயாக வேண்டிய நிலையில் உள்ளன. இதனால் நுகர்வோர் தாங்கள் வாங்குகின்ற ஒவ்வொரு பண்டங்களுக்கான விளம்பரங்களுக்காகச் செலவிடப் படுகின்ற செலவுகளையும் ஏற்றுக்கொள்கின்ற நிலைக்கே தள்ளப்படுகின்றனர். இலாபம் கருதும் வர்த்தகர்கள் எதனையுமே சும்மா செய்துவிடப்போவதுமில்லை.
உலகின் சகல நாடுகளிலேயும் பண்டங்களுக்குத்தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே அவை விற்பனைக்கு வரும். ஆனால் எந்தவிதமான பண்பும் இல்லாதவர்கள் பொதுவாழ்வில் அத்துமீறி நுழைந்தாலும் அவர்கள் இறுதியில் ஏதோவகையில் ஒரு முக்கிய நபராக உருமாறி விடுகின்றார்கள். இவர்கள் தங்களுக்கான சான்றாகப் பணம், செல்வாக்கு, குடும்ப அந்தஸ்துகளை ஒரு இலட்சினையாக்கி விடுகின்றனர்.
அதாவது இவைகள் கூட ஒரு விளம்பரத் தன்மையான, வெளிப்படுத்துகைதான். நான் இன்னாரின் மகன், எனது குலம், கோத்திரம் உயர்ந்தது என் பிரதேசம் இத்தகையது எனப் பலரிடம் சொல்வதும் அல்லது சொல்லுமாறு கேட்டுக் வற்புறுத்துவதும் சமூக அவல நிலைக்கு ஒரு காரணியாகும் என அறிக இன்னமும் எமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் குறிப்பிட்ட வர்க்கம் கோலோச்ச, மக்கள் அனுமதித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.
தனி ஒரு மனிதனின் உழைப்பு நேர்மை பண்புநெறி பற்றிக் கருதாது சிலவேளை கீர்த்திமிக்க பரம்பரைபற்றிய மக்கள் உணர்வுகள் மேலோங்கியே காணப்படுகின்றன. பரம்பரை வாயிலாக பெற்ற பெருமைகளைப் பின்னர் வந்த சந்ததியினர் காப்பாற்றாது விடினும் ஏற்கனவே மக்களிடம் பெற்ற அங்கீகாரம் அடையாளம் நிரந்தரமாகியே விடுகின்றமை அதிசயமே! சிலர் சொல்லுவார்கள்"அவருக்கு என்ன விளம்பரம் வேண்டிக்கிடக்கின்றது. அவரது குலப்பெருமை ஒன்றே போதுமே ஏழு தலைமுறைக்கும் அதுவே போதும்" என்பார்கள்.
ஆயினும் காலம் மாறிக்கொண்டேயிருக்கின்றன. நேற்றுப்போல் இன்று இல்லை. மிகப் பிரபல்யமாய் இருந்த நிறுவனங்கள் படுத்தும் மிகச்சாதாரண ஸ்தாபனங்கள் முன்னணிக்கும் வந்துகொண்டுமிருக்கின்றன. மனித வாழ்வும் இப்படித்தான் உழைக்காமல் வெறும் விளம்பரத்தால் உயர்ந்து விடமுடியாது.
யப்பான், சீன நாடுகளின் வளர்ச்சிகளை நாம் பார்த்து வருகின்றோம். அவர்களின் திறமை, உழைப்பு, உற்சாகத்தினால் தான் இத்தனை முன்னேற்றத்தினை அந்த நாடுகள் உருவாக்கிக் கொண்டன. யப்பானிய உற்பத்திகளை உடமைகளாக்க மக்கள் முண்டியடிப்பது அந்நாட்டு தொழில் நேர்மைக்குச் சான்று தருவதாகும். நேர்மையான உண்மையான மார்க்கத்தினூடான பகிரங்கப்படுத்தலே மக்களிடம் நிலையான இடத்தினைப் பெறும் வலுவுடையதாகும்.
அறத்திற்கு அப்பால் நின்று தம்மைப் பிரபல்யப்படுத்துவது பெறுமதியற்ற சடப்பொருள் ஒன்றை விற்க முனைவது போலன்றோ! வஞ்சம், குரோதம், சூழ்ச்சி மூலம் எந்த அணு கூலத்தையும், இலகுவாகப் பெற்றுவிடவும் முடியாது. பத்துப்பேரைக் கைக்குள் போட்டுப் பிரபல்யமடையலாம் என எண்ணுதல் கண்ணியமான போக்குமன்று.இப்படி இவர்கள் விளம்பரப்படுத்தப்பட்டால் ஈற்றில் மழுங்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்பதே உண்மையாகும்.
மக்கள் தொடர்புசாதனங்கள் தம்மிடம் இருக்கின்ற விளம்பரதாரர்களின் உண்மைத் தன்மையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். போலியான ஆசாமிகளை மக்களை ஏமாற்றும் நிறுவனங்களை வேண்டுமென்றே சுயலாபத்திற்காகப் புகழ் தேடித் திரியும் அற்ப ஜீவன்களின் செயல்களை அம்பலப்படுத்த வேண்டும்.
இன்று ஆசை வார்த்தைகளால் பொய்யான தகவல்களால் சில நிதி நிறுவனங்களில் பெரும்தொகை பணத்தைச் செலுத்தி ஏமாந்து அல்லல்படும் மக்கள் பற்றிச் செய்திகளை அறிந்திருப்பீர்கள். இலவசமாக "அதனைத் தருகின்றோம், இதனைத்தருகின்றோம்” எனச்சொல்லிக் கண்ட கண்ட குப்பைகளைத் தலையில் கட்டிவிடும் வர்த்தக நிறுவனங்களை இனம் காண்பது எப்போது? அநேகமான மக்கள் பணத்தைச் செலவழித்து நட்டப்பட்ட பின்னர் தான் ஞானம் பெறுகின்றனர். போலியான விளம்பரம் மூலம் லாபமடையவர்களால் தரம் குறைந்த பண்டங்கள் உலகில் உலாவருவதனால் காலப்போக்கில் நாடுகளின் பொருளாதாரத்தில்கூட வீழ்ச்சி காணப்படலாம் உண்மையானவைகள் பற்றியே அறிய வாய்ப்பின்றியும் வரலாம். இதுவே மெய்யானது என்று போலியை நம்பினால் அதுவே பழக்கமாகி விடுகின்றது. யாராவது இதுபற்றிப் பேசினாலும் கேட்பதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
எங்களுக்குச் சுதந்திரம் உண்டு என்று சொல்லி சந்தையில் பொய்கள் சொல்பவர்களைச் சட்டம் தான் கண்டு கொண்டு தண்டிக்க வேண்டும். தரம் தகுதிகளைக் கரங்களை அறிந்து தரங்குறைந்த பொருட்களை விற்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தியும் கூட கவர்ச்சிமிகு விளம்பர உத்திகள் மூலம் பல வர்த்தகர்கள் மக்களின் கண்களில் மண்ணைத் தூவி விடுகின்றனர்.
இன்று பலரும் தங்களை விளம்பரப்படுத்துவதாக எண்ணித்தங்கள் முட்டாள்தனங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். போலிச்சாமிகளும், போலி அரசியல் தலைவர்களும் மக்களை ஏமாற்றிச் செயல்படும் சமூக விரோதிகள். எப்படித்தான் தங்களைப் பகிரங்கப்படுத்திடினும் இறுதியில் அவமானப்படுத்தப்படுவதை நாம் அறிவோம்.
எனினும் இத்தகையவர்கள் மூலம் பட்ட துன்பங்கள் அவமானங்கள் வெறும் அனுபவங்கள் மட்டுமல்ல. மனித மனங்களில் விழுந்த பேரிடிகளாகவேயிருக்கின்றது. அறிவும், அனுபவமும் மனிதனுக்கான தற்காப்புக் கவசம் என்பதனை நாம் உணரவேண்டும்.எதனையும் உலகிற்காகச் சிறந்த முறையில் செய்வதற்காகவே பல வழிமுறைகளை மனிதன் கண்டறிந்து கொண்டே இருக்கின்றான். விளம்பரம் கடத்தரம்மிகுந்த செயற்பாடானால் எமக்கான வசதிகளும் சிறப்பாகிவிடுமன்றோ!
கரிசனை
(அன்பின் தரிசனம் எமக்குக் கிட்டவேண்டுமெனின் சகல ஆன்மாக்களிலும் எமது கரிசனை உணர்வுகள் மேலோங்க வேண்டும். இதனால் ஆன்மாவின் விழிப்பு நிலை மேலோங்கி பரிபூரணத்துவ நிலையினை அது எய்தும். எனவே அன்பிற்கு ஆதாரமாக “கரிசனை’ துளிர்த்து உயிர்ப்புடின் பரிணமிக்க வேண்டும். இவ் உணர்வு வந்தாலே எவர்களது துயரங்களையும் துடைத்திடும் எண்ணங்கள் உதயமாகிவிடும். சுய லாபத்தின் பொருட்டு ஒருவனிடம் கரிசனை கொண்டுள்ளது போல் நடித்தல் தம்மையே ஏமாற்றும் காரியமாகும் உலகின் இயற்கை வஸ்துகள் அனைத்திலும் கரிசனையுடன் இருந்தால்தான் தற்போதைய சர் மட்டுமல்ல எதிர்காலத்தின் பிரஜைகளும் இயற்கை வளமும் பாதுகாக்கப்படும். இந்த உணர்வு எம்மை நிதானப்படுத்தி மன ஆரோக்கியத்தையும் வரவழைக்கும். உயிர்கள் மீதான உண்மையான கரிசனை உணர்வுகள் எம்மிடம் உருவானால் அன்பின் தரிசனம் தீட்சண்யமாகத் துலங்கி நிற்கும்.
"அன்பின் தரிசனம்” என்பது சகல ஆன்மாக்களையும் ஆகர்ஷித்து இணைத்துக்கொள்வதால் ஏற்படும் பரிபூரணத் துவமான “விழிப்பு" நிலையாகும்.
வேண்டா வெறுப்புடன் உயிர்களை நோக்கினால் அகத்தே ஒளி தூண்டப்படாத முயற்சி செய்யாத மாந்தராகி விடுவோம். எனவே கரிசனை உணர்வுடன் எவரது துயர்களையும் துடைத்திடும் மன இயல்பைப் பெற்றிடுவீராக!
குழந்தைகள் கூட வேண்டுமென்றே அழுவது தனது தாய் தன்னைக் கரிசனையுடன் உடன் வந்து தூக்கி அரவணைக்கின்றாளா? என நோக்குவதற்கே என்றும் உளவளவியலாளர் கருதுகின்றார்கள்."கரிசனை” என்பது அன்பின் வசமானவர்களுக்கான ஓர் நெகிழ்வூட்டும் இயல்புமாகும்.
“என்னை எல்லோருமே விரும்புங்கள்" என எம் உள் மனம் கேட்டுக்கொள்ளும். ஆனால் வீம்புக்காக "எனக்கு யாருடைய தயவும் தேவையில்லை. நான் சுயமாக எவர் தயவும் இன்றி வாழ்ந்துகொள்வேன்” எனச்சொல்லிக் கொண்டாலும் பிறர் ஆதரவை அவர் தரும் கரிசனையான அன்பின் வெளிப்படுத்துகையை விரும்பாதவர் எவர் உளர்?
ஆனால் தூய அன்பினை நிராகரிப்போர் அதன் தாக்கத்தினை உணராமல் போவதுமில்லை. அன்பு என்பது துன்புறுத்தல் அல்ல. அது சுமையும் அல்ல. மென்மையான சுகமூட்டும் நெஞ்சிற்கான ஒத்தடம்.
நடிப்பூட்டும் கரிசனையாளர்களால் வெறுப்பூட்டப்பட்ட பலர் நிஜமான உறவுகளை சரியாக நிறுக்கத் தெரியாமல் சமூகத்தில் துறவிகள்போல் பேசுகின்றார்கள். எவரிடத்தும் அக்கறையில்லாதவர்கள் சொந்த நலனுக்கு மட்டும் கரிசனை காட்டி தங்கள் பொய் உருவத்தை வரைந்து காட்டுவார்கள். வெளிப்படையாகக் கொச்சையாகப் பேசுவதிலும் பார்க்க மெளனமாக ஒருவரை அறுப்பது கீழ்த்தரமானது. அன்பு பூண்டவனைக் கண்டுபிடிப்பதுவே கஷ்டமாக இருப்பதாகச் சொல்லிக் கவலைப்படுவோர் பலர் உளர். எந்தத் தொழிலைச் செய்பவர்களாயினும் சரி அவர்கள் தமது தொழிலில் அக்கறை காட்டாதுவிடில் அது அவர்களுக்கு மட்டுமல்ல அவர் செய்யும் தொழிலினால் பயன்பெற எதிர்பார்க்கும் மக்களுக்குமே பெரும்பாதிப்பினை ஏற்படுத்தும். பெரிய கப்பலில் ஒரு சிறிய துவாரத்தினைக் கண்டு பிடிக்கத் தயங்கினால் நிலைமை என்னாகும்? விமானம் தரையிறங்கும் சமயம் விமானி கரிசனையின்றிக் கண்ணயர்ந்தால் என்ன நடக்கும்?
இன்று அரச தனியார் நிறுவனங்களில் எல்லாம் பெரிய அதிகாரிகளில் இருந்து சாதாரண அலுவலர்கள் வரை முழுமையாகத் தம்மை அர்ப்பணித்துக் கடமை செய்கின்றார் எனச் சொல்லமுடியுமா? இங்கு வரும்
மக்களின் தேவைகளின் முக்கியத்துவத்தினை உணர்வோர் எத்தனைபேர் இருக்கின்றார்கள்? கடமையுணர்வுள்ள அலுவலர்களின் பெரும் பங்களிப்பின் பயன், பெறுபேறுகளை ஒரு சிலரின் அக்கறையற்ற போக்கினால் முழு நிறுவனமே கெட்டபெயர் எடுக்கவேண்டிய நிலை உள்ளது.
எங்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை. எப்படி நாம் முழுமையான பணிகளைச் செய்யமுடியும் என விதண்டாவாதமாகப் பேசும் ஊழியர்களின் செயல் அருவருக்கத்தக்கது. கடம்ை என்று வரும்போது எம்மை நாடுபவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் வசதிகள், ஊதியம் என்பது போன்ற விடயங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
உண்மையான குறைபாடுகள் பிரச்சனைகளைக் கையாளுவது வேறு வடிவத்தில் அமையவேண்டும். பக்கத்து வீடு பற்றி எரியும் போது அதுபற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படாது பழைய கோபதாபங்களைப் பேசிக்கொண்டிருக்கலாமா? இதனால் ஏற்படும் நன்மை தான் என்ன? இதே துன்பம், அடுத்து உனக்கும் ஏற்படலாம் என ஏன் எண் ணாமல் இருக்கின்றாய்? எனத் தன்னுள் அவன் கேட்டேயாக வேண்டும்.
இன்று மாணவ சமூகத்தின் சிந்தனைகளைக் கலைக்கும் புறதாக்கம் அதிகரித்து வந்துவிட்டது. மது, போதைப் பழக்கத்துடன் அநாவசிய பொழுதுபோக்கு அம்சங்களால் கவரப்பட்டுத்தம் எதிர்காலத்தினை வீணடிக்
கும் பல இளைய சமூதாயத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். செல்லிடத் தொலைபேசியில் தலையைச் சாய்த்தபடி சதா கதை பேசுகின்ற நேரத்தினை விடக் கல்விக்காகச் செலவிடும் நேரம் மிகக்குறைவாக இருக்கின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. நிமிர்ந்து நடைபயிலும் இளம் சமுதாயம் தலை சாய்த்து வளைந்தபடி அல்லது தூணில் சாய்ந்தபடி இருக்கின்றார்கள். வைத்திய ஆய்வின் படி இவை போன்ற பழக்கங்கள் சதா இலத்திரனியல் பொருட்களின் பாவனை ஆபத்தானது எனச் சொல்லியும் கேட்கின்ற நிலையில் இவர்கள் இல்லை.வசதிகளைக் கட்டுப்பாட்டுடன் அனுபவிக்கவேண்டும்.
உண்மையான கரிசனை உணர்வுகள் கல்வியில் தோன்றினால் இந்நிலை வருமா? பொழுது போக்குகள் உடற்பயிற்சிகள் கலைத்துறை ஈடுபாடுகள் எல்லாமே எமது உளவளத்திற்கு உகந்தன. எனினும் நாம் எல்லாவற்றையுமே ஒருநேர வரையறைக்குள் அமைத்திடுவோமாக!
திட்டமிட்டுச் செயலாற்றும் போதே செய்கின்ற கருமங்களில் அதீத ஈடுபாடும் அக்கறையுணர்வும் தானாகவே வந்துவிடுகின்றது. கணினித்துறை வல்லுணர் பில்கேட் அவர்கள் தினசரி உறங்குவது நான்கு அல்லது ஐந்து மணிநேரம் மட்டுமேயாகும். அவர் செலவிடும் ஒவ்வொரு வினாடித் துளிகளின் பெறுமதி பல இலட்சம் ரூபாய்க்கு மேலானதாகும். இன்று உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரான இவர் செய்கின்ற ஒவ்வொரு கருமங்களையுமே மிகுந்த அக்கறையுடனும் சிரத்தையுடனும் ஈடுபாட்டுடனும் செய்து வருகின்றார்.
எம்மீது நாம் காட்டும் கரிசனை என்பது எமது உடலை வருத்தி மெய்யாக நாம் உழைப்பதுதான். உழைப்பவன் தான் ஓய்வு எடுக்க வேண்டும். உழைத்தல் இன்றி இருப்பவன் சதாபடுப்பவன் ஆகின்றான். உழைப்பவன் களைப்பு பற்றிக் கவலைப்படுவதில்லை. அதுவே அவனுக்குத் "திருப்தி".
சும்மா படுத்திருப்பது என்பது முடங்கும் நிலை. இது ஓய்வு நிலையல்ல. தலை சாய்வதற்கான வழி எனவே சோம்பேறிகளுக்கு கடமையுணர்வு பற்றியும் கரிசனைமிகு செயல் திறன் பற்றியும் எவ்வித கவலையும் கிடையவே கிடையாது. சோம்பல் சோகத்தையே உண்டு பண்ணும் உணர்க!
எனது நண்பர் தனது கவலையீனத்தால் அக்கறை இன்மையால் ஏற்பட்ட நஷ்டம் பற்றி தமது அனுபவத்தினைக் கூறினார். தனது மனைவிக்கும் தனது பிள்ளைகளுக்குமான மருத்துவக் காப்புறுதியைச் செய்திருந்தும் கூட அதற்குரிய தவணைப் பணத்தினைச் செலுத்தாமல் விட்டமையினால் தனக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவிற்கான பணத்தினைப் பெறமுடியாமல் போனதாகக் கவலையுடன் தெரிவித்தார்.
செய்ய வேண்டிய முக்கியமான பணிகளைச் செய்யாது விட்டால் நடக்கும் விபரீதங்கள் எத்தனை எத்தனை? மின்சாரம், தொலைபேசி, குடி நீர் கட்டணங்களை உரிய காலத்தில் செலுத்தாமல் விடுவதும் ஏற்கனவே அறிவித்த அறிவித்தல்களை உதாசீனம் செய்வதால் மேற்படி சேவை இடை நிறுத்தப்படுவதும் பலருக்கு அன்றாட பிரச்சனைகளாகிவிட்டன.
வீட்டிலும் சரி அலுவலங்கள் பொது இடங்களிலும் சரி பாவனைக்குரிய பொருட்களுடன் நீர், மின்சாரம், போன்றவை வீண் விரயமாக்கப்படுவதைப் பற்றிக் எத்தனை பேர் உணர்கின்றார்கள்? அலுவலகத் தளபாடங்களும் கருவிகளும் சரிவரப் பேணப்படுவதுமில்லை. தனிநபர்கள் செய்யும் வீண் விரயங்கள், தேசிய, உலக இழப்புக்களே. உணர்க!
உலகம் இன்று கொதித்துப் போய்க்கிடக்கின்றது. இயற்கை சிதைக்கப்படுகின்றது. அதுபற்றிய கரிசனை மக்களிடம் பெரிதாக இல்லை குளிர் பிரதேசங்களில், பணி அதிக வெப்பம் காரணமாக உருகி அதன் வளம் குன்றுகின்றது. இதனால் அங்குள்ள பறவைகள், பிராணிகள் தொகை குறைந்து ஈற்றில் மறைந்தேவிடும் அபாயம் உள்ளதாக புவியியல் விஞ்ஞானிகள் அபாய சமிக்ஞை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
புவி உஷ்ணமடைவதால், மரங்கள் அருகுவதால், குடிநீர்ப் பிரச்சனை எழுகின்றது. நல்ல மழை இல்லை மழை வந்தால் வெள்ளம் ஏற்படுகின்றது.அதைத் தடுக்க மரம், புல், பூண்டுகள் இல்லை. யுத்தத்தால் ஏற்படும் விஷ வாயுக்கள், காடுகள் அழிப்பு, இரசாயனத் தொழிற்சாலைப் பெருக்கம், எல்லாமே சேர்ந்து பூமியின் மேல்சட்டை கிழிந்துபோய் அது ஆடையிழந்து போய்கிடக்கின்றது. ஓசோன் என்கின்ற போர்வையைக்களைந்த பாவிகளாகி மக்கள் இன்றுபெரும் குற்றவாளிகளாகிவிட்டார்கள்.
உலக ஆரோக்கியம் பற்றிய கரிசனையை இனியாவது தெரிந்து கொள்வோமா? ஒரு தாய் தனது குழந்தை மீது கொள்ளும் கரிசனை போலவே எம்மைப் பெற்ற தாயினும் மேலாம் புவி மாதாவை கண்போலப் போற்று வோமா! அவளுக்கு இன்னல் இழைக்காமல் இருப்பதுவே பெரிய நற்காரியமும் ஆகும்.
தனது குடும்பம், ஊர் உறவுகள் எல்லாமே இன்றைய மன அமைதிக்கும் வாழ்வின் மேம்பாட்டிற்கும் மட்டுமின்றி எங்கள் எதிர்காலத் தேவைக்குமானவர்கள் என எண்ணிச் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம். இந்த உறவுப்பிணைப்பினால் எழுந்த அன்பு பாசத்தினால் காட்டும் “கரிசனை" என்பது ஒரு புதுமையல்ல. இது இயற்கையான உணர்வும் யதார்த்தமான நடத்தைகளும் தான்!
ஆனால் எங்கோ இருக்கும் ஜீவன்களுக்காவும் இயற்கையின் உற்பத்திகளான ஜடங்களுக்காகவும் கொண்ட பேரன்புதான் எங்கள் மனோ விசாலத்தினைக் காட்டுவதாகும். பெரியவர் ஒருவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.
அவர் ஒருதட்டில் வைத்துத் தானியங்களைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்தார். ஏன் இவற்றைத் துப்பரவாக்கிச் சமையல் செய்யவா போகின்றீர்கள் எனக்கேட்டேன். அதற்கு அவர் இல்லையில்லை. கோவில் புறாக்களுக்குப் போடப் போகின்றேன்" என்றார். அவைகளைச் சும்மா போட்டால் என்ன என ஆச்சரியத்துடன் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இது நாங்கள் இவைகளை அப்படியேயா சாப்பிடுகின்றோம். இல்லையே எதையும் துப்பரவு செய்யாமல் எப்படிக் கொடுப்பது?" என்றவர் மற்றும் ஒரு தட்டைக் காண்பித்தார். அதில் தேங்காய் உடைத்து எடுத்து அழகாகச் சின்னச் சின்னச் சொட்டுக்களாக்கியிருந்தார். இவை களுடன் தானியங்களைக் கலந்து புறாக்களுக்குக் கொடுக்கப் போவதாகச் சொன்னார்.
சாதாரண மனிதர்கள் உணவைப் பக்குவமாகச் சேர்த்து உண்ணுவதுபோல் புறாக்களுக்கும் அவர் கொடுக்க எண்ணிய அந்த மென்மையான கரிசனை உணர்வினை என்னென்பது? கொடுக்கின்றது தானம் என்பதால் அதில் மனம் லயிப்பின்றிக் கொடுக்கலாமா? பெரிய அன்னதானம் செய்யும் போது வெட்டப்படும் காய்கறி வகைகளை அதன் தரம் அறியாது சமையலில் சேர்க்கலாமா? யாரோ சாப்பிடுகின்றார்கள் என்பது போல் கண்டபடி சமையல் செய்யலாமா? செய்கின்ற காரியங்களைச் சீராகச் செய்தலும் சிரத்தையின் வெளிப்பாடுதானே!
நாம் எவ்வளவு பிறருக்காகச் செலவு செய்கின்றோம் என்பது பெரிதல்ல. செய்கின்ற காரியத்தை அன்புடன், கரிசனையுடன் செய்கின்றோம் என்ற மன நிறைவுடன் செய்ய வேண்டுமல்லவா? சிறிய உதவிகளேயாயினும் நற் சிந்தனையுடன் செய்தலே உத்தமமான மேன்மைப் பண்பாகும். உணர்க கரிசனையுடன் கூடிய பணிகளே நிதானமுடைய மனிதனாக்கி எம்மை முழுமைப்படுத்தும்.
02.09.2007
அற்புதம்
(இறைவன் படைப்பில் எல்லாமே அற்புதம் தான். மனிதப்பிறப்புகள் மட்டுமல்ல எல்லா ஜீவன்கள் ஜடப்பொருட்கள் எல்லாமே அற்புதமானவைதான். பணம், புகழ் மட்டுமே கொண்டவர்களையே நாம் அற்புதமான உயர்ந்தவர்களாகக் கொள்கின்றோம். ஆனால் நல்ல அறிவும் பண்பும் இன்றி வாழ்தல் அத்திவாரம் இல்லாத மாளிகையைக் கட்ட விழைவது போலவே அமையும். இறைவன் சிருஷ்டியினை எண்ணி ஆச்சரியப்படும் நாம், அவன் அளித்த அறிவை செறிவாக்கி உலகிற்கு எம்மாலான ஈகைகளைச் செய்வோமாக! சிறப்பாக வாழ்வாங்கு வாழுவதே ஓர் அற்புதக் கலைதான். வெறும் தேகத்தை வைத்துச் சீவித்தல் மட்டும் வாழ்க்கையல்ல. பிறருக்கும் சந்தோஷங்களை அளித்தலே இந்த விதத்தின் ஆரோக்கிய நிலையும் அற்புதப் பணிகளுமாகும்.
இந்த உலகம் மிகவும் அற்புதமானது. இங்கு அசைகின்ற ஜீவன்கள் அனைத்துமே அதிசயமானவையே. இவைகளின் தோற்ற வேறுபாடுகள் குண இயல்புகள், நடத்தைகள் எல்லாமே வியப்புக்குரியன என்பதில் ஏது சந்தேகம்? நாம் காண்கின்ற மரம், செடிகள், புல்பூண்டுகள், சின்னஞ்சிறு உயிரினங்களில் இருந்து பெரிய விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவை பற்றிச் சில கணம் சிந்தித்துப் பாருங்கள். மனிதரிடம் இல்லாத அற்புதக் கலவைகளாக உங்களுக்கு அவை தோற்றம் காட்ட வில்லையா? சொல்லுங்கள்!
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அவனியை நிமிர்த்த வாழ்ந்து காட்டிய தீர்க்கதரிசிகள் மகான்களின் வாழ்க்கை, அவர்தம் வார்த்தைகள், அதன் பெறுமதிகள் எல்லாமே மேலான அற்புதத்திலும் அற்புதமன்றோ!
இந்த மகான்களை நாம் சாதாரண மனிதர்களுக்குச் சொல்லும் வார்த்தையான "பிறந்தார்" என்கின்ற சொற்பதத்தை நாம் பிரயோகிப்பதில்லை. அவதாரம் செய்தார்கள் என்றுதானே சொல்லுகின்றோம். செயற்கரிய செய்த எவராயினும் அவர்கள் அற்புத புருஷர்களேயாவர்.
சாதனை புரிந்தோர் சரித்திரங்களையும், இன்னமும் மக்களுக்காக உழைத்திடுவோரையும் கண்டும் காணாமல் போவோரை வெறும் ஜடங்களாகவே கருத வேண்டும். முற்போக்காக வாழ்ந்தவர்கள் மூலம் தானே மற்றவர்களும் அதைக் கண்டு தங்களையும் முழுமையாக்குகின்றார்கள். எனவே எதிர்காலச் சந்ததியினரின் வளர்ச்சிக்காக நாங்கள் அவர்களுக்கு இட்டுச்செல்லும் வளங்களின் பொருட்டாவது எம்மை நாம் முழுமையானவர்களாக ஆக்குவோமாக! சும்மா வாழ்ந்து கொடுப்பனவுகளை ஈந்துவிடாது வெறுமனே செத்துப்போவது ஒரு வாழ்வாகுமா? பிறர் செய்யும் அற்புத கைங்கரியங்களை நாமும் உருவாக்குவோம்.
யாராவது ஒருவர் தந்தவைகளை மட்டுமே அனுபவிக்க எண்ணாது நாங்களும் கொடுக்கின்ற கொடையாளிகளாக நடைபயில்வோம். "வாழ்க்கையின் நெடுந்தூரம் பயணம் செய்துவிட்டேன்” என்று சொல்லும் நாம் வாழ்க்கையில் தமது நலனைமட்டும் சாராது மற்றவர்களுக்காக எத்தனை அடிகள் முன்வைத்துச் சென்றாய் என எம்மை நாம் கேட்க வேண்டாமோ? எங்களை நாம் கேள்விகேட்கும் போதும் நடுவு நிலைமையுடனேயே எம்மையும் நோக்கிக் கேட்டாலே அற்புத புருஷர்களாக நாங்களும் மாறிவிட முடியும். அதைவிடுத்து எங்களுக்குச் சார்பாகவே நடுவு நிலை தப்பி எமக்கான வாதங்களை முன்வைத்து வாழக்கூடாது.
தங்களுக்காக வாழ்கின்றவர்கள் எல்லோருமே உலகில் இயங்கும் அன்னியப்பட்ட மனிதர்களாக மாறிவிடுகின்றார். இதன் பெயர் "சீவித்தல்” அல்ல வெறும் தேகத்தை வைத்து நாட்களை "ஒட்டுவித்தல்" என்பதுவாம். வாழ்தல் என்பது, பிறரை வாழ்வித்தலாம். மற்றவர்க்கு நிம்மதியை, நல் உணர்வை, சந்தோஷங்களை கொடுத்தல் அல்லது கொடுப்பதற்கான பாதைகளை உருவாக்கி அளித்தலுமாகும். வெறுப்பு, வேதனை, விரக்தியுடன் வாழ்பவர்களைத் திருத்தி அவர்களை உருவாக்குவதைவிடச் மிகச் சிறந்த மானுட மாண்புமிக்க செயல் வேறென்ன உண்டு அன்பர்களே!
இன்று பணம், புகழ், செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும் தான் அற்புதமானவர்களாக மாறிடமுடியும் என்கின்ற எண்ணம் உருவாகிவிட்டது. நல்ல மனிதாபிமானம், அறிவு, பண்பு எல்லாமே மனிதனிடமிருந்து விலகினாலும் அது பற்றிச் சிந்திக்க எண்ணுவதில்லை ஏனெனில் பணம் வந்து விட்டாலே புகழ், செல்வாக்குகள் தானாகவே வந்து ஒட்டிக் கொள்கின்றன. எனவே இவைகளைப் பெற்றவர்களின் தயவு இன்றி ஒரு காரியமும் நடக்காது என எண்ணுபவர்களால் கண்டபடி வாழ்ந்து வரும் மனிதர்களைக்கூட அற்புதமானவர்கள் என எண்ணத் தலைப்படுபவர்களை என்னென்று சொல்லுவதோ?
நல்ல மனிதர்களிடம் மட்டுமே உதவிகளை ஆதரவுகளைக் கோருவேன் என எத்தனைபேர் திட சங்கல்பம் பூண்டுள்ளார்கள்? எவ்வளவுதான் கல்வி, ஞானம், பணம், புகழ் இருந்திட்டாலும் மானுடநேயம் இல்லாதவனை அற்புதமானவன் எனச் சொல்லிட முடியுமா? இன்று எங்களால் நம்புவதற்கே இயலாத அளவு புதிய புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படியும் நடக்குமா என வியந்து நோக்கு
கின்றோம் இமைப்பொழுதிலும் குறைந்த நேரவேகத்தில் தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். விஞ்ஞான வேகத்தின் அற்புத சக்தியை என்ன வென்பது?
எனினும் இந்த விஞ்ஞானம் அதிவேகமாகப் பல வசதிகளை மக்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதனால் மனிதன் கடவுள் கொள்கையில் இருந்தே பிறழ்ந்து விடுவானோ என அச்சப்பட வேண்டியுள்ளது. ஆன்மீக விழிப்பூட்டல் என்பது மக்களுக்கு அவர் தம் வாழ்விற்குக் களிப்பூட்டாமல் விஞ்ஞானத்தினால் உருவாக்கப்பட்ட வெறும் சடப்பொருட்கள் மீதான மோகம்தான் தணியாத தாகமாகிவிடுகின்றதே என ஆன்மீகவாதிகள் கவலைப்படக் காரணமாக இருக்கின்றது.
மேலும், இந்த விஞ்ஞானமும் அதன் பெறுபேறுகளும் கூட இறைவன் பேரருளால்தான் கிட்டியது, கிட்டி வருகின்றது என்பதை எத்தனை பேர் ஒத்துக் கொள்ளப் போகின்றார்கள்? உண்மை என்கின்ற வித்து வழங்குகின்ற கனிகள் எல்லாமே ஒரே தன்மையது. இதுபோலவே, மெய்ஞானமும், விஞ்ஞானமும் கூட ஈற்றில் புகல்வது ஒன்றே என உணர்ந்து செயல்பட்டால் மனிதனுக்கு இவை யெல்லாம் பெரும் புதிருமல்ல.
விஞ்ஞானத்தை அல்லது மெய்ஞானத்தைத் திட்டிக் குறைகூறுபவர்கள் அது அர்த்தமற்றது என உணராது போனால் அது அவர்கள் இருந்த இடத்தில் சந்றேனும் அசையாது வானத்தைத் தொட்டுவிட எண்ணுகின்ற முட்டாள்தனம்தான்.
நீங்கள் அற்புதமானவன் எனக் கருதுபவர்களை உற்று நோக்குங்கள். தனக்கு எனக் கருதாது தன்னை இழந்து வழங்குபவனே அற்புதமான மனுஷனாகத் தெரிகின்றான். கனவிலும்கூடப் பிறர் நலனை மட்டும் நோக்குகின்ற மனிதர்கள் இல்லாமல் இல்லை. எப்போதோ ஒரு தடவை பார்த்து அன்பு பாராட்டியமைக்காக என்றும் அவர்களுக்காகத் தங்கள் உதவிகளைத் தாராளமாகக் காட்டும் ஒருவர் அதிசயமான பிறவி தானே?
தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் பலர் தமக்கு நேர்ந்த அற்புதமான அனுபவங்களைப் பரவசத்துடன் சொல்லிக் கொள்வார்கள். தாங்கள் எதிர்பாராத விதமாகபெற்ற தெய்வகடாட்சம் பற்றி உணர்வு பூர்வமாகச் சொல்லும் போது அதிசயமாகவே இருக்கும். இவர்களில் சிலர் தமது கனவுகள் மூலம் பல செய்திகளைப் பெற்றதாகவும் கூறுகின்றனர். கண்ணுக்குப் புலனாகாத இறை சக்தியை நெஞ்சினூடாக உள் உணர்வினூடாக கண்ட சுகானுபவங் களை நாம் யாராவது சொன்னால்அதுபற்றி நம்பமறுத்து விமர்சிப்பவர்களும் உளர். தங்களது வேண்டுகோளுக் கிரங்கி இறைவனால் வழங்கப்பட்ட வரப்பிரசாதத்திற்காக நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களை நாம் கண்டு வியந் திருக்கின்றோம். உடலை வருத்தி உடலில் ஊசிகளை ஏற்றியும் காலில் முள்ளினாலான மிதியடிகளை அணிந்தும், தீயில் மிதித்தும், முட்களினால் தைக்கப்பட்டு ஏற்றப்பட்டு போல் மிதந்தும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்களைப் பார்த்தால் வியப்புத்தான் வரும்.
கூடவே பார்ப்பவர்களுக்கு பக்திப் பரவசமும் கண்ணீரும் சொரியும். எல்லா மதத்தினருள்ளும் தெய்வசக்தி வரப்பட்ட பக்தர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் கூறும் செய்திகள் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதத்தன்மை வாய்ந்தன. அவரவர் தங்கள், தங்கள் தெய்வங்களினூடாகப் பெற்ற இறை அனுபவங்களை அதன் மீது நம்பிக்கையற்றவர்கள் விமர்சனம் செய்வது அர்த்தமற்றதேயாகும். ஒருவர் பெற்ற அனுபவங்களை வெளியில் இருந்து நோக்குபவர் எப்படி விமர்சிக்க முடியும்? உணர்வுகள் நினைவுகள் அவரவர் நிலையோடு இணைந்தவை. அவர்கள் நிலையில் இருந்து நோக்கும்போது அவை சரியானவையே. ஒருவர் மனதோடு புகுந்து எவரும் விளையாட முடியாது.
என்றுமே சாதனைகளைச் செய்பவர்களைப் பாருங்கள். விஞ்ஞானம், அரசியல், பொதுநலத்தொண்டு, சமயம் என எத்துறைகளை நோக்கினாலும் அதில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலரால் தான் நன்கு பிரகாசித்துக் கொண்டு சகலரையுமே ஈர்த்துவர முடிகின்றது. இந்த அற்புத சக்தி எங்கிருந்து வழங்கப்பட்டது? மனிதன் தன்மீதும் தனக்கும் மேலாம் இறைவன் மீதும் வைத்த அசைக்கமுடியாத நம்பிக்கையினால் எல்லாமே கைகூடுவதாகச் சொல்லப்படுகின்றன. மனிதரால் செலவழிக்கப்படும் ஒவ்வொரு கணப்பொழுதுமே பிரயோசனமாகக் கழிக்கப்பட்டால் அதன் பெறுபேறு எம்மால் நினைக்கவொண்ணா அளவு பெறுமதி மிக்கதாகி
விடும்.
"கணப் பொழுதேயாயினும்
யுகப்பொழுதின் சாதனை செய்"
எனும் கூற்றை மனதினுள் நிறுத்துவோம்!
எனவே கடமைகளைத் தொடர்ந்து ஆர்வமுடன் செய்துவரும் போது பெற்ற அனுபவங்களுடாக ஒவ்வொரு கணங்களுமே ஆக்கபூர்வமாகி அவை விஸ்வரூபமான பெறுமதிமிக்க பெறுபேறுகளை அள்ளிக்கொடுத்துவிடும்.
ஹே மனிதா..!! இந்த அற்புத ஆற்றல் உனக்குள் உண்டு. அதனை நீ வளர்ப்பாயாக! முடிக்காத பணிகளையிட்டுக் கவலைப்படுவதை விடுத்து எடுக்கும் கருமங்களை விடாது தொடர்ந்து செய்க! பின்னே திரும்பிப் பார்க்கும் போது மனக்குழப்பம் ஏற்படலாம். எனவே பார்வையை ஒன்றாக்கி முன்னே பதியவை தொடர்ந்து விரைவாக முழுவேகத்துடன் ஆனால் மனம் மட்டும் நிதானமாக மிக நிதானமாக. வெளியே தகாத குரல்களைக் கண்டனங் களைக் கேட்காதவனாக எடுத்த நல்ல முடிவை மட்டுமே குறிக்கோள் சிதறாமல் ஒரு நோக்காய் முன்னே சென்று உன் விழிகளை விரித்து நடந்து செல். பாதைகளில் உன் விழிகளை விரித்து நடந்து செல். பாதைகள் உனக்காக வழிவிடும். மெல்லெனச் சோர்வுகள் விலகும். எல்லாமே வெளிச்சமாக துல்லியமாகத் தோன்றிட உன்வாழ்க்கைப் பயணமும் அதனோடு உன் இலட்சியங்களும் அற்புதமாக நிறைவேறிக் கொண்டேயிருக்கும்.
சாதனைகள் என்பது செய்ய முடியாதன அல்ல. மனிதன் ஒருவன் அவன் உங்களைப் போல் உள்ளவனே! சாதனை செய்யும் போது நீ மட்டும் விழி பிதுங்கி எனக்கு எதற்கு வீண் வம்பு எனக் கருதலாமா? ஒவ்வொருவனுமே தனக்கேயுரித்தான தான் விரும்பும் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் அவன் வியப்புக் குரிய அற்புத ஆற்றல் மிகு மாமனிதனாகி விடுவான்.
மனிதர்கள் என்றுமே களிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காகவே கலைகளும் இலக்கியங்களும் படைக்கப "பட்டன. இவைகளின் ஆட்சியினாலேயே நாம் எங்கள் துன் பங்களை ஏக்கங்களைத் துறந்தும் மறந்தும் வாழுகின்றோம்.
இசை,நடனம், இலக்கியம் என்கின்ற விஷயங்களின் விற்பன்னர்கள் தங்கள் வெளிப்படுத்துகையினை மக்கள் முன் நிறுத்தும் போது நாங்கள் அடையும் புளகாங்கித உணர்வுகள் எத்துணை அற்புதமானது என்பதையும், இதனால் இதயம் அடையும் தெளிவுகள் அழியா இன்ப நுகர்ச்சியுமன்றோ! மேலும் சகல மதங்களின் சம்பிரதாயச் சடங்குகள் கிரியைகள், விழாக்கள், வைபவங்கள் போன்றவைகளின்
அர்த்தங்கள் எல்லாமே, அற்புதமான சங்கதிகளே!
நாங்கள் மக்களோடு மக்களாக ஐக்கியப்பட்டு இசைவுடன் பேதமற வாழுவதற்காக வாழும் முறைகள் எல்லாமே எங்களாலேயே உருவாக்கப்பட வேண்டியதே சிறப்பாக வாழ்வதுவே அற்புதமான ஒரு கலை தான். அதனை நாங்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும். மனதை வருத்தி அழுத்தி, அழுது வாழ்வது வாழ்வு அல்ல."நீ ஒரு அற்புதமான பிறவி" என்று சொல்வதானது "நீ இனிமையான, புத்திசாலித்தனமான, பிறருக்கு உதவு பவனாக இருக்கின்றாய்" என்கின்ற அர்த்தத்திலேயே அமைய வேண்டும்.
மனதினுள் அதன் ஆழத்தினுள் புதைந்துள்ள அன்பினாயே மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி வெளியே பிரவாகித்தோடும். இந்த அன்பின் வெளிப்பாடுகள் பல சாதனைகளைச் செய்து கொண்டேயிருக்கும்.இந்த அற்புத சக்தியை நாங்களே சிருஷ்டிக்க இயலும். ஏன் முடியாது? அண்பான தம்பதியினரைப் புறத்தாக்கங்கள் பற்றுவதில்லை!
கடந்த கால கசப்பான விஷயங்களை மீட்டு எடுத்து ஆராய்வ குடும்ப வாழ்வில் கசப்புணர்வையே தோற்றுவிக்கும். தகாத விடயங்களை மறந்துவிடுக! ந்ல்லதை மட்டும் நெஞ்சத்தே நிறுத்துக! சந்தோஷங்களையே என்றும் தேடும் தம்பதியினர் துன்பங்களை தேட விழைவது அழகல்ல. குற்றம் பகர்வது தகாது. செய்த தவறுகளை நியாயப்படுத்துவதால் உறவுகள் நலிவுறும். குடும்பச் சண்டையை இரசிப்பவர்களுக்கு இடம் தரவேண்டாம். எத்தகைய புறத்தாக்கங்கள் இடர்கள் சூழ்ந்திடினும் அன்பான தம்பதியினர் அதற்குள் ஆட்படாது, தமக்குள்ள நீங்காத காதலால் வாழ்வில் களிப்பினையே முழுமையாக்கிக் கொள்கின்றார்கள்.
கணவன், மனைவி இருசாராரிடத்தே மிகவும் சிறிய பிரச்சனைகள் கூடப்பூதாகரமாக உருவெடுப்பதன் பிரதான காரணம் இவர்கள் இருவருமே எப்போதோ, நடந்துபோன கசப்பான சங்கதிகளைத் தூசி தட்டிப் புதுமெருகூட்ட எண்ணுதலேயாகும்.
மறக்கவேண்டிய விஷயங்களை மனதிலேயே பூட்டி வைப்பதனால் ஏதுபயன்? மேலும் தகாத விஷயங்களைச் சட்டென மறந்துவிட முடியாது என இவர்கள் தமக்குத்தாமே எண்ணிவிடுவதனால் பிரச்சினைக்குள்ளேயே விருப்புடன், தாமாகவே அமுங்கிவிட எண்ணுகின்றார்கள்.
ஒருவரைக் குற்றம் சொல்வதனால் மட்டும் தமக்குரிய நியாயம் கிட்டிவிடும் என்பதுபோல் தவறான எண்ணம் வேறு என்ன இருக்கின்றது? தனது தரப்பு நியாயங்களை மட்டும் ஏற்குமாறு கணவன், மனைவியை நிர்ப்பந்திப்பதும் அவ்வண்ணமே மனைவியும், தனது நியாயங்களைக் கேட்டேயாக வேண்டும் என அடம் பிடிப்பதும் அவர்களுக்கும் ஆகாத விஷயம் மட்டுமல்ல, அவர்களது செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும் செயல்தான்.
கணவன், மனைவி சந்தோஷமாக இருக்கும் பொழுது பேசப்படும் சீண்டுதல் கதைகளால் சிலசமயம் பெரிய சண்டைகள் மனஸ்தாபம் வந்துவிடுவதுமுண்டு. மேலும் எங்கே கணவன் அல்லது மனைவி ஏதாவது தெரியாத்தனமாக வாய் பிசகாய் சொன்னவற்றையே இவர்கள் ஒரு அஸ்திரமாக எடுத்துத் துரும்பான விஷயத்தைப் பெரிதுபடுத்த எண்ணுதல் லஜ்ஜைக்குரியதாகும். நல்ல விஷயங்களை மட்டும் மனதில் வைத்திருந்து அவைகளை சமயத்தில் பரஸ்பரம் இருசாராரும் தம்மிடையே வெளிப்படுத்துவதால் இவர்களின் காதல் வாழ்க்கை மேலும் மெருகேறும். மனங்களின் கீறல்கள், ரணங்களாக மாற்ற இடமளிக்கலாகாது. பரஸ்பரம் இருசாராரும் நல்வார்த்தை, அன்பு, அரவணைப்பினால் முற்றுமுழுதாகப் புதுமணத் தம்பதிகளாகவே என்றும் வாழ்கையை மாற்றி வாழ்வில்வெண்மை பொலிய வைத்திடல் வேண்டும்.
தங்களைப் பத்துப்பேர் பார்த்துப் பெருமை கொள்ள வேண்டும் என்பதை விடுத்து தன்முனைப்புடன், தங்களது கருத்துக்களையே முன்னிலைப் படுத்த எண்ணுதலால், வாழ்க்கையில் எட்ட வேண்டிய எல்லையை பாதையை விட்டேகிதான்தோன்றித்தனமான, சுயநலமிக்க வாழ்வோடு எப்படித் தொடர்ந்து இருப்பது இயங்குவது?
குடும்பம் என்று வந்துவிட்டால் குடும்பத் தலைவனோ அன்றித் தலைவியோ, அல்லாத, தவறான கொள்கை, நடத்தைகளை ஜீரணித்தேயாக வேண்டும் என்பதில்லை. இருவருமே நட்புறவுடன், கனிந்த காதல் உணர்வுடன் மென்மையாகப் பக்குவமாகத் தங்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து தெளிதல், பெரிய சிரமமும் அல்ல. இதை விடுத்து அதிகார தோரணையுடன் கணவனும், தனது குடும்ப அந்தஸ்து அல்லது பதவி, செல்வத்தை முன் நிறுத்திமனைவியும் எதிர்வாதம் புரிதலும் அடுக்காத செயல்.
இருக்கின்ற காலம் எமக்கு மட்டுமானதுமல்ல. குழந்தைகளுக்குமாக வாழவேண்டும். எனவே பிடிவாதம், எதிர்வாதம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கூடவே கூடாது. அன்பான தம்பதியினர் வாழ்க்கையைப் பாருங்கள்! சந்தோஷங்களை அவர்களாகவே உருவாக்குகின்றார்கள். இவர்களைப் புறத்தாக்கங்கள் ஒன்றும் செய்துவிடமுடியவே ஆராயாது நடந்தேறும் திருமணங்கள்: பாதிப்புக்கள்
அவசரம் அவசரமாக நடந்தேறும் திருமண பந்தம் அரைகுறிை வாழ்க்கையாக முறிந்து போவது அறிவிலித்தனத்தால் நடக்கும் செயல். எப்படியாவது திருமணம் நடந்தால் சரி என எண்ணுவோர், அதன் தாத்பரியத்தைக் கடுகளவும் கருத்தில் கொள்வதில்லை. தங்கள் பெண்ணுக்கு வைத்தியர், பொறியியலாளர் அல்லது கணக்காளர் போன்ற உயர் பதவிகளில் உள்ளவர்களே மணமகனாக வரவேண்டும் எனக் கருதும் பெற்றோர் முதலில் ஒரு நல்ல குணசா மருமகனாக வரவேண்டும் எனக் கருதவேண்டும். பொருத்தமான மணமகள், மணமகனைத் தேடும் விஷயத்தில் எச்சரிக்கையுணர்வு
"சொந்தக்காரன் என்பதால் நாங்கள் எங்கள் பெண்ணை இவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தோம். இவனை நம்பி வெளிநாட்டுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால் நடந்தது என்ன? எங்கள் மகளைத் துரத்தியே
விட்டான்.
அங்கே இவனுக்கு மனைவி பிள்ளைகள் ஏற்கனவே இருப்பது எங்களுக்கு அறவே தெரியவில்லை. இப்போது என்ன செய்வது?
இப்படி அழுது புலம்பும் பெற்றோர் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். சொந்தக்காரப் பையன் என்றால், எதுவுமே விசாரிக்காமல் திருமணம் செய்துவைக்க முடியுமா? மேலும் இனசனம் என்றால், கொஞ்சமாவது பாச சம்பந்தம் இருக்கும் என்று தான் இனசன உறவுகளுக்குள் திருமணம் செய்துவைக்கின்றார்கள்.
ஆயினும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கு உறவுகளின் இன்றியமையாத் தன்மை, அதன் வலு, அன்பு, பாசத்தின் இறுக்கம், அழுத்தம் பற்றிப் புரிவதேயில்லை. இதுபற்றிய பல செய்திகளைப் பெற்றோர் அறிந்த பின்னரும் கூட, உலகம் பற்றியே அறியாமல், அப்பாவிகளான, குழந்தைத் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமது பெண் பிள்ளைகளை விசாரிக்காமலேயே, திருமண பந்தத்தினுள் கட்டியடித்துவிடுகின்றார்கள். ஓர் உண்மைச் சம்பவத்தைக் கூறுகின்றேன். சாவகச்சேரியில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்தது. வெளிநாட்டில் தொழில் பார்க்கும் நெருங்கிய உறவுக்கார பையனைத் தமது மகளுக்குத் திருமணம் பேசி, உடனேயே நிச்சயம் செய்துவிட்டனர். மணமகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். கல்லூரிப் படிப்பிற்கும் முடிவு கட்டப்பட்டது. நல்ல சீதனம். மணமகன் வெளி நாட்டில் வேலை பார்க்கின்றவர் என்பதால் பெற்றோர், உறவினர் மகிழ்ச்சியில் மிதந்தனர்.
திருமணநாள் அன்றே மணமகன் சற்றே சோர்வாக இருந்தான். ஏன் அவ்வாறு உறவினர்கள் கேட்டதற்கு, அவர் ஊர் மாற்றமாகையால் சீதோஷ்ண நிலை சரிப்பட்டு வரவில்லையென மணமகனின் தாயார் கூறிவிட்டார்.
மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டியாயிற்று. மணமகன் சற்று பதற்றத்துடன் காணப்பட்டான். புதிய தம்பதிகள் இருவரையும் அம்மி மிதித்தல், சடங்கிற் காக மண மேடையைச் சுற்றி வருமாறு புரோகிதர் தெரிவித் தார். இருவருமே மணமேடையைச் சுற்றி வரும் போதே, மணமகன் மேலும் தள்ளாடித்தடுமாறினான். எல்லோருமே வியப்புடன் பார்த்துக் கொண்டனர். ஆயினும் திருமண வைபவச் சடங்குளில் பூரண சந்தோஷம் மணமகனிடம் காணப்படவில்லை.
ஏதோ ஒப்பிற்காக சடங்குகளைச் செய்து முடித் தான். எல்லாமே நிறைவுபெற்று முதல்நாள் இரவின்போது தான் மணமகளுக்கு எல்லாமே புரிந்தது. அவன் போதை வஸ்திற்குப் பூரணமான அடிமையானவன் மேலும் புது மனைவியிடம் சொன்ன செய்திகேட்டு அவள் அதிர்ச்சியடைந்து விட்டாள்.
"நான் எனது நாட்டிற்கு உடன் திரும்பிப் போக வேண்டும். எனவே நீ இன்னமும் ஆறு மாதமோ, ஒருவருடமோ” இங்கேயே இரு என்று சொன்னான். இந்த விஷயத்தை அவள் பெற்றோரிடம் சொன்னதும் அவர்கள் அதிர்ந்தே போய்விட்டனர். இனிமேல் என்ன செய்ய முடியும்? அவர்கள் அவனிடம் கெஞ்சிக்கூத்தாடினர். அவன் ஏதோ சொல்லிச் சமாளித்தான். பின்னர், விஸா எடுக்க வேண்டும் எனச் சொல்லி தனியாகவே சென்றவன், அதன் பின்னர் எப்படியோ தனது மனைவியை தான் இருக்கும் இடத்திற்கு அழைத்துவிட்டான். அந்த அப்பாவிப் பெண் கணவனிடம் சென்றபின்னர் நடந்த சம்பவங்கள் தான் மிகவும் கொடியதாகும்.
நித்தியமான போதைவஸ்திற்கு அடிமையான அவன், மனைவியுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வில்லை. மொத்தத்தில் அவன் ஒரு சராசரி மனிதனாகவே நடந்து கொள்ளவில்லை. ஒரு நாள் அவள் திடீரென அங்குள்ள தனது உறவினர்களின் உதவியுடன், சொந்தக் கிராமத்திற்கே பெற்றோரிடம் வந்து சேர்ந்துவிட்டாள். அவளால் இதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?
மேற்கூறப்பட்ட சம்பவத்தில் இருந்து பெற்றோரின் ஆராயாத தன்மை நன்கு புலனாகின்றது. மாப்பிள்ளை என்று ஒருவன் கிடைத்தால் போதும், உடனேயே அவளது எதிர்காலம் பற்றியே சிந்திக்காமல் உடன் முடிவு எடுப்பது எவ்வளவு துன்பகரமானது?
தங்களது பெண்ணுக்கு ஒரு வைத்தியர் அல்லது பொறியியலாளர், கணக்காளர் போன்றோரே மாப்பிள்ளையாக வரவேண்டும் எனக்கருதும் பெற்றோர்கள், முதலில் வரப்போகும் மணமகன் நல்ல குணசாலியானவன் தானா என்பதை பற்றிய பூரணமான தகவல்களைப் பெறுவதில் எத்தனை பெற்றோர் ஈடுபடுகின்றார்கள்? ஏமாளித்தன ங்களாலேயே வாழ்க்கை கேள்விக்குறியாகின்றது.
மேலும் உண்மையான அவர்கள் குடும்பத்தில் அக்கறையுள்ள ஒருவர் "நீங்கள் பார்த்த மாப்பிள்ளை அவ்வளவு சரியானவராகத் தாங்கள் அறிந்தவரை தெரிய வில்லை” எனக் கூறிவிட்டால் போதும் அவர் கூற்றின் உண்மைத் தன்மையினை ஆராயாது தாம், தூம் என்க் குதித்து, அவர்பொறாமை காரணமாக அவ்விதம் கூறி விட்டார் என்று முடிவு எடுத்து விடுகின்றனர்.
இன்று உலகம் முன்பு போல் இல்லை. பெண் இனம் ஏமாளிகளாக இருப்பதில்லை. அவர்களும் நன்றாகப் படித்து நல்ல பதவிகளை வகித்து வருகின்றனர். இப்படியி ருக்கும் போது பெண் என்றால் பேதமையுடன் பேசாம டந்தையாக வாழவேண்டும் என்று எண்ணுவது படு பிற்போக்குத்தனமானது. எதற்கும் எச்சரிக்கையுடன் வாழ வேண்டியதும் தெளிந்த நல்ல முடிவு எடுப்பதும் அனைவரினதும் பாரிய பொறுப்பாகும்.
"இவள்” பகுதி-18-10-2009
எல்லோரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம்!
உங்கள் மீது நீங்கள் நம்பிக்த்திருங்கள் தெரியாத ஆலோசனைகளைக் கேட்பதில் தவறு இல்லை. நல்லவர்கள், துறை சார்ந்த வல்லுனர்கள், அனுபவசாலிகளை அணுகி நல்ல ஆலோசனைகளைப் பெறலாம். துர்மதியாளரிடம் சரணடைய வேண்டாம். சுயபுத்தி, சுயசிந்தனையின்றி எட்படி வாழ்வது? குடும்பு சமாச்சாரங்களைக் கண்டவர்களுடன் பேசி கேலிக்குரிய நபராக மாறவேண்டாம் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீர அவைகளின் யதார்த்த உண்மைகளைப் புரிந்து, உணர்ந்து, பேசினால் தெளிவான நம்பிக்கைவைக்காது, பக்கத்து வீட்டுக் காரர்கள் மற்றும் உற்றார், உறவினர்களிடம் சாதாரண சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ஆலோசனைகளைக் கேட்டு, கஷ்டப்படும் கணவர், மனைவியர் ஏராளம் ஏராளம் இந்த விடயத்தில் முக்கியமாக நோக்கவேண்டியது என்னவெனில் நல்ல படித்த குடும்பஸ்தர்களே, சொந்த
புத்திமேல் நம்பிக்கை கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் யார் யாரிடமோ போய் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
குடும்பங்களிடையே தோன்றும் சின்ன மனக் கசப்புகள் எல்லாமே, வல்லரசுகளிடையே ஏற்படும் மோதல் போலக் கருதுவதுபோல் இவர்கள் செய்கைகள் இருக்கும். சுயபுத்தி, சுயசிந்தனையின்றி எப்படி வாழ்க்கையை ஒட்ட முடியும்?
நாம் காணுகின்ற எல்லோருமே எம்மிடம் அக்கறை உள்ளவர்கள் எனச் சொல்ல முடியுமா? வெளிப்பார்வையில் பாசாங்கு செய்து நல்லது செய்வதுபோல் பேசுவார்கள். ஆனால் செய்கின்ற காரியங்களோ, அடாவடித்தனமாக இருக்கும். இத்தகைய பேர்வழிகளிடம் போய் ஆலோசனை களைக் கேட்கலாமா? -
இவர்களிடம் போய் குடும்ப சமாச்சாரங்களுக்குத் தக்க பரிகாரம் கேட்டால், கேட்கும் நபர்கள் பற்றியே வெளியே கண்டபடி விமர்சனம் வேறுசெய்து திருப்திப் பட்டுக் கொள்வார்கள். கேட்டால் ஒன்றுமே தெரியாது என்பார்கள், அல்லது குடும்பங்களிடம் இதுவெல்லாம் சர்வ சாதாரணம் எனச் சொல்லி தேறும், ஆறுதல், சமாதானம் சொல்பவர்கள் எத்தனைபேருளர்?
இன்றும் ஒரு சாரார் இருக்கின்றார்கள் இவர்கள் உண்மையாகவே அப்பாவிகளாக இருப்பார்கள். இவர்களி டம் போய் யாராவது ஆலோசனைகளைக் கேட்டால், தாங்கள் பெரிதும் தெரிந்தவர்கள் போல் பேசி, சாதாரண விஷயத்தையே தமது அறியாமை காரணமாகத் தவறான அறிவுரை கூறுவதுடன், தம்மிடம் வருவோர் போவோரிடம் மிகவும் பெருமையாகப் "பார்த்தீர்களா. நான் எவ்வளவு பெரியவிஷயங்களை எனது அனுபவஞானமூலம் தெரிந்து வைத்திருக்கின்றேன்,
இன்றைக்கும் கூட எனக்கு வேண்டியவர்கள் என்னிடம் வந்தார்கள், நான்தான் நல்ல புத்திமதிகளைக் கூறி அனுப்பினேன்” என்று கூறியதுமட்டு மன்றி, தம்மிடம் ஆலோசனை கேட்க வந்தவர்கள் பற்றிய சகல அந்தரங்கங்கள், அவர்கள் முகவரி உட்படச் சகல விஷயங்களையுமே விஸ்தாரமாகச் சொல்லிவிடுவார்கள். இவர்கள் வேண்டுமென்றே இப்படிச் சொல்லாது விடினும்கூட, இதன் விளைவுகளோ மிகவும் பாரதூரமாக இருக்கும். எங்களை நோக்கிமிகவும் நல்லவர்களும் இருக்கின் றார்கள் கெட்டவர்களும் இருக்கின்றார்கள். எமது அனுபவம் மூலம்தான் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என உணரமுடியும். ஆயினும் சில சமயம் நாம் எவரையுமே புரிந்துகொள்ளவே முடியாமல் இருக்கின்றது. எங்கள் நலனில் அக்கறையுள்ளவர்களைக் கூட நாம் கண்டு கொள்ளச் சிரமமாகவும் இருக்கலாம். எமது அறிவுக்குப் புலப்படாமலேயே நல்ல நண்பர்கள் மீது தப்பு எனவே நாம் சுய சிந்தனை மூலம் எம்மை அறிவதுடன் எம்மைச் சுற்றி இருப்பவர்களையும் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்க வேண்டும். சதா எல்லோரி டமும் செல்வதும், அவர்கள் பொழுதை எம் பொருட்டு அவர்களுக்கு இடைஞ்சலை அளிப்பதும் தகாத செயல்கள்!
மேலும்,நீங்கள் ஒருவரிடம் சென்று உங்கள் குடும்ப பிரச்சனைகளைச் சொல்லி நல்ல முடிவைச் சொல்லி விடுங்கள் என வற்புறுத்தும்போது, அதனைக் கேட்கும் நபரும் வேறு வழியின்றி ஏதாவது கருத்துக்களை, உளறி விடுவதுமுண்டு.
எனவே, அன்பான நண்பர்கள் யார் எவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். கணவன் தரப்பினர் செய்யும் தவறுகளை அவரது உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுப் பதும் அவ்வண்ணமே, மனைவியின் தவறுகளை அவரது உறவினர்கள் ஏற்க மறுப்பதும் இயல்பே. எனவே, இத்தகைய உறவினர்களிடமும் ஆலோசனைகளைக் கேட்கலாமா?
எல்லா உறவினர்களுமே தவறான கருத்துக்களைச் சொல்வதுமில்லை. எனவே கணவனும், மனைவியும் தாங்களாகவே எந்தவித தன்முனைப்புமின்றி பிரச்சினை களை எப்படியும் தீர்ப்போம் என்கின்ற திடசிந்தையுடன் ஒன்றிணைந்து பேசினால் எத்தகைய இடர்களும் குடும்பத்தில் நிகழப்போவது மில்லை. இது உறுதி. ஒருவர் கருத்தைக் கேட்க ஆர்வம் இருந்து அதனைச் செவிமடுத்தாலே போதும் குடும்பங்களில் ஏது பிரச்சினை?
நல்ல கணவனின் தெரிவுக்கு அவசியமானவை
காதலித்துத் திருமணம் செய்தவர்கள், காலப்போக்கில் தமக்குள் முரண்பட்டுப் பிரிந்து வாழ்வது வேதனை. இளவயதில் காதல் புரியும்போது ஒருவரை ஒருவர் புரியாது திருமணம் செய்வதும், பின்னர் குழந்தைகள் பெற்றபின்னர் விலகி ஓடுவதும் என்ன நியாயம்? மன முதிர்ச்சியற்ற வயதில் இல்வாழ்வில் புகுவது தொல்லைதரும். காதலிப்பதே ஒரு கெளரவம் எனச் சிலர் எண்ணுகின்றார்கள் பெண்கள் தாங்கள் கற்க வேண்டிய வயதில் நிரம்பக் கற்று, சவால் மிக்க உலகில் தம்மைப் பாதுகாத்துக் கம்பீரமாக நடந்து கொள்ள வேண்டும் வாழ்க்கை என்பது ஒரு பரிசோதனைக் களமல்ல உணர்க!
காதல் புனிதமானது, தெய்வீகமானது. இனம், மொழி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அன்புநிலை. ஆயினும் திருமணத்தின் முன்னர் வாலிப வயதில் ஒருவரை ஒருவர் புனிதமான காதல் வாழ்வு என்றும் இனியது. காதல் கொண்டு திருமணம் செய்த பின்பு அந்த வாழ்வு கசந்து வெறுப்பு ஏற்பட்டால் அவர்களது காதல் போலித்தனமான பொய்மையானதே!
காதலித்துத் திருமணம் செய்த எல்லோரதும் வாழ் வும் சுபீட்சமாக இருக்கின்றதா? ஆராயாது உடன் மனம் சலனப்பட்டுத் திருமணம் புரிவதும், இதன் பின்னர் சிலர் வாழும், வாழ்க்கை முறையும், எடுக்கும் கசப்பூட்டும் முடிவுகளும், பலரையும் யோசிக்க வைக்கின்றன.
தேசிய வீடமைப்புத் திணைக்களத்தில் நான் கடமை புரிந்த வேளையில் என்னைச் சந்திக்க வந்த ஒரு அரச அலுவலர் என்னிடம் சொன்ன விஷயம் இது, மேற்படி அலுவலர் எமது திணைக்களத்திடம் வீடு கட்டுவதற்குக் கடன் பெற்று இருந்தார். கடனுக்கான கொடுப் பனவுகளை மாதா மாதம் குறிப்பிட்ட கால எல்லைவரை செலுத்த வேண்டும்.
ஆனால் அவரோ பெற்ற கடனை முழுமையாகச் செலுத்தி, தனக்குரிய வீட்டு உறுதியைப் பெற வந்திருந்தார். நான் அவரிடம் "ஏன் ஐயா, நீங்கள் மிக அவசரமாக முமுப் பணத்தையும் ஒரே நாளில் கட்ட விழைகின்றீர்கள்” என்று கேட்டேன். அப்போது அவர் சொன்ன கதை மிகவும் பரிதாபகரமாக இருந்தது.
எனக்கு மூன்று பிள்ளைகள் மூன்று பேரும் பெண் பிள்ளைகள். மூத்த பெண் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றவள். அவள் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டி ருக்கும்போது, தன்னுடன் கூட கல்விகற்கும் மருத்துவ மாணவரைக் காதலித்தாள். அவள் தனது குடும்ப நிலை, பொருளாதாரம், சகோதரிகளது எதிர்காலம் பற்றிய விடயங் களை பூரணமாக ஒளிவுமறைவின்றி அவரிடம் சொல்லி யிருந்தாள்.
அந்த நேரத்தில், "சே.சே. இதுவெல்லாம் பிரச்ச னையில்லை. எனக்குச் சீதனம் வேண்டவே வேண்டாம்” என்று என் மகளுக்கு வாக்குறுதி கொடுத்ததை அவள் நம்பிவிட்டாள். அதன் பின்னர், அவர்களது மருத்துவப் பட்டப்படிப்பு முடிந்ததும் நாங்கள் திருமணம் பேசி அவர்களது இல்லத்தற்குச் சென்றபோது தான் எமக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தங்கள் மகன் மருத்துவர், எனவே அவருக்குரிய சீதனம் தரவேண்டும். அதில் குறை வைக்கக் கூடாது என அவரின் பெற்றோர் கண்டிப்புடன் கூறிவிட்டனர். அத்துடன் நிற்காது, நாங்கள் இருக்கும் வீட்டையும் உடனே சீதனமாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் திருமணத்தின் முன்னரே அவர்கள் பெயருக்கு எழுதிவிட வேண்டும் என்றார்கள்.
"வீட்டுக்குரிய கடன் மாதா மாதம் செலுத்தவே பல விருைதஷ் சிரமப்படும் நான் என்ன செய்வது? வேறு வழியில்லை. பையன் வீட்டாரின் வற்புறுத்தலின் பிரகாரம் யார், யாரிடமோ கடன் பெற்று இன்று வீட்டை மீட்க உங்கள் திணைக்களத்திற்கு வந்திருக்கின்றேன். தயதுசெய்து வீட்டின் உறுதியை மீட்க உடன் நடவடிக்கை எடுங்கள்” என்று அவர் கேட்டார்.
"அதுசரி அப்போது வரப்போகும் உங்கள் மருமகன் இதுபற்றி என்ன சொன்னார். அத்துடன் உங்கள் மகளும் ஒரு மருத்துவர் அல்லவா? தொழில் அந்தஸ்தில் கூட என்ன குறை"என நான் கேட்டபோது,
"அதை ஏன் தம்பி கேட்கின்றீர்கள். அவர் எதுவுமே பேசவில்லை. ஆனால் எனது மகளிடம் உடன் தரவேண்டிய பணம் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுங்கள், நான் என்ன செய்ய முடியும்” எனச் சொல்லி ஒதுங்கிவிட்டார் என்றார்.
இந்தக் கதை மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. காதலித்த பின்னர் சீதனம் கேட்பது சர்வ சாதாரண விடயமாகிவிட்டது. எமது சமூகத்தில் காதல் திருமணமாகட்டும் அல்லது பெற்றோ ரால் நடாத்திய திருமணமாகட்டு��் சகிப்புத் தன்மையுடன் வாழவேண்டியவர்கள் பெண்கள்தான் என்கின்றார்கள். அவன் தீயவன் எனத் தெரிந்து அவனை மனைவி கை கழுவினாலும் கூட, அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றிக்கவலைப்படாமல், தொடர்ந்து அவளையே சமூகம் கேலி பேசித் திருப்திப்பட்டுக் கொள்ளும். ஆண்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இதுதான் எக்காலத்திலும் நடந்துகொண்டிருக்கின்றது.
எனவே ஒருவன் எப்படிப்பட்டவன் எனத் தெரியா மல், அவனை நம்பிக் காதலிப்பது எவ்வளவு பாதகமானது. திருமணம் ஒரு வியாபாரமல்ல. ஒரு சின்னப் பொருளை வாங்க நூறு கடைகளுக்கு ஏறி இறங்குகின்றோம். அப்படியிருக்க வாழ்க்கையில் முடிவு எடுக்க நிதானம் இழக்க லாமா? நல்ல கணவரைத் தேர்ந்தெடுக்க முன் பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
இன்று காதலைக் கொச்சைப்படுத்துமாற் போல அதனை ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்காகக் கொள் கின்றார்கள். இதுவே உண்மை. படிக்கும் காலத்தில் நண்பர் கள் எல்லோருமே சேர்ந்து சும்மா குஷிப்படுத்துவதற்காக காதலிப்பதில் தப்பு ஏதும் இல்லை என்று சொல்லித் தூண்டிவிடுவார்கள். நல்ல மன முதிர்ச்சியற்றவர்களே நண்பர்களின் பேச்சை நம்பி, காதலிப்பதே ஒரு கெளரவ மான வேலை என நம்பிவிடுகின்றார்கள்.
உண்மையான காதல் மற்றவர்கள் பேச்சைக் கேட்டோ, வற்புறுத்துவதிலேயோ, கிளர்ந்து எழுவதில்லை. ஒருவரை ஒரு நொடிப் பொழுதில் அறிந்துவிட முடியுமா? திரைப்பட தொலைக்காட்சிக் காதல்களைப் பார்த்து - ஏமாறக்கூடாது. ஆண்களைவிட இன்று பெண்களுக்கே குடும்ப பொறுப்பு அதிகமாகவுள்ளது. எந்த விடயத்திலும் ஆராயும் திறனை வளர்க்க வேண்டும்.
எமது சமூகம் பெண்கள் மீது திணிக்கும் முடிவு களில் போதிய நடு நிலமையில்லை இல்லவேயில்லை. பெண்களுடன் கூடிப் பிறந்தவர்கள் கூடப் பெண்களின் நிலை பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாத அவல நிலை.
பெண்கள் அறிவு, உணர்வு சார்ந்த விழிப்பு நிலையில் இருக்கவேண்டும். பருவத்தில் ஏற்படும் கவர்ச்சி, ஈர்ப்புகளில் அவதானமாக இருக்க வேண்டும். ஒருவரது பேச்சு, நடத்தைகளில் நடிப்பு எது நிஜம் எதுவெனக் கண்டறியும் நேரத்தை விடுத்துக், கல்வியில் மட்டும் பெண்பாலார் அதிகூடிய கவனம் செலுத்துதலே, சவால்கள் சூழ்ந்த உலகில், கம்பீரமாக நடந்து கொள்ள வைக்கும் வழியுமாகும்.
கல்விகற்கும் காலத்தில் எந்த ஒருவருமே வேண்டப் படாதவர்கள் அல்லர் கூடப்படிக்கும் நண்பர்களாக ஏற்று சிந்தனையைக் கூர்மையாக்கி துணிந்து சென்றால் சகல ஐஸ்வர்யங்களும் மகளிருக்கு வந்தெய்தும். வாழ்க்கை என்பது ஒரு பரிசோதனைக் களமல்ல. உணர்க!
மாற்றிச் சீராக்குக!
எங்களுடன் நாமே தொடர்ந்து நட்பாக இருக்க முடிவதில்லை பல தடவைகள் எம்முடன் நாம் முரண்பட்டுக் கொள்கின்றோம். அப்படியிருக்கப் பிறருடன் எப்படித் தொடர்ந்து சினேகம் கொள்ள முடியும்? மனம் கண்டபடி ஒடும் மாய வஸ்து. இதனை அடக்கி ஒரே திசையில் திருப்புவதே கடினம். இதயம் சிந்திக்கக் கால அவகாசம் தேவை. எடுத்த எடுப்பில் எவரையும் நிந்தனை செய்யற்க ஒருவரின் மனதைச் சீரழிப்பது ஆன்ம துரோகம். எமக்கு மட்டும் நாம் தேவையானவர்கள் அல்ல, நாம் எல்லோருக்குமே அவசியமானவர்கள். நல்ல மனதுடன் உலகத்திலேயே மிகவும் சிரமமான விஷயம் என்னவெனில், முட்டாள்களுடன் சினேகம் கொள்ளுவது தான். மேலும் எங்களுடன் நாமே தொடர்ந்து நட்பாக இருக்க முடிவதில்லை. இது கூட ரொம்பவும் சிரமமான காரியம் தான்.
எதிலுமே, எப்பொழுதும் தீர்க்கமான நிரந்தரமான மனோ நிலையில் மனிதன் இருப்பதில்லை, ஒவ்வொரு சமயத்திலும் ஒல்வொருவடிவம் எடுக்கின்றான். இதுவே சிறந்தது என ஒன்றை எண்ணி அதன் பின்னே சுற்றுவான். பின்னர் இதனைக் கண்டாலே பிடிக்க வில்லை எனத் தூர விலகி ஓடுவான்.
தன்னையே நம்பாதவன் எங்ங்ணம், பிறரைத் தொடர்ந்து நம்பி வாழ முடியும்? என்றும் தன்னை, தன் எண்ணத்தை வடிவாக வைத்துக்கொள்ளாமல் ஒருபோதும் ஒரு குறிக்கோளை பற்றுதியுடன் வைத்துக்கொள்ள இய லாது.
சினேகம் என்பது மற்றவர்களுடன் மாத்திரமே வைத்துக் கொள்வது அல்ல. எல்லோரும் தங்கள் குடும்பம், நெருங்கிய உறவுக்காரர், நண்பர்களுடன், மட்டும் உறவுமுறை பாராட்டுகின்றார்கள். புதிதாக பார்க்கும் நபர் களை நட்புரீதியாக எல்லோரும் நோக்குகின்றார்களா?
மேலும், தானே தனக்கு நல்ல உறவினராக இருக் கின்றார்களா? இல்லை. தன்னோடு தான் முரண்படுதலே மனிதனின் பிரதானமான பணியாகி விட்டது. கடவுளே என்னை ஏன் படைத்தாய்" என்று படைத் தவனைக் கேட்டு நொந்தும் கொள்கின்றான். வாழ்க்கை பிடிக்காமல் எப்படி வாழ்வது? அதனை நேசிக்காமல் விட்டால் எப்படி நல்ல படி இயங்க முடியும்?
அடுத்தவன் வாழ்வின் மேன்மையை விரும்பி ஏற்கும் போதே எங்கள் வாழ்விலும் செழிப்பு ஆரம்பித்து விடும். பிறரை விரும்பி ஏற்கும் போதே நாம் எங்களையும் விரும்பி ஏற்கும் நல்ல மனிதனாகிவிடுகின்றோம்.
அதே சமயம்,
எங்களை நாம் விரும்பும் மனிதனாகவும் ஆக வேண்டும். என்றும் வெறுப்புடன் சங்கமிக்கும், முரண்பட்ட ஆசாமியாக வாழக் கூடாது. நல்லவற்றை, ஏற்று கெட்ட வற்றை அறவே விலக்கினால், எண்ணங்கள் எங்களை முழு மையான புதுமனிதனாக்கிவிடுகின்றது என்றும் சரியான பாதையை வகுத்து நடப்பவனுக்கு பாதைகள் கரடு முரடு அற்றதாகிவிடுகின்றது.
தென்றல் அடிக்கிறது மெல்லிய குளிர் தேகத்தை வருடுகிறது. நல்ல ரம்யமான காட்சி கண்ணுக்குப் புலனா கின்றது. நல்ல வாசனையுடன் கூட வந்து கொள்ள, எல் லாமே பிரமிப்பூட்டும் விஷயங்கள் கண் முன்னால் நடக்க மனம் மட்டும் சஞ்சலமாக இருந்தால் யாது பயன்?
மனதைச் செதுக்கி அதனை மெருகூட்டி அழகூட் டாமல் விட்டால் புலன்களால், புலனறிவால் எந்தப்பிரயோ சனமும் இல்லை. , வெளியே ஒளிபரவிய உலகம் கூட் இருள் சூழ்ந்த தான நிலையில் தோன்ற இடமளிக்கலாகாது. காட்சி களிலேயே ஐயுறவு கொள்ள வைக்கின்ற சக்தி மூடிய மனசுக்கு உண்டு.
எல்லாவற்றையும் வெறுப்பு உமிழ்வுடன் நோக்கினால் எப்படி ஆரோக்கியமான முறையில் ஜீவிக்க முடியும்? எனக்குச் சாதகமாக இல்லாது விட்டால் அதை வெறுப்பது புத்தியாகுமா?
நாங்கள் எதை, அது எப்படிப்பட்டதேயாகினும் அதுவே சரியென முறையற்ற விதத்தில் சாதிப்பது என்ன நியாயம் இருக்கின்றது? நல்லதை மட்டும் எற்கும் மனப் பக்குவத்தை எம் உள்ளத்தில் விதைப்போமாக!
விரைவாக உருவாக்குகின்ற எமது முடிவுகளால் இதயத்துக்கு சிந்திக்கும் வேலைகள் இல்லாமல் போய் விட்டது. இன்று சிலர் சிந்திக்காமல் பேசுவது, கருத்துக்களை விவஸ்தையின்றி வெளிவிடுவதால் அவர் மட்டும் இதனால் பாதிப்படைந்து விடுவதில்லை. கூட இருக்கும் அப்பாவிச் சனங்களின் நெஞ்சங்களையே குட்டையாக்கிக்கத்தரித்தே விடுகின்றார்கள்.
ஒருவரின் மனதைச் சீரழிப்பது சாதாரண விடயம் அல்ல. விஷமத்தனமானது. மனம் கழிவுகள் சேரும் இடம ல்ல, நல்ல சிந்தனைகள் உருவாகும் "புண்ணியஸ்தலம்" அதனைப் பவித்திரமாகப் பேணுவது பாதுகாப்பது எமது எங்கள் பொழுதுகளில் அதிகமானவை , பயனு ள்ளதாக கழிகின்றதா? எது எதற்கோ நேரங்களைச் செல விடுகின்றவர்கள், சற்றும் பொறுமையாக பெரிய வர்கள் சொல்லுவதைக் கேட்கப் பிரியப்படுவதில்லை.
இமைப் பொழுதில் கூட நல்ல நல்ல செய்திகள் எமது செவியை விட்டுப் புறப்பட்டு விடலாம். அந்த ஒரு வினாடிப் பொழுதினால் இதயத்தை மூடுவது எவ்வளவு துரதிஷ்டமானது தெரியுமா? புலன்கள் நல்லதை ரசிக்கும் போது, அவைகளை மூடி விட வேண்டாம்.!
அதிஷ்டத்தை ஆர்வமுடன் எதிர்பார்ப்பவர்கள், சாதாரண அவதிக்கே பயப்படும் மனத்தைரியமற்ற நபர்களாகக், கைக்கு எட்டிய தூரம் வரும் போது தான் தூங்கிப்போகின்றார்கள்.
மனத்தை வசப்படுத்த முனையும்போது சலனங்க ளுடன் கை கோர்க்கலாமா? இயற்கை ஒழுங்காக இயங்கும் போது மனிதன் மட்டும் தேவையற்ற விதத்தில் மனசை வளைக்கின்றான்.
எமது செயலுக்கு, என்ன எதிர் விளைவு வரலாம் என்பதை புரிந்து கொள்ள பல தடவைகள் விழுந்து எழ வேண்டியுள்ளது. பலருக்கும் சொல்லித் தெரிவதைவிட அனுபவங்களினால் பெறப்படும் அடிகள் வலுவான வெற்றி களை உருவாக்கும். எனினும், வேண்டுமென்றே பரிசோதனை முயற்சியில் காலத் தையும், செல்வத்தையும், பணயமாக வைப்பது எவ்விதத் திலும் சரியானது அல்ல. மூளைக்குச் சிரமமான காரியம் என முட்டாள்தனங்களை கையாளக் கூடாது.
"வெற்றிகள்" கம்பீரமான சிங்கம் போலக் காணப் படும். எனினும் மனம் இதனைத் தக்க முறையில் நேரிய வழியில் காப்பாற்ற வேண்டும். அடக்க முடியாத தவறான எண்ணங்கள், கிடைத்ததை நழுவி விடச் செய்து விடும் உணர்க. என்றும் சீரான மனோநிலையே வாழ்வை சுலபமானதாக்கும் மனம் உள்ளவன் மனிதன். தன்னை நல்ல வழியில் இனம் காட்டுவதே முறைமை. அறிக
தினகரன் வார மஞ்சரி
10,042011
உறவுகளை உதறக் கூடாது
எமது குடும்ப உறவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உலகுடனான உறவிற்கும் அங்கீகாரம் வழங்குகமற்றவன் அன்பைப் புரிந்து கொள்ளாத வாழ்வில் சிறப்பு என்பதேது? ஒட்டாத வாழ்வு மனத்தை வெட்டிக் கூறுபோட்டுவிடும். தனிமை வாழ்வு தேகத்தை, உயிரைச் சுட்டெரிப்பதைப் போன்றது. கோடிகள் இருந்தாலும் கூட இருப்ப வர்களுடன் கூடி சிரித்து உறவாடுவது போல் சந்தோஷம் கிடைத் திடுமோ? உறவுகள் உதறக் கூடியவைகள் அல்ல. இறுகப் பற்றி அன்பை உற்பத்தி செய்யக்கூடியவை.
தங்களது குடும்ப உறவுகளே உறுதியானது, ஏனையவர்களுடனான உறவுகள் வேறானது என ஒரு வட்டத்தினுள் வாழ்பவர்கள் தமது எதிர் காலம் பற்றி உணருவதே இல்லை. “எனக்கு இந்த நகரம் பூராவும் இனம் சனம் இருக்கிறது" ஆனால் நான் ஒருவரையும் அண்டுவது கிடையாது. பெரிய கரைச்சல். ஊரில் கோயில்களிலும் கணிசமான உரிமை இருக்கிறது. திருவிழாக்காலங்களில் போய் வருவேன். ஆனால் இங்கே மட்டும் பெரிதாக நான் எவருடனும் பேசுவதில்லை. நான் உண்டு கூட எனது மனைவியுண்டு.
” இவர் மேலும் சொன்னார் இப்படி "இருவருமே அடிக்கடி பிள்ளைகளிடம் சென்று வருவோம். எங்களுக்கு எல்லா நாடுகளுமே தெரியும். ஓய்வூதியம் எனக்கு வருகின்றது. காசுப் பிரச்சனைகளே இல்லை. இதனால் இந்த அமைதியை நான் விரும்பு கிறேன். எனக்கு இன, சன உறவுகள் எதற்கு" என்றார். கணவன் மனைவி, பிள்ளைகள் இவர்கள் மட்டுமே தனி உலகமாக எப்படி வாழ முடியும்?
ஒருவர் நல்லநிலையில் இருந்தால்,மற்றவர்களின் உறவு, தயவு தேவையில்லையா? அன்புடன் எல்லோரையும் நோக்காமல், அரவணைக்காமல் வாழ்வதுதான் எப்படிச் சாத்தியமாகும்?
ஒரு சிலர் கடந்த கால அனுபவங்களை மறந்தே செயற்படுகிறார்கள். இளமைக் காலத்திலே வறுமையுடன் அல்லாடியதை அவர்கள் மறந்து போய் விடுகின்றார்கள். தங்கள் குடும்பம் வறுமையுடன் வாழ்ந்து படிப்படியாக சகல துறைகளிலும் முன்னேறியதும், பின்னர் அதனை அடியோடு மறந்து, தற்போதைய நிலையே சாஸ்வதம், எனவே எவர் தயவும் தேவையில்லை எனக்கருதுவது, வரண்டு போன உலர்ந்து போலிக் கெளரவத்தையே காட்டுகின்றது. போலித்தனங்களை உலகம் எற்றுக் கொள்வதுமில்லை.
நாம் என்ன தான் சுய முயற்சியுடன் உழைத்து முன்னேறினாலும் ஒரு சமுக உறவின் பக்க பலம், அல்லது தார்மீக ஒத்துழைப்பு இன்றி நல்ல நிலைக்கு வந்து விட முடியுமா? சுற்றி இருப்பவர்களை ஏற்றுக்கொள்வதே சிறப்பு.
குடும்ப உறவை வலிவுறுத்தி அன்புடன் தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் சமூகப் பிணை ப்பின் அவசியத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
"நீ மட்டும் உனது பாட்டைப் பார். யாரிடமும் சினேகம் வேண்டாம். அவர்கள் உன்னிடமிருந்து எதை யாவது கேட்டு அபகரிக்கத்தான் வருவார்கள். எப்போதும் நீ உன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்” என்று சொல்லிச் - சொல்லியே வளர்க்கும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சுய நலம் என்பதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இவர்கள் இருப்பது வருந்தத்தக்கது. பொது நலத்தைப் பாதிக்காது தன்னை ஸ்திரப்படுத்தும் சுயநலத்தில் தப்பு இல்லை.
குடும்ப வாரிசாக ஒரே ஒரு பிள்ளையை பெற்ற பெற்றோர் இவ்வாறு சொல்லி வளர்த்தால் அவன் எதிர் காலம் என்னாவாது? எனக்குத் தெரிந்த பல பிள்ளைகள் கட்டுப்பாடு என்ற பெயரில் பெற்றோரால் , சுயநல உணர்வோடு வளர்க்கப்பட்டார்கள். பின்னர் அவர்களின் நிலையறிந்து கவலைப் படத்தான் முடிந்தது.
அண்மையில் எனது நண்பர் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தார். எமது உறவினர், நண்பர்கள் பற்றி விசாரித்த போது, அவர் சொன்ன விஷயங்கள் அதிர்ச் சியும், கவலையும் தந்தன. அவர் சொன்ன தகவல்கள் ജൂങ്ങഖ!
இளமைக் காலத்தில் தங்கள், பிள்ளைகளே மிகவும் உயர்ந்தவர்கள், ஏழ்மையுடன் வாழ்ந்தவர்களின் பிள்ளைகளை "பரதேசிகள்” என ஏளனம் செய்து, சமூகத்தினருடன் ஒட்டி உறவாடச் செய்யாதோரின் வாரிசுகள்
அங்கே, திடீர் சுதந்திரம் பெற்றவர்கள் போல் நடந்து கொள்கின்றார்கள். சொந்தக் குடும்பத்துடனேயே பாசமாக நடப்பதில்லை. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் கள். ஆனால் எல்லோரையும் அப்படிச் சொல்ல முடியாது.
ஆயினும் சின்ன வயதில் சுமுகமாகப் பிறருடன் பழகாமல், தனித்தீவாக இருந்தவர்களில் சிலர் இன்னமும் தங்கள் மூடிய திரையில் வெளிவர இயலாது திணறுகி ன்றார்கள். இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் இவர்களைத் தங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ள ஏனையவர்கள் தயங்குகின்றார்கள். "அவரா. அவர் ஒருமாதிரி, ஒருவரை யும் மதிக்கவும் மாட்டார், இவர்கள் வீட்டில் திருமணம் செய்வதே ஆபத்தானது"
மேலே சொன்ன விடயங்கள் சிந்திக்கத் தூண்டு பவை, நீங்கள் மற்றவரை நோக்கிச் சென்றால் தான் அவர் கள் உங்களை நோக்கிவருவார்கள்.
மமதை இருந்தால் அன்பு வருமா? உறவுகள் இன்றி நிறைவுபெறுவோமா? அரவணைக்காது விட்டால் சமூகத் தில் பெருமை ஏது கிட்டும்? உறவுகளைப் பாரமாக எண் ணிக் கூடி வாழாத இவர்களை சமூகம் தூர எறிந்து விடும். தனிமையுடன் வாழும் தவிப்பு தேகத்தையும் ஆன்மாவை யும் அவிப்பதை போன்றது.
எவ்வளவு தான் படித்துப் பட்டம் பெற்றுப், பதவி களை, அந்தஸ்தைப் பெற்று வாழ்ந்தாலும் ஊரில் உள்ள வரன் எம்மவர்கள், எம்மைக் காணுமிடத்து," என்னடா செய்கிறாய், சந்தோஷமாக இருக்கின்றாயா? என்று உரிமையுடன் பேசிப், பழையதை கூறிக் கேலி, கிண்டல் செய்யும்போது ஏற்படும் சந்தோஷங்களுக்கு எல்லை என்பதேது?
முதியவர்களுடனும் தங்களோடு இணைந்தவர்களான குழந்தைகள், மற்றும், மகளிர்கள், இளைஞர்கள் என தங்கள் உறவுகளுடன் உறவாடுகையில். எல்லோருமே சின்னப்பிள்ளைகளாகின்றானர். இதுகுளிர்ந்த மெல்லிய மழைத்தூறலில் எல்லோருடனும் சேர்ந்து தம்மை மறந்து குதித்துக்குதித்து ஆடும் சுகம் போன்றது. பிரிந்து தனித்து ஆணவத்துடன் வாழ்ந்தால் கிட்டுமா இது சொல்லுங்கள்! உறவுகளே நிறைவு!
ஆலயங்களாக வேண்டும்
(வழிபாடுகள் செய்யும் ஆலயங்கள் மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியமானதோ, அவ்வாறே வாழ்விடமான இல்லங்களும் புனிதாமாகப் பேணப்பட வேண்டிய ஒன்றாகும். பலர் இணைந்து வாழும் இல்லம் இறைவன் விரும்பும் வதிவிடம் தான். சின்ன வயதிலிருந்தே எமது பழக்க வழக்கம், ஒழுக்கம், பண்பாடுகள் இங்கிருந்து தான் உற்பத்தியாகின்றன. எல்லோருமே தத்தமது வீடுகளை, சுற்றுப்புறங்களை தூய்மை நிறைந்ததாக ஆக்கினால் இவர்கள் இருப்பிடம் இறைவன் கருவுறை போல் நிறைந்து ஒளியூட்டும். இல்லங்கள் எல்லாமே அறப்பணியாற்றும் இடங்களாக மிளிர்ந்தால், அவைகள் எல்லாமே. ஆலயங்கள் போல் தூய்மை
Lôäč25Iú ஆன்மாவிற்கு அமைதியூட்டும்.
ஆலயங்கள் எங்கள் வாழ்வோடு இணைந்துநின்று எமக்கு நிம்மதியைத் தருகின்றன. ஒவ்வொருவருக்கும். தங்கள் சார்ந்த மதங்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் இன்றி யமையாதனவாகும். எங்கள் ஆன்மாவிற்கு அமைதியையும், அதனால், நல்லனயாவும் இனிதே நிகழ்ந்து விடும் என எண்ணியே செல்கின்றோம். ஆலயங்களின் புனிதத் தன்மையினை உணர்ந்து அங்கு மக்கள் சென்று வழிபாடு செய்யும் அதே வேளை, நோக்கம் புரியாது ஆன்ம துரோகம் செய்யும் ஆத்மாக்களை என்னவென்பது?
வழிபாடு செய்யும் கோயில்கள் மனிதர்களுக்கு எவ்வளவு புனிதமானதோ, அவ்வாறே எமது வாழ்விடமாகிய இல்லங்களும் புனிதமாகப் பேணப்பட வேண்டிய ஒன்றாகும். "காயமே கோயில்” எனப்படும் போது, பலர் இணைந்த நல்ல இல்லம் இறைவன் விரும்பும் வதிவிடம் தான்.
தனி ஒரு மனிதனின் பண்பு, அவன் வாழும் வீடுகளில் இருந்தே பிறக்கிறது."தொட்டிலில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பார்கள். சின்ன வயதில் எமதுபழக்க வழக்கம், ஒழுக்கம் ஆகியன இங்கிருந்து தான் உற்பத்தி யாகின்றன.
எனவே எம்முடன் கூட இருக்கின்றவர்கள், தங் களை நல்ல முறையில் வளப்படுத்தாமல் தான் தோன்றித் தனமாக வாழக் கூடாது. தமக்கு சார்பாகவே சட்டங்கள் இயற்ற முடியாது.
எமக்குப் பின்னால் எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை அறிந்துகொள்ள புத்தம் புதிய வார்ப் புக்கள் எங்களை நாடி நிற்கின்றன. நீங்கள் சொல்வதை. இன்று செய்து கொண்டிருப்பவைகளையே அவர்கள் மிக உன்னிப்பாகக் கவனித்த வண்ணமுள்ளனர்.
எங்களையே நம்பி எங்கள் சொற்களையே தினம், தினம் செவிமடுக்கும் இந்த புது மலர்களுக்கு இயல் பாகவே உள்ள அழகு, வாசனைகளைப் பெரியவர்கள் களங்கப்படுத்தலாகாது.
அவர்களுக்கு நல்ல காட்சிகளையே காட்சிப்படுத் துங்கள். நல்ல சொற்களை, நயம் மிகு கருத்துக்களை மட்டுமே ஊட்டுதல் எமது கடமை. வெள்ளை உள்ளங் களுக்கு வெளிச்சமூட்டுதல் எமது பணி
ஆன்மாவை வயப்படுத்தி, இறைவனோடு ஐக்கியப் படுத்துகின்ற இடமாகக் கோயிலை நாம் கருதுகின்றோம். ஆனால் வீடு தான் எமது ஆரம்ப பல்கலைக்கழகமாக, இளம் வயதிலேயே நல்ல செயற்திறனைக் கூர்மையாக்கு வதற்கும் மிகவும் பழக்கப்படும் இடமாகவுள்ளது.
எனவே பரந்த உலகை அறிய எமது சின்னங் சிறிய வீடு, புது உலகை கிருஷ்டிக்க உதவும் ஒரு "கேந்திர நிலையம்” என்றால் அது மிகையல்ல. தாய், தந்தையர் எனும் ஆசான்களே முதன்மைக் குருவாக விளங்குகின்றனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்திமுதலிடம் கொடுத்து முதன்மைப்படுத்திய முன்னோர்கள், எமது குருவுக்கு முன்னோடிகளாகத் தாய், தந்தையை வைத்துக் கெளரவப்படுத்தினர்.
உலகைக் காட்டிய முதல் ஆசான்கள் பெற்றேர்கள் தான். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமது அருஞ் செல்வங்கள் தவழும் இடத்தைப் புனிதமாகப் பேண வேண்டியது ஒரு மாபெரும் பொறுப்பாகும்.
நற்பிரஜைகளை உருவாக்குதலே மாபெரும் தவம், கோயிலுக்குச் சென்று வேண்டுதல்கள் செய்கின்றோம் எமக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கடவுளிடம் உரிமையுடன் எதை எதையோ கேட்ட வண்ணம் இருக்கின்றோம்.
எல்லோரும் தத்தமது வீடுகளில் மட்டுமின்றிச் தங்களைச் சூழ்ந்துள்ள சூழல்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்களின் நலன்களில் அக்கறை கொண்டாலே, அவர்கள் "இருப்பிடம்” இறைவன் "கருவறை" போல் நிறைந்த ஒளியூட்டி நிற்கும்.
நல்ல முறையில் வாழ்ந்து காட்டாதவர்களால், எப்படி நற்பிரஜைகளை உருவாக்க முடியம்? சில பெற் றோர்களைப்பார்க்கும்போது, அவர்களிடம் இருந்து விலகி வாழ்வதே, பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உகந்தது போல் தோன்றுகின்றது. இயல்பாகவே நற் குணமுடைய பிள்ளைகளை பெற்றோரில் சிலர் தவறான வழியில் கொண்டு செல் கின்றனர். வசதிவாய்ப்புகள் உள்ள பலர், தமது பிள்ளைகள் மிக எளிமையாக வாழ அனுமதிப்பதில்லை.
மேலும், பிறருடன் பிள்ளைகளை சகஜமாக பழக விடுவதில்லை. மேலாதிக்க உணர்வினையூட்டுவார்கள். எளிமையானவர்களை, இழிந்தவர்கள், தங்களிலும் அந்தஸ்து குறைந்தவர்கள் எனச் சொல்லிச் சொல்லியே வளர்ப்பார்கள்.
பரந்த மனப்பான்மையுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டியது பெற்றோரின் நற்பண்பாக அமைதல் வேண் டும். தெய்வபக்தி, பெரியோர்களிடம் பணிவாகப்பழகுதல், இன்சொல் போன்ற நற்பழக்கங்களை பக்குவமாகக் சொல்லிகொடுக்க வேண்டும்.
கோயில்களில் அடியார்களுக்கு பிரசாதம், உணவு அளித்தல் போன்ற தர்ம காரியங்கள் நடப்பது நாம் அறிந்த ஒன்றேயாம். ஈகை, எளியோர்க்கு உதவுதல்களை எம் முன்னோர்கள் ஆலயங்களினுடாக செய்தனர் இப்பணி இல்லங்களிலும் செய்யப்படல் வேண்டும்.
இத்தகைய அறப்பணிகளைச் செய்வதால் உண்டாகும் திருப்தி எல்லையற்றது. ஏழைகளுக்கு உணவளித்தல் அவர்களின் கல்விப் பணிக்காக, இல்லறத்தார், தங்களால் இயன்றளவு உதவுதலால், சமூகப்பணிகளைக் கூட தாம் வாழுகின்ற மனைகள் மூலம் செய்வதனால் இவை ஆலயப்பணி போல் சாலச் சிறந்ததல்லவோ!
வீணான ஆடம்பரங்களுக்கும், பகட்டான வாழ்க்கை முறையிலும் அமிழ்ந்து விடாது செய் கருமங்களை நேரிய வழியில் செய்தால் அதுவே இறைபணியாகி விடும். இப் பொழுதினில் செய்வதே மேல், அடுத்து வரும் காலத் திற்காக ஒத்தி வைக்கும் செயல் வீண்.
இந்த உலகில் ஒருவருமே தமக்கு எவருமே இல்லை என்ற உணர்வில் வாழக் கூடாது. "அதோ இந்த வீடு உள்ளது இவர்கள் எமக்கு ஆறுதல் அளிப்பார்கள்" எனுமாறு நம்பிக்கை ஊட்டுக. புனிதமாக்குக! எல்லோரது இல்லங்களுமே அனைவருக்கும் ஆதரவு நல்குவதாக இருப் பின் அங்குள்ள அங்கத்தவர்களுக்கும் கடவுள் பேராதரவு வழங்கியபடி இருப்பார். உங்கள் இல்லம் கோயிலாகிவிடும்.